பள்ளி ஜன்னல் கம்பி உடைத்து ரூ.12 லட்சம் கொள்ளை ! தீவிர விசாரணையில் காவல்துறை !
துறையூர் அடுத்துள்ள புலிவலம் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில், நள்ளிரவில் புகுந்த கொள்ளையர்கள் பள்ளி முதல்வர் அறையின் ஜன்னல் கம்பிகளை அறுத்து, அலுவலக அறையிலிருந்த ரூபாய் 12 லட்சம் ரொக்கப் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் பகுதியை சேர்ந்த டாக்டர் இன்பன், இனியன் என்பவர்களுக்கு சொந்தமான துறையூர் கரட்டாம்பட்டி திண்ணனூர் சாலை பகுதியில் ராகவேந்திரா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.
இப்பள்ளியில் எல்.கே.ஜி முதல் 12-ஆம் வகுப்பு வரை சுமார் 730 மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று காலை வழக்கம்போல் பள்ளியின் பாதுகாவலரான செல்வராஜ் என்பவர் பள்ளி முதல்வர் அறையைத் திறக்கச் சென்றுள்ளார்.
அப்போது, அறையின் கண்ணாடி கதவு மற்றும் ஜன்னல் உடைக்கப்பட்டு, கதவு திறந்த நிலையில் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
உடனடியாக அவர் பள்ளி முதல்வர் கலைவாணிக்குத் தகவல் தெரிவித்தார். தகவல் தெரிந்து விரைந்து வந்த பள்ளி முதல்வர் அலுவலகத்தைப் பார்த்தபோது, கேஷியர் டிராயரில் இருந்த ரூ.12 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து பள்ளி முதல்வர் கலைவாணி புலிவலம் காவல் நிலையத்திற்கு உடனடியாகத் தகவல் தெரிவித்தார்.சம்பவ இடத்திற்கு வந்த புலிவலம் போலீசார் பள்ளி உள் வளாகம் மற்றும் வெளி வளாகத்தை பார்வையிட்டனர்.
அப்போது நேற்று முன்தினம் நள்ளிரவில் பள்ளியின் பின்புறம் உள்ள ரெடிமேட் காம்பவுண்ட் சுவரின் இரண்டு சிமெண்ட் பலகைகளை (ஸ்லாப்) உடைத்து கொள்ளையர்கள் உள்ளே புகுந்துள்ளனர்.
அதன் பின்னர், பள்ளி முதல்வர் கலைவாணி அறையிலிருந்த ஜன்னல் கம்பிகளை அறுத்து உள்ளே நுழைந்து அங்கிருந்து முதல்வர் அறைக்கு அருகிலுள்ள அலுவலகத்தில் கேஷியர் டிராவை உடைத்து, அதில் வைக்கப்பட்டிருந்த ரூ 12.80 லட்சம் பணத்தை கொள்ளையர்கள் கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது.
இதனைத்தொடர்ந்து ஜீயாபுரம் காவல் துணை கண்காணிப்பாளர் கதிரவன் சம்பவ இடத்தை நேரில் வந்து ஆய்வு செய்து பள்ளியின் பாதுகாவலர் மற்றும் முதல்வர்,அலுவலக பணியாளர்களை விசாரணை நடத்தினர்.
மேலும் டிஎஸ்பி நடத்திய முதற்கட்ட விசாரணையில் பள்ளி வளாகத்தை சுற்றி வைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்கள் வேலை செய்யவில்லை என்று பள்ளி முதல்வர் கூறியதும் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியது.
இதையடுத்து தடய அறிவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கைரேகைகள் மற்றும் முக்கிய தடயங்கள் சேகரிக்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து மோப்ப நாய் நிலா வரவழைக்கப்பட்டு கொள்ளை நடந்த இடத்திலிருந்து மோப்பம் பிடித்து அங்கிருந்து அருகில் உள்ள காட்டுப்பகுதிக்குள் சிறிது தூரம் ஓடிச் சென்று நின்றது.
மேலும் இச்சம்பவம் குறித்து புலிவலம் போலீசார் பள்ளி பணியாளர்களை தனி தனியாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
ஒரு வனப்பகுதி அருகே செயல்பட்டு வரும் பள்ளியில் நள்ளிரவில் மர்ம நபர்கள் புகுந்து ரூபாய் 12 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.







Comments are closed, but trackbacks and pingbacks are open.