சாவு வீட்டில், காசு திருடும் மீடியாக்கள் !
சாராய வியாபாரிகள், லாட்டரி வியாபாரிகள், கனிமவள கொள்ளையர்கள், கல்வி வியாபாரிகள், அரசியல் தரகர்கள் கைகளில் வலிமை வாய்ந்த மீடியாக்கள் சென்று விட்ட பிறகு அதனிடம் எந்த நேர்மையையும், நியாயத்தையும் எதிர்பார்க்க முடியாது.
மக்களுக்கு நல்லதைச் சொல்லி, நல்ல விஷயங்களின் பக்கம் அவர்களை திருப்பிய காலம் போய், மக்களின் மூளைக்குள் சென்று அமர்ந்து கொண்டு, பணம் கொடுப்பவர்கள் யாரோ அவர்களை நோக்கி மக்களை திருப்புகிற வேலையை மீடியாக்கள் போட்டிபோட்டு சிறப்பாக செய்து கொண்டிருக்கிறது.
சமீப காலமாக மரணிக்கும் சினிமா நட்சத்திரங்களின் வீடுகளுக்குள் புகுந்து, அங்கு நடக்கிற ஒவ்வொரு விஷயத்தையும் படம் பிடித்து, காசாக்குகிற ஈனபுத்தி அரங்கேறி வருகிறது.

பாரதிராஜாவின் மகன் மனோஜ் மரணம் அடைந்தபோது பாரதிராஜா எப்படி அழுகிறார், அவரது மனைவி எப்படி அழுகிறார் என்று ஆடியோவோடு பதிவு செய்து அதை திரும்ப திரும்ப ஒளிபரப்பியது, எத்தனை பெரிய அவதூறான செயல்.
இவர்களை விட, சாவு வீட்டுக்குள் புகுந்து ஒப்பாரி வைத்துக் கொண்டே பண்ட, பாத்திரம் திருடும் நாலாந்தர திருடர்கள் எவ்வளவோ மேல். அவர்கள் பொருளைத்தான் திருடுகிறார்கள், இவர்கள் உணர்வுகளை அல்லவா திருடுகிறார்கள்.
சுடுகாட்டில் எரியும் பிணத்தின் கழுத்தில், கையில் கிடக்கும் மிச்ச மிருக்கிற பித்தளை, செம்பு, வெள்ளி நகையை எடுத்து பாக்கெட்டிற்குள் போட்டுக் கொள்ளும் வெட்டியானின் வேலையை விட இது கேவலமல்லவா?.
நாளை உடலை எப்படி குளிப்பாட்டுகிறார்கள் என்பதை காட்டி. ‘நடிகையின் தொடையில் ஒரு ரூபாய் அளவிற்கான மச்சம்’ என தலைப்பிட்டு வீடியோக்கள் ஒளிபரப்பாகலாம்.
சில வருடங்களுக்கு முன்பு முன்னணி நடிகை ஒருவர் மரணம் அடைந்தபோது சுடுகாட்டில் அவர் பிணம் புதைக்கப்படும்வரை ஒரு முன்னணி மீடியா கிரேனில் கேமரா வைத்து நேரடி ஒளிபரப்பு செய்த கொடூரத்தை பார்த்தோம். எனவே இதுவும் சாத்தியமே.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
இப்படியான நிகழ்வுக்கு பிறகு சினிமா சங்கங்கள் ‘இது அசிங்கம், அநாகரீகம், என்று அறிக்கை விடும். பின்னர் எந்த மீடியாவையும் பகைத்துக் கொள்ள விரும்பாமல் அமைதி காத்து, அடுத்த மரண வீட்டின் வாசலில் நின்று இரங்கல் பேட்டி கொடுக்கும். இதுதான் காலங்காலமாக நடந்து வருகிறது.
சினிமா, சங்கம், அறிக்கை இதெல்லாம் வேலைக்கு ஆகாது.
ஒரு திரை பிரபலம் மரணம் அடைந்தால் கிராமத்தில் கூலிக்கு ஒப்பாரி வைக்க பெண்களை அழைத்து வருவதுபோல், மீடியாக்களை துடைப்பத்தால் விரட்டி அடிக்க பெண்களை அழைத்து வந்தால் மட்டுமே இது சாத்தியம்.
— முகமது மீரான் – மூத்த பத்திரிகையாளர்.