விதவை தாயை அடித்து வீட்டைவிட்டு துரத்திய மகன் !
விதவை தாயை அடித்து வீட்டைவிட்டு துரத்திய மகன்!
கணவர் இறந்துவிட்ட நிலையில், விதவையான தன்னையும் மனவளர்ச்சிக் குன்றிய தனது மகளையும் பராமரிக்க முடியாது எனக்கூறி அடித்து துன்புறுத்தி, வீட்டைவிட்டு துரத்திய தனது மகன் மற்றும் மருமகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் தன்னிடமிருந்து அபகரிக்கப்பட்ட வீட்டை மீட்டுத் தருமாறு கோரியும் தஞ்சை மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோரிடம் மனு அளித்துள்ளார் பாதிக்கப்பட்ட மூதாட்டி தாய்.
தஞ்சாவூர் மானோஜிப்பட்டி உப்பிரிகை மண்டபம் இந்திரா நகரைச் சேர்ந்தவர் மலர்க்கொடி. இவரது கணவர் தாமஸ். கணவர் இறந்துவிட்டார். இத்தம்பதியினருக்கு மனவளர்ச்சி குன்றிய மகள் உள்பட மூன்று மகள்கள், செலுக்கிஸ் ராஜா என்ற ஒரு மகன்.
“கணவர் தாமஸ் இறந்து 40 நாள் ஆகிவிட்டது. அவருக்கு வேண்டிய சடங்குகளைக்கூட செய்ய வில்லை. இந்நிலையில், மகன் செலுக்கிஸ் ராஜா, மருமகள் ஜான்சிராணி ஆகிய இருவரும் சேர்ந்து கொண்டு எங்களை அடித்து உதைக்கிறாங்க. எனது முடியாத மகளையும் சித்திரவதை செய்றாங்க,” என தனது மனுவில் கூறியுள்ளார் மலர்க்கொடி.
அரசால் வழங்கப்படும் மாத உதவித் தொகையையும் தனது மகன் அபகரித்துக்; கொள்வதாகவும், எனவே தற்போது சித்தாள் வேலை செய்து பிழைத்து வருவதாகவும் மலர்க்கொடி கூறியுள்ளார்.
இதுபற்றி மலர்க்கொடி ஏப்ரல் 17 ஆம் தேதி தஞ்சை மருத்துவக் கல்லூரி காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார். அவரது புகாரின்பேரில், போலீஸார் விசாரணை செய்து தனது மகனை கண்டித்து அனுப்பியுள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த செலுக்கிஸ் ராஜாவும், அவரது மனைவி ஜான்சிராணியும் சேர்ந்து என்னையும் மனவளர்ச்சி குன்றிய அவரது மகளையும் மற்றவர்கள் முன்னிலையில் கட்டையால் சரமாரியாகத் தாக்கினர். அதோடு, மனவளர்ச்சிக் குன்றிய எனது மகளை பேருந்து நிலையத்தில் இறக்கிவிட்டு சென்றுவிட்டார். திக்கு திசை தெரியாத எனது மகளை எனது உறவுக்காரர் ஒருவர் கண்டுபிடித்து என்னிடம் கொண்டுவந்து ஒப்படைத்தார் என்கிறார் மலர்க்கொடி.
தன்னையும் தனது மனவளர்ச்சிக் குன்றிய மகளையும் தாக்கி துன்புறுத்தி வீட்டைவிட்டுத் துரத்திய தனது மகன் மற்றும் மருமகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
அதோடு, தனது வீட்டை தனது மகனிடம் இருந்து மீட்டு தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் அப்போதுதான் தானும் தனது மகளும் நிம்மதியாக வாழ முடியும் என்றும் அவர் அம்மனுவில் கூறியுள்ளார்.