“எனது சொந்தக் கதை, நொந்த கதை தான் ‘ஆகாயம்’
‘டெல்டா டாக்கீஸ்’ ஜெயச்சந்திரன் , கார்த்திகா தேவி தயாரித்திருக்கும் படம் ‘ஆகாயம்’. முப்பது ஆண்டுகளுக்கு முன்பு முரளி, சுவலட்சுமி இணைந்து நடித்த ‘தினந்தோறும்’ என்ற படத்தை டைரக்ட் பண்ணி கோலிவுட்டில் நம்பிக்கைக்குரிய டைரக்டராக ‘ஷைன்’ பண்ணியவர் நாகராஜ். இவரின் கதை சொல்லும் பாணி, அப்போது வந்து கொண்டிருந்த இளம் இயக்குனர்களை ஆச்சர்யப்படுத்தியது. ‘தினந்தோறும்’ படம் வசூல் ரீதியாக சுமார் தான் என்றாலும் விமர்சன ரீதியாக ஓஹோவென பாராட்டப்பட்டது.
இதற்கடுத்து அதே முரளி-சுவலட்சுமி கூட்டணியில் ‘ஆகாயம்’ என்ற படத்திற்கு சென்னை பிரசாத் ஸ்டுடியோவில் பிரம்மாண்டமாக பூஜை போடப்பட்டு, பத்து நாட்கள் ஷூட்டிங்கும் நடந்தது. அதன் பின் டைரக்டர் நாகராஜின் குடிப்பழக்கத்தால் அவரது பேர் ‘டல்’லாகி படமும் டிராப் ஆனது. இடையிடையே சில படங்களில் நடித்தும் ‘காக்க காக்க’, ‘மின்னலே’ படங்களும் வசனம் எழுதியும் வந்த நாகராஜ், முற்றிலும் குடிக்கு அடிமையாகி, வாய்ப்புகளை இழந்து தடுமாறினார், தவித்தார். குடும்ப உறவுகள் இவரைவிட்டு விலகின. ஒருகட்டத்தில் நிலைமை கைமீறிப்போனதும் குடி நோய்க்கு சிகிச்சை எடுத்து புத்துணர்வுடன் திரும்பி வந்தார் தினந்தோறும் நாகராஜ். அதற்குள் இருபத்தைந்து ஆண்டுகள் ஓடிவிட்டன.
மீண்டும் மீண்டு வந்த நாகராஜ் தான் இப்போது அதே ‘ஆகாயம்’ என்ற டைட்டிலுடன் இளம் ஹீரோ ஸ்ரீராம் கார்த்திக்கை வைத்து ஆரம்பித்து வெற்றிகரமாக படத்தையும் முடித்து ரிலீஸ் வரை கொண்டு வந்துள்ளார். இதில் ஹீரோயினாக ஆலிஷா மிராணி என்பவர் அறிமுகமாகிறார். சீனியர் நடிகை கனிகா, ஷீலா, நடிகர்கள் சந்தானபாரதி, ஜெயப்பிரகாஷ் உட்பட பலர் நடித்துள்ளனர். பி.ஆர்.ஓ. : புவன் செல்வராஜ்.
விரைவில் ரிலீசாகும் இந்த ‘ஆகாயம்’ படத்தின் பாடல்கள் & டிரெய்லர் வெளியீட்டு விழா, சென்னையில் இருநாட்களுக்கு முன்பு நடந்தது. இதில் சிறப்பு விருந்தினர்களாக டைரக்டர்கள் சேரன், ஆர்.வி.உதயகுமார், சற்குணம், பாலசேகரன், சசி, ஒபிலி கிருஷ்ணா, பேரரசு, அஜயன் பாலா, நடிகரும் யூடியூபருமான சித்ரா லட்சுமணன், என பலரும் கலந்து கொண்டனர்.
“எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் ஒரு நொடியில் மாற்றக் கூடிய சக்தி மீடியாக்களுக்கு உண்டு. அந்த மீடியாக்களை நம்பி எங்களின் முதல் தயாரிப்பான ஆகாயத்தை வெளியிடுகிறோம். ஆதரவு கொடுங்க, வாழ்த்துங்க” என சுருக்கமாகப் பேசினார் தயாரிப்பாளர் ஜெயச்சந்திரன்.
சிறப்பு விருந்தினர்கள் அனைவருமே நாகராஜின் கதை சொல்லும் ஆற்றலையும் சீன்களை டெவலப் பண்ணும் திறமையையும் புகழ்ந்து பேசியதுடன், குடிப்பழக்கத்திலிருந்து மீண்டு வந்து நம்பிக்கையுடன் ஆகாயத்தைத் தந்திருக்கிறார் என்பதை குறிப்பிட்டுப் பேசினார்கள்.

டைரக்டர் நாகராஜ், “மீண்டும் இந்த இடத்தில் என்னை நிற்க வைத்த தயாரிப்பாளர்கள் ஜெயச்சந்திரன் சாருக்கும் கார்த்திகா மேடத்திற்கும் நான் நன்றிக்கடன்பட்டுள்ளேன். என் மீது அவர்கள் வைத்த நம்பிக்கையைக் காப்பாற்றியிருக்கேன் என நம்புகிறேன். என்னைப் போல வாழ்க்கையில் குடிக்கு அடிமையாகி, மீண்டு வர நினைப்பவர்கள் சினிமாவில் மட்டுமல்ல, எல்லாத்துறைகளிலும் இருக்கிறார்கள். குடித்தால் வியாதி வரும், கடன் வரும், போலீஸ் வரும், பிரச்சனை வரும், குடும்பம் உடையும். இது எனது சொந்த வாழ்க்கைக் கதை, நான் நொந்த கதை. அதனால் குடி உள்ளே வந்தால், குடும்பம் வெளியே போகும் என வசனம் வைத்துள்ளேன். என்னால் குடியிலிருந்து மீண்டு வர முடிந்தது என்றால், இதைப் போல உள்ள பலராலும் முடியும்.
இந்தப் படத்தில் குடியைப் பற்றி பேசுவது பிரச்சாரமாக இருக்காது. அழகான காதல் கதைக்குள், வாழ்க்கைக்கு பயனுள்ள விஷயமாகத் தான் குடி மேட்டர் இருக்கும்” என்றார்.
— ஆண்டவர்






Comments are closed, but trackbacks and pingbacks are open.