சோபியா – வானத்தில் பெருங்குரல் !

0

சோபியா : வானத்தில் பெருங்குரல்

 

2016 நவம்பர் 8ஆம் நாள் இரவு தலைமையமைச்சர் மோடி பணமதிப்பிழப்பை அறிவிக்கிறார். நாட்டில் 3 இலட்சம் கோடி கருப்புபணம் உள்ளது. அதை ஒழிக்கவும் கண்டுபிடிக்கவும் இந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது என்று அறிவித்தார். இந்திய ரிசர்வ் வங்கியின் அறிக்கையில் புழகத்திலிருந்த தொகையில் 99.3 இலட்சம்கோடி வங்கிக்குத் திரும்பிவிட்டது. இன்னும் 10ஆயிரம்கோடி மட்டும் திரும்பவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணமதிப்பு காலத்தில் சுமார் 150 உயிர்கள் பறிக்கப்பட்டுள்ளன. பலர் மனஉளைச்சலுக்கு ஆளானர்கள். அறிக்கை வெளிவந்து 10 நாள்கள் ஆகிவிட்டன. தலைமைச்சர் மோடி மக்களிடம் முறையாக ஆராய்ந்து பார்க்காமல் நடவடிக்கை எடுத்துவிட்டேன் என்று நாட்டு மக்களிடம் இதுவரை மன்னிப்பு கேட்கவில்லை. பணமதிப்பிழப்பு நடவடிக்கை என்பது ஒருவகை பாசிச நடவடிக்கை என எதிர்க்கட்சிகள் வருணித்தது இப்போது உண்மையாகிவிட்டது.

2 dhanalakshmi joseph

 

எப்படி யோசித்தாலும் லூயிஸ் சோபியா என்னும் தூத்துக்குடியை வாழ்விடமாகக் கொண்டு, கனடாவில் இதழியல் துறையில் முனைவர் பட்டத்திற்கு ஆய்வு செய்துவரும் மாணவி, சென்னையிலிருந்து தூத்துக்குடிக்குப் பயணம் செய்த விமானத்தில் பாஜக மாநிலத் தலைவர் தமிழிசையைப் பார்த்து பாசிச பாஜக – ஆர்எஸ்எஸ் அரசு ஒழிக என்று முழக்கமிட்டது தவறு இல்லை என்றே தோன்றுகிறது. இன்னும் சொல்லப் போனால் அது கொண்டாடப்பட வேண்டியதுதான். கொதித்துக் கொண்டிருக்கும் இளைய தலைமுறையின் எழுச்சியின் வடிவமாக சோபியாவின் முழக்கமாகப் பார்க்கவேண்டும்.

 

- Advertisement -

- Advertisement -

சோபியா என்ற இதழியல் ஆய்வு மாணவி விமானத்திலும், விமான நிலையத்திலும் “பாசிச பாஜக – ஆர்எஸ்எஸ் அரசு ஒழிக” என்று தமிழிசையைப் பார்த்துக் கோஷம் போட்டிருக்கிறார். மற்றபடி, அவர் மீது உடல்ரீதியான தாக்குதல் ஏதும் தொடுக்கவில்லை. அதற்கான எந்த முயற்சியிலும் இறங்கவில்லை. அவரை மிரட்டவில்லை. கண்ணியமற்ற சொற்கள் எதையும் பயன்படுத்தவில்லை.. தான் நம்பும் ஒரு கருத்தை – அதாவது இந்தியாவின் பாசிச ஆட்சி நடக்கிறது என்பதை – அக்கட்சியின் பிரதிநிதி ஒருவரைப் பார்க்கும்போது பொதுவெளியில் பகிர்வதான செயல்பாடு என்பதாக எடுத்துக்கொள்ளவேண்டும். அரசியல் சாசனச் சட்டத்தின் 19(1)(a) பிரிவின் படி இதற்கு அவருக்கு முழு உரிமை உண்டு (“All citizens shall have the right to freedom of speech and expression”).

 

ஏன் அப்படி அநாகரிகமாக முழக்கமிட்டு சொல்ல வேண்டும்? பேச்சுரிமை இருக்கிறது என்றால் மேடை போட்டு பேசுங்கள். பத்திரிக்கையில் எழுதுங்கள். ஊர்வலம் நடத்தி எதிர்ப்பு முழக்கங்களைப் பதிவு செய்யுங்கள். அதை விடுத்து இதுபோன்ற பொதுவெளியில் நடந்துகொள்வது முறையா என்றால், மாணவி சோபியா எந்த அரசியல் இயக்கத்தையும் சாராத தனிமனிதர். அதனால்தான் யதார்த்தச் சாத்தியக்கூறாய் தன் எல்லைக்குள் நின்று தன்னால் சாத்தியமான எதிர்ப்பைப் பதிவு செய்ய முழக்கமிட்டுகிறார் என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும் இது ஒரு போராட்ட முறை. இது பொதுமக்களுக்கு இடையூறு என ஒருவர் சொன்னால், ரயில் நிலையங்களிலும், விமான நிலையங்களிலும் தலைவர்கள் வரும் போது வாழ்க கோஷம் போடுவதும் அதில் தானே வரும்? அதை ஏன் நாம் கண்டிப்பதில்லை? கோவா விமானநிலையத்தில் ஒரு பொதுக்கூட்டத்தை பாஜக அகில இந்திய தலைவர் அமித்ஷா நடத்தியிருக்கிறார்.

தமிழிசை வழக்குப் பதிவு செய்தாக வேண்டும் என்று விமானநிலையத்தில் காவல்துறையிடம் வற்புறுத்துகிறார். சோபியா பொதுஇடத்தில் தரக்குறைவாக நடந்துகொண்டார் என்று காவல்துறை பிணையில் வரமுடியாத சட்டப்பிரிவுகளில் வழக்கைப் பதிவு செய்கிறது. விமானப் பயணத்தில் பிரச்சனை என்றால் விமானத்தின் கேப்டன் மூலமாகத்தான் வழக்குப் பதிவு செய்யப்படும். அந்த நடைமுறை இங்கே பின்பற்றப்படவில்லை.

 

 

சோபியா இரு பிரிவினருக்கிடையே மோதலை ஏற்படுத்தினார் என்கிறார்கள். வழக்கும் அப்படித்தான் போடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. எப்படி? அவர் தன் தரப்புக்கு ஆள் திரட்டினாரா? அவர்களையும் கோஷமிடத் தூண்டினாரா? இந்தக் குற்றச்சாட்டில் அந்த “இரண்டு பிரிவுகள்” என்பது யார்? இந்துக்கள், கிறிஸ்தவர்களா? அவர் ஒரு கட்சியை அல்லது ஆட்சியை எதிர்த்தாரா? என்பதைப் பற்றியெல்லாம் கவலைக் கொள்ளாமல் காவல்துறை அவசரஅவசரமாக வழக்கைப் பதிவு செய்துள்ளது. மேலும் சோபியா உடனே கைது செய்யப்படுகிறார். தூத்துக்குடி மாவட்ட நீதிபதி முன் அவர் நேர்நிறுத்தப்படுகிறார். நீதிபதி 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க 03..09.2018ஆம் நாள் உத்தரவு பிறப்பிக்கிறார். சிறைக்கு அழைத்துச் செல்லும் முன் நடைபெறும் மருத்துவச் சோதனையின்போது வயிற்று வலிக்குச் சிகிச்சைப் பெற மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்.

 

4 bismi svs

04.08.2019 ஆம் நாள் சோபியாவிற்குப் பிணை கேட்டு நீதிமன்றத்தில் மனு அளிக்கப்படுகின்றது. மனுவைப் பெற்றுக் கொண்ட நீதிபதி நிபந்தனைகள் எதுவும் விதிக்காமல் சோபியாவை பிணையில் விடுதலை செய்கிறார். நீதிபதி பெற்றோரைப் பார்த்து, பொதுஇடங்களில் இப்படி நடந்துகொள்வதைத் தவிர்க்க நீங்கள் அறிவுரைகள் சொல்லவேண்டும் என்று கூறுகிறார். நீதிமன்ற ஆணை திருநெல்வேலி கொக்கிரகுளம் பெண்கள் சிறைக்குச் சென்று, சிறை நடைமுறைகள் பின்பற்றப்பட்டு, உரிய ஆணை மருத்துவமனைக்கு 04.09.2018ஆம் நாள் மாலை வருகிறது. அதன் பின் மருத்துவமனையிலிருந்து சோபியா பிணையில் விடுதலை செய்யப்படுகிறார்.

 

தமிழிசை என்ற தனி மனுஷிக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு என்ன பதில் எனக் கேட்கிறார்கள். தமிழிசை தனி மனுஷி அல்ல; ஒரு கட்சியின் தலைவி. பொது வாழ்க்கையில் இருப்பவர். அப்படி இருப்போருக்கு இம்மாதிரி எதிர்ப்புகள் சகஜம். இதற்குத் தயங்குவோர் பொது வாழ்க்கைக்கே வரக்கூடாது. பெரியாரைப் படித்திருந்தால் இந்தப் பரந்த அறிவு இருந்திருக்கும். நோகாமல் நுங்கு தின்ன முடியாது. தவிர, பாஜக மாதிரி ஒரு கட்சியில் இருக்கும்போது இதெல்லாம் நடக்கத்தான் செய்யும். பாஜக ஆட்சியில் இல்லாதபோது ஏதாவது இப்படி நடந்திருக்கிறதா? இல்லை. எனில் மக்களுக்கு அந்த ஆட்சியின் மீதான அதிருப்தி இருப்பதைத்தானே இச்சம்பவங்கள் காட்டுகின்றன? மற்றபடி சோபியாவுக்கும் தமிழிசைக்கும் தனிப்பட்ட முறையில் வாய்க்கால் வரப்பு தகராறா?

இம்மாதிரி சம்பவங்களிலிருந்து ஓர் அசலான அரசியல்வாதி கற்றுக்கொள்ளத்தான் பார்ப்பார்கள். தாம் தூம் என்று குதித்து தமிழிசை ஈறைப் பேனாக்கி, பேனைப் பெருமாளாக்கிவிட்டிருக்கிறார் என்பதை விடுதலைசிறுத்தைகள் கட்சியின் வன்னிஅரசு காலத்தின் குரல் விவாத நிகழ்ச்சியில் குறிப்பிட்டது பொருத்தமான ஒன்று. அதே நிகழ்ச்சியில் பேசிய திராவிடர் கழகத்தின் அருள்மொழி,“முழக்கமிட்ட மாணவியை அழைத்து, ஏன் இப்படி முழக்கமிட்டாய், என்ன காரணம் என்று கேட்டிருந்தால், அந்தப் பெண்ணும் பதில் சொல்லியிருப்பார். தமிழிசையின் பெருந்தன்மையை நினைத்து அந்தப் பெண்ணேக் கூட வருத்தம் தெரிவித்திருப்பார். அதை விடுத்து, கட்சிக்காரர்களை தமிழிசை உள்ளே அழைத்து அந்தப் பெண்ணை அச்சுறுத்தியிருக்கிறார். கட்சிக்காரர்கள் அந்த மாணவியை ஆபாச வார்த்தைகளால் அசிங்கப்படுத்தி இருக்கிறார்கள். தமிழிசையின் இந்தப் போக்குதான் ஒரேநாளில் சோபியா இந்திய அளவுக்கு ஊடகங்களின் கவனத்தைப் பெற வாய்ப்பாக அமைந்துவிட்டது” என்று தமிழிசை இப் பிரச்சனையில் பெருந்தன்மையோடு நடந்திருக்கவேண்டும் என்பதை வலியுற்றுத்தினார்.

 

“அந்தப் பெண்ணின் பின்புலம் மீது சந்தேகம் வருகிறது, அவர் என் உயிருக்கு ஆபத்து உண்டாக்க முயன்றார்” என்று தமிழிசை சொல்வது எல்லாம் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு பாணி. ஒருவன் உன்னை எதிர்த்தால் அவன் மீது தேசத்துரோகி என முத்திரை குத்து, முடித்தால் தீவிரவாதி என நிரூபி, இறுதியில் வாயில் சுடு என்பது தான் பாசிசம். இன்றைய பாஜக அரசு அதைத் தான் செய்து வருகிறது. மிகத் துல்லியமாக அதைத் தான் எதிர்த்துக் குரல் கொடுத்தார் சோபியா. அவரது மீதே பாசிசத்தை ஏவி அதை நிரூபிக்கிறார்கள்.

 

தமிழிசை மீது அந்தப் பெண் காட்டிய எதிர்ப்பு என்பது எல்லைக்குள் நிற்பதால் மட்டுமே இதை ஆதரிக்க வேண்டியுள்ளது. அவர் தமிழிசை மீது தாக்குதல் நடத்தி இருந்தாலோ, ஆபாச மொழிகள் பேசி இருந்தாலோ, செருப்பை எறிந்திருந்தாலோ, மைப் பூசியிருந்தாலோ நிச்சயம் அதை ஆதரிக்க முடியாது. ப.சிதம்பரம் மீது, அரவிந்த் கேஜ்ரிவால் மீது செருப்பு வீசியதை யாரும் ஆதரிக்கவில்லை. செருப்பு எறிந்தவருக்கும், மைப்பூசியவருக்கும் எதிராக வழக்கும் தொடுக்கப்படவில்லை, எந்தத் தண்டனையும் வழங்கப்படவில்லை.

மாணவி சோபியா கைதை ஏன் எதிர்க்க‌ வேண்டும்? இது கருத்துரிமையைக் கொலை செய்யும் வேலை. பாஜகவை எதிர்ப்போரை நோக்கி பகிரங்க எச்சரிக்கை விடுக்கும் செயல். நான் பேசிக் கொண்டிருப்பது இந்துத்துவா ஆட்களுக்கும் சேர்த்துத்தான். நாளை இடதுசாரிகளை, காங்கிரஸை, இஸ்லாமிய தீவிரவாதத்தை எதிர்க்க உங்களுக்கும் குரல் இல்லாமல் செய்வார்கள். அதற்கு இந்த நிகழ்வு உதாரணமாகக் காட்டப்படும்.

 

சோபியாவை நாம் ஏன் கொண்டாட வேண்டும்? அவரது துணிச்சல் முக்கியமானது. சோபியா இளங்கன்று என்பதால் பயமறியாமல் செய்திருக்கலாம் தான். ஆனால் இன்று எத்தனை இளங்கன்றுகள் பயமின்றி இருக்கின்றன? தினமும் கழுநீரும், வைக்கோலும் கிடைத்தால் போதும் என்றே பெரும்பாலான இந்திய இளங்கன்றுகள் இருக்கின்றன. நான் அவ்விடத்தில் இருந்திருந்தாலும் இங்கிதம் அல்லது விளைவுகள் கருதி வாயை மூடிக் கொண்டு தான் இருந்திருப்பேன். ஆனால் சோபியா எந்த அச்சமுமின்றி தைரியமாய்த் தான் நம்பும் ஒரு கருத்தைப் பொதுவெளியில் வைத்திருக்கிறார். அவர் பெண் என்பதும், சிறுவயது என்பதும் இச்செயலுக்கான மரியாதையைக் கூட்டுகிறது.

 

கனடாவில் உயர்கல்வி பயின்று வருபவர் என்ற பின்புலத்தை வைத்துப் பார்க்கும்போது இந்த அக்கப்போர்களில் எல்லாம் இறங்காமல் பணத்தால் அலங்கரித்த சொகுசு வாழ்க்கை ஒன்றை மட்டும் அவர் கவனித்திருக்கலாம். ஆனால் அவர் அதை மீறி தன் நாட்டைப் பற்றிக் கவலை கொண்டிருக்கிறார். மாணவி சோபியா இன்றைய தலைமுறைக்கு ஓர் உதாரண ஆளுமை. இந்திய அரசியல் சாசனம் சொல்லும் கருத்துரிமை என்பது ஏட்டுச்சுரைக்காய் அல்ல; ஒவ்வொரு குடிமகனின் அடிப்படை உரிமையாகும் என்பதை அவர் எழுப்பிய முழக்கம் நமக்கு தெரிவிக்கும் நிகழ்கால உண்மை.

 

– ஆசைதம்பி

5 national kavi
Leave A Reply

Your email address will not be published.