தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தில் “வேற்றுமையில் ஒற்றுமை காணும்” ஓணம் பண்டிகை கொண்டாட்டம் – 2026
திருச்சி சமயபுரம் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தில் ஓணம் திருநாளை முன்னிட்டு பல்கலைக்கழக வளாகத்தில் ஓணம் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது. மொழி மற்றும் மாநிலங்களைக் கடந்து, அனைத்து மாணவர்களும் ஒன்றிணைந்து இந்த விழாவை ஒரு மாபெரும் கலாச்சாரத் திருவிழாவாகக் கொண்டாடினர்.
தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வேந்தர் திரு. அ. சீனிவாசன் அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தில் பயிலும் கேரள மாணவ மாணவியர்கள் பாரம்பரிய முறைப்படி கேரளத்து செண்டை மேளம் முழங்க களி நடனங்களுடன் பல்கலைக்கழக வேந்தர் திரு. அ. சீனிவாசன் அவர்களை வரவேற்றனர்.
விழாவை முன்னிட்டு பல்கலைக்கழக பிரதான வளாகத்தில் மாணவ, மாணவிகள் பல வண்ண மலர்களைக் கொண்டு பிரம்மாண்டமான ‘அத்தப்பூ‘ கோலமிட்டு அசத்தினர். கேரளாவின் பாரம்பரிய உடையான கசவு சேலை மற்றும் வேட்டி அணிந்து வந்திருந்த மாணவர்கள், செண்டை மேளத்தின் முழக்கத்திற்கு ஏற்ப ‘திருவாதிரைக்களி‘ நடனமாடி மகிழ்ந்தது அனைவரையும் வெகுவாகக் கவர்ந்தது.

பல்கலைக்கழக வேந்தர் தனது வாழ்த்துரையில், “வேற்றுமையில் ஒற்றுமை காணும் நமது இந்தியப் பண்பாட்டைப் பறைசாற்றும் விதமாக இந்த ஓணம் பண்டிகை அமைந்துள்ளது. மாணவர்களிடையே சகோதரத்துவத்தையும், நமது தொன்மையான கலாச்சாரத்தையும் வளர்க்க இதுபோன்ற விழாக்கள் மிகவும் அவசியமானவை,” என்று வலியுறுத்தினார்.
தொடர்ந்து மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் கேரளா பாரம்பரிய நடனங்களும் நடைபெற்றது. குறிப்பாக மாணவிகளின் திருவாதிரை களி நடனம் அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.
விழாவின் முக்கிய சிறப்பம்சமாக, மாணவ, மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் அனைவருக்கும் 14 வகையான அறுசுவை உணவுகளுடன் கூடிய பாரம்பரிய கேரள ‘ஓண சத்யா‘ விருந்து சுத்தமான வாழை இலையில் பரிமாறப்பட்டது.
பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களும் எவ்வித வேறுபாடுமின்றி ஒன்றாக அமர்ந்து உணவருந்தி, ஓணம் திருநாளை மகிழ்ச்சியோடு கொண்டாடினர். இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் பல்கலைக்கழக நிர்வாகம், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இணைந்து மிகச் சிறப்பாகச் செய்திருந்தனர். இவ்விழாவில் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர்.சி.கே.ரஞ்சன், பதிவாளர் டாக்டர் செல்வகுமார், பல்கலைக்கழக புலமுதல்வர்கள், இணை புலமுதல்வர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.







Comments are closed, but trackbacks and pingbacks are open.