பிளாஸ்டர் ஆஃப் பாரிஸில் விநாயகர் சிலைகள் ! சீல் வைத்த மாநகராட்சி ! கண்ணீரில் வடமாநில தொழிலாளர்கள்!
ராஜஸ்தானில் இருந்து வந்து வட்டிக்கு வாங்கி செலவு செய்து சிலை தயாரித்துள்ளோம். ஒரு மாதம் கால அவகாசம் வழங்ககோரி கண்ணீர் மல்க மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்த வடமாநில சிலை தயாரிப்பு தொழிலாளர்கள் மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட மாட்டுத்தாவணி உள்ளிட்ட திறந்தவெளி பகுதிகளில் ராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறு வடமாநிலங்களை சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் சிலை தயாரிப்பு தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
பெரும்பாலும் விநாயகர் சதுர்த்தியை மட்டுமே தங்களது வாழ்வாதாரமாக நம்பி ஆண்டு முழுவதிலும் சிலை தயாரிப்பாளர்களில் ஈடுபடுகின்றனர். விநாயகர் சதுர்த்தின்போது அதிக அளவிற்கு சிலை விற்பனையாகும் என்ற எதிர்பார்ப்போடு விதவிதமான விநாயகர் சிலைகள் தயாரிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
இந்தநிலையில் மதுரை மாநகராட்சி சார்பில் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தால் தடை செய்யப்பட்ட பிளாஸ்ட்ஆப்பாரிஸ் மூலமாக விநாயகர் சிலை தயாரிக்கப்படுவதாக கூறி மாநகராட்சி அதிகாரிகள் சிலை தயாரிப்பு கூடங்களுக்கு சீல் வைத்தனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த வடமாநில சிலை தயாரிப்பாளர்கள் ஏற்கனவே தயாரிக்கப்பட்ட சிலைகளை விற்பனை செய்ய ஒரு மாத காலஅவகாசம் வழங்க வேண்டும் எனவும் விதிகளுக்கு உட்பட்டு மாசு ஏற்படாத வகையில் சிலை தயாரிக்க அனுமதி வழங்க வேண்டும் என கோரி தங்களது குடும்பத்துடன் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகை தந்து மாவட்ட ஆட்சியரை சந்தித்து முறையிட்டனர்.
இது தொடர்பாக பேசிய சிலை தயாரிப்பு தொழிலாளர்கள் …
ராஜஸ்தானில் இருந்து வந்து வட்டிக்கு வாங்கி செலவு செய்து சிலை தயாரித்துள்ளோம். இப்போது தயாரித்த சிலைகளை ஒன்றாக அடைத்து அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். இதனால் எங்களின் வாழ்வாதரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தயாரித்த சிலைகளை விற்பனை செய்ய ஒரு மாதம் கால அவகாசம் வழங்க வேண்டும் என தெரிவித்தனர்.
— ஷாகுல், படங்கள் : ஆனந்தன்







Comments are closed, but trackbacks and pingbacks are open.