‘நிறம் மாறும் உலகில்’ மாறாதது எது?
சிக்னேச்சர் புரொடக்ஸன்ஸ் & ஜி.எஸ் . சினிமா இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் தயாராகி வரும் மார்ச் -07ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது ‘நிறம் மாறும் உலகில்’. இதை முன்னிட்டு படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா பிப்ரவரி 19- ஆம் தேதி இரவு சென்னை கமலா தியேட்டரில் சிறப்பாக நடைபெற்றது.
அறிமுக இயக்குநர் பிரிட்டோ J B இயக்கியுள்ள இப்படத்தில் ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா, நட்டி நட்ராஜ், ரியோ ராஜ், சாண்டி மாஸ்டர், விஜி சந்திரசேகர், லவ்லின் சந்திரசேகர், நிவாஸ் ஆதித்தன், சல்மா, சுரேஷ் மேனன், ‘ஆடுகளம்’ நரேன், மைம் கோபி, வடிவுக்கரசி, விக்னேஷ் காந்த், ரிஷி காந்த், கனிகா, ஆதிரா , காவ்யா அறிவுமணி, துளசி, ஐரா கிருஷ்ணன், லிசி ஆண்டனி, நமோ நாராயணன், சுரேஷ் சக்கரவர்த்தி, ஏகன், விஜித், ஜீவா சுப்ரமணியம், திண்டுக்கல் சரவணன், பாலாஜி தயாளன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். மல்லிகார்ஜுன் & மணிகண்ட ராஜா ஒளிப்பதிவு, தேவ் பிரகாஷ் இசை, ராம், தினேஷ் , சுபேந்தர் ஆகிய மூவரும் கலை இயக்குனர்கள், தமிழரசன் எடிட்டிங்.

நிகழ்ச்சிக்கு வந்த அனைவரையும் வரவேற்றுப் பேசினார். தயாரிப்பாளர் பாலா சீதாராமன்
“சினிமாவில் நடிப்பதற்காக வாய்ப்பு தேடும்போது வாய்ப்பு கிடைக்கவில்லை. அதன் பிறகு தொழில்நுட்ப கலைஞராக அனைத்து பிரிவுகளிலும் தேர்ச்சிப் பெற்று வாய்ப்பு தேடிய போதும் கலைத்தாய் எங்களுக்கு சரியான வாய்ப்பை வழங்கவில்லை. இந்த தருணத்தில் என்னுடைய நண்பர்களுடனும் என்னுடைய சகோதரர்களுடனும் இணைந்து வாய்ப்பை உருவாக்குவோம் என எண்ணியும், மற்றவர்களுக்கு வாய்ப்பளிப்போம் என தீர்மானித்தும் தயாரிப்பாளராக மாறினோம். எங்களுடைய ஜி எஸ் சினிமாஸ் இண்டர்நேஷனல் நிறுவனமும், சிக்னேச்சர்ஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து ‘நிறம் மாறும் உலகில்’ படத்தை தயாரித்திருக்கிறோம். படத்தை இயக்கியிருக்கும் இயக்குநர் பிரிட்டோவையும் நடித்திருக்கும் நடிகர்கள், நடிகைகள் ,தொழில்நுட்பக் கலைஞர்கள், நண்பர்கள், உறவினர்கள் , மற்றும் ரசிகர்கள் என அனைவரையும் வருக வருக என வரவேற்கிறேன். நாங்கள் தொடர்ந்து புதிய இளம் திறமையாளர்களுக்கு வாய்ப்பளிக்க காத்திருக்கிறோம்”.
இசையமைப்பாளர் தேவ்பிரகாஷ்
“என்னுடைய முதல் படமாக ‘நிறம் மாறும் உலகில்’ அமைந்ததில் மிகவும் சந்தோஷம். இசையமைப்பேன் என நான் கனவில் கூட நினைத்ததில்லை. இதனை சாத்தியப்படுத்திய இயக்குநருக்கும் தயாரிப்பாளருக்கும் நன்றி”.
நடிகை ஆதிரா
“ஒவ்வொரு பெண்ணின் வெற்றிக்கும் பின்னால் ஒரு ஆண் இருப்பார். ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னாலும் ஒரு பெண் இருப்பார். இதைத்தான் இந்தப்படம் வலியுறுத்துகிறது”.
நடிகை விஜி சந்திரசேகர்,
” இந்த படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு என் மகள் லவ்லின் மூலமாகத் தான் கிடைத்தது. அவளுடைய அம்மாவாகவவை நடிக்கிறேன். படத்தில் ரசிகர்கள் எதிர்பாராத விசயங்கள் நிறைய இருக்கிறது”.
தயாரிப்பாளர் விநியோகஸ்தர் தனஞ்ஜெயன்
‘மதிமாறன்’ என்ற படம் டிஜிட்டல் தளத்தில் பெரும் வரவேற்பை பெற்றது. அதை தயாரித்த நிறுவனம் தயாரிக்கும் இந்தப்படமும் மாபெரும் வெற்றி பெறும் என வாழ்த்துகிறேன்”.
நடிகை காவ்யா அறிவுமணி
“இந்தப் படத்திற்கு டைரக்டர் என்னைத் தேர்வு செய்யும்போது ‘ படத்தில் நீங்கள் கதாநாயகி இல்லை. ஆனால் இந்த படம் வெளியான பிறகு உங்களுடைய நடிப்புத் திறமை பேசப்படும் ‘ என வாக்குறுதி அளித்தார். அவருடைய வாக்குறுதி மீது நம்பிக்கை வைத்து இந்த படத்தில் நடித்திருக்கிறேன். படப்பிடிப்பு தளத்தில் கடினமாக உழைத்தார் இயக்குநர் பிரிட்டோ. இந்தப் படம் வெளியான பிறகு அனைவரின் மனதிலும் என்னுடைய கதாபாத்திரம் இடம் பிடிக்கும் என்று உறுதியாக நம்புகிறேன்”.
‘பிக் பாஸ்’ முத்துக்குமரன்
” இந்தப் படம் நன்றாக இருக்கும் என்ற நம்பிக்கை படத்தின் கதையை கேட்டு நடிக்க ஒப்புக்கொள்ளும் நடிகர்களின் பட்டியலை பார்க்கும்போது ஏற்படுகிறது. கதையின் நாயகர்களால் நிரம்பி வழிகிற திரைப்படமாக இது இருக்கிறது. இதனை உருவாக்கிய இயக்குநர் பிரிட்டோவின் ஆளுமையை நினைத்து பிரமிக்கிறேன்”.
தயாரிப்பாளர் கேத்ரின் ஷோபா
”நிறைய நட்சத்திரங்களை நடிக்க வைத்து இந்த படத்தை இயக்கி இருக்கும் இயக்குநர் பிரிட்டோவிற்கு , இந்தப் படக் குழுவினர் வெற்றி பெறுவதற்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்” .
இயக்குநர் பிரிட்டோ
“இது என்னுடைய முதல் படம். இந்த வாய்ப்பை வழங்கிய தயாரிப்பாளர்களுக்கு நன்றி. நான் இப்படத்திற்காக பிரபலமான நட்சத்திரங்கள் வேண்டும் என கேட்ட போது எந்தவித தயக்கமும் இல்லாமல் என் அனுபவத்தை பற்றிக் கூட கேள்வி கேட்காமல் ஒத்துழைப்பு வழங்கினார்கள்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
எனது நண்பர், நடிகர் ஜெய்வந்த் மூலமாக பாரதிராஜாவை சந்தித்தேன். அவரிடம் கதை சொன்ன போது முழுவதையும் கேட்டுவிட்டு வயதான தம்பதிகளை கதையின் நாயகனாகவும், நாயகியாகவும் உருவாக்கி கதை எழுதி இருக்கிறாய். இதனாலேயே நீ வெற்றி பெறுவாய் என ஆசீர்வதித்தார். அந்தத் தருணத்தில் தான் இந்த படத்தின் வெற்றியை உணர்ந்தேன். அவரை இயக்கியதற்காகவும், அவரிடம் வாழ்த்து பெற்றதற்காகவும் அவருக்கு நன்றி.
இந்தப் படத்தில் நடித்திருக்கும் நட்சத்திரங்கள் அனைவரும் என் மீது வைத்திருக்கும் அன்பின் காரணமாக நடிக்க ஒப்புக் கொண்டிருந்தாலும்.. இந்தக் கதை அம்மாவைப் பற்றியது என்பதால் அதன் மீதான ஈர்ப்பின் காரணமாகவே நடிக்க சம்மதம் தெரிவித்தார்கள்
மார்ச் எட்டாம் தேதி சர்வதேச மகளிர் தினம். இதற்குள் இந்த படத்தை ரசிகர்களிடம் சென்றடைய செய்ய வேண்டும் என்பதற்காகத்தான் மார்ச் 7ஆம் தேதியை தேர்வு செய்தோம். இந்தப் படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து வெற்றி பெறும் என உறுதியாக நம்புகிறேன்”.
நடிகர் சாண்டி மாஸ்டர்
“இந்தக் கதையில் என் கதாபாத்திரம் ஜாலியானது. எனக்கு பாடல் இருக்கிறதா? என டைரக்டரிடம்கேட்டேன் இருக்கிறது என்று சொன்னார். இன்னும் உற்சாகமடைந்தேன். படம் சிறப்பாக வந்திருக்கிறது”.
ஹீரோ ரியோ ராஜ்

“நானும் பிரிட்டோவும் நடிப்பதற்கான வாய்ப்புகளை ஒன்றாகத்தான் தேடத் தொடங்கினோம். அதன் பிறகு திடீரென்று ஒரு நாள் நான் இயக்குநராக போகிறேன் என்று சொன்னார். நண்பரான எனக்கு இது ஆச்சரியமாக இருந்தது. அதன் பிறகு கதையை எழுதி சொன்ன பிறகு உண்மையிலேயே வியந்தேன். அவர் இயக்கும் முதல் படத்தில் நான் நடித்திருக்கிறேன் என்பது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. நான் நடித்த முதல் மியூசிக் ஆல்பத்தின் இயக்குநரும் அவர்தான்.
படத்தில் உள்ள ஒவ்வொரு பிரிவினரும் தங்களுக்கான பங்களிப்பை முழுமையாக செய்துள்ளனர். திறமையான நடிகர்கள் நடித்திருக்கிறார்கள்”.
நடிகர் நட்டி(எ) நட்ராஜ்,
“அறிமுக இயக்குநர்கள் என்னிடம் கதையை சொல்வார்கள். கதையை கேட்டு விட்டு இரண்டு நாள் கழித்துதான் சொல்கிறேன் என்று தான் பதிலளிப்பேன். ஆனால் இயக்குநர் பிரிட்டோ இந்த படத்தின் கதையை என்னிடம் சொன்னவுடன் உடனடியாக நடிக்க ஒப்புக் கொண்டேன்.

இயக்குநர் பிரிட்டோ விரைவில் பான் இந்திய இயக்குநராக உயர்வார். அந்த அளவிற்கு சிறப்பாக இந்த படத்தை உருவாக்கி இருக்கிறார்.
இந்தப்படத்தில் நடித்த அனைத்து நடிகர், நடிகைகளுக்கும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும், இந்தப் படத்தை தயாரித்த தயாரிப்பாளர்களுக்கும் நன்றி”.
— மதுரை மாறன்.