கனஜோராய் விற்பனையாகும் கள்ள லாட்டரி… கணக்கே இல்லாமல் கல்லா கட்டும் போலீசார்… கண்டுகொள்ளுமா தமிழக அரசு..?
கனஜோராய் விற்பனையாகும் கள்ள லாட்டரி… கணக்கே இல்லாமல் கல்லா கட்டும் போலீசார்… கண்டுகொள்ளுமா தமிழக அரசு..?
தமிழகத்தில் தடை செய்யப்பட்ட வெளி மாநில லாட்டரி விற்பனையை தொடர்ந்து தமிழக அரசு கண்காணித்து , தொடர்ந்து தடை விதித்து வரும் நிலையில் , ஒரிரு இடங்களில் மறைமுகமாக விற்பனை செய்பவர்கள் மீது கைது நடவடிக்கை மேற்கொண்டு வரும் நிலையில், திருச்சி மாவட்டம் , துறையூர் தாலுக்கா, உப்பிலியபுரம் போலீஸ் சரகம் , கொப்பம்பட்டியில் பகிரங்கமாக கடை அமைத்து தடை செய்யப்பட்ட வெளி மாநில லாட்டரி விற்பனை கனஜோராக நடைபெறுகிறது.
![கள்ள லாட்டரி விற்பனை](https://angusam.com/wp-content/uploads/2022/11/WhatsApp-Image-2022-11-12-at-3.45.24-PM-1-716x1024.jpeg)
கொப்பம்பட்டி சந்தை நடைபெறும் இடத்திற்கு அருகில் , நூலகத்திற்கு பின்புறம் வாடகை கட்டிடத்தில் முன்புறம் திரைச்சீலை அமைத்து அதனுள்ளே டேபிள், சேர் அமைத்து அதில் ஒரு நபர் , தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கேரளா வாட்டரியின் கடைசி 3 எண்களைக் கொண்ட எண்களை , லாட்டரிவாங்கும் நபர்கள் சொல்லக் கூடிய 3 எண்களை போலி பில்புக் மூலம் எழுதி , அதற்கான பணத்தை பெற்றுக் கொண்டு எழுதிய நம்பரைக் கொடுக்கின்றனர்.
மேலும் இவர்கள் தினந்தோறும் 8 விதமான லாட்டரி குலுக்கல்கள் உள்ளது எனக் கூறி , அப்பாவி ஏமாளி மக்களிடம் காசைக் கறந்து விடுகின்றனர்.
![கள்ள லாட்டரி விற்பனை](https://angusam.com/wp-content/uploads/2022/11/WhatsApp-Image-2022-11-12-at-3.47.31-PM-1024x825.jpeg)
இதில் அதிகமாக பணத்தை இழந்து தினக்கூலி தொழிலாளிகள் என்பது மிகவும் வேதனையளிக்கக்கூடிய விஷயம்.
தினமும் காலை 10 – 30 ,11-30 ,12-30 ,01-30 , 03 – 30- , 05 – 30 , 06-30 ,07-30 என 8 விதமான ஆன்லைன் லாட்டரி குலுக்கல்கள் உள்ளது எனவும், கூடுதலாக 01-00 மணிக்கு பூடான் லாட்டரி, மாலை 06-00 மணிக்கு சூப்பர் லாட்டரி என்றும் அப்பாவி மக்களிடம் பணத்தை கறந்து விடுகின்றனர்.
விளக்கைத் தேடி வரும் விட்டில் பூச்சி போல , தினந்தோறும் ஆன்லைன் லாட்டரி குலுக்கல்களில் பணம் கொடுத்து பரிதாபமாக ஏமாறுகின்றனர்.
இதில் ஒரு சிலருக்கு பரிசு கிடைத்தாலும் அதனை முறையாக தருவது கிடையாதாம்.
ரூ.35-க்கு முதல் பரிசு -14 ஆயிரம் எனவும், ரூ 70-க்கு 40-ஆயிரம் எனவும் இதில் பிடித்தம் போக மீதி பணம் தரப்படும் என்கிறார்கள்.
![கள்ள லாட்டரி விற்பனை](https://angusam.com/wp-content/uploads/2022/11/WhatsApp-Image-2022-11-12-at-3.45.24-PM-461x1024.jpeg)
இவை அனைத்துமே போலீசாரின் முழு ஒத்துழைப்புடனே நடைபெறுவதாக இதனை நடத்துபவர்களே கூறுகின்றனர்.
மேலும் துறையூர் தாலுக்காவிலேயே கொப்பம்பட்டியில் மட்டுமே இவ்வளவு பட்டவர்த்தனமாக கள்ள லாட்டரி விற்பனை கனஜோராக நடப்பதற்கு சமீபத்தில் பணி மாற்றத்தில் உப்பிலியபுரம் காவல் நிலையத்தில் சிறப்பு தனிப்பிரிவு (எஸ்பி ஏட்டு) போலீசாக பணியாற்றி வரும் பாலமுருகன் என்பவரின் முழு ஆதரவில் தான் கொடி கட்டி பறக்கிறது என்கிறார்கள் விஷயம் தெரிந்தவர்கள்.
![கள்ள லாட்டரி விற்பனை](https://angusam.com/wp-content/uploads/2022/11/WhatsApp-Image-2022-11-12-at-3.47.00-PM-768x1024.jpeg)
இது மட்டுமல்ல உப்பிலியபுரம் காவல் சரக கட்டுப்பாட்டு ஏரியாக்கள் சுமார் 21 இடங்களில் சந்து கடைகளும் இவரது கட்டுப்பாட்டின் தான் செயல்படுகிறது என்ற கூடுதல் தகவலும் கூறப்படுகிறது.
துறையூர், உப்பிலியபுரம் போலீஸார் இவற்றைத் தடுக்க முயற்சி எடுப்பதை விட திருச்சி காவல்துறை உயர் அதிகாரிகள் குழு மூலம் , யாரிடமும் கூறாமல் அதிரடியாக ரெய்டு நடத்தினால் மட்டுமே கள்ள லாட்டரி, சந்து கடை மதுபான விற்பனை ஆகியவற்றைத் தடுத்திட முடியும் எனவும் , உடனடியாக நடவடிக்கை எடுத்து தினந்தோறும் தனது பணத்தை கள்ள லாட்டரியில் இழந்து தனது குடும்ப வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கி வரும் அப்பாவி கூலித் தொழிலாளிகளைக் காப்பாற்ற உயர் போலீஸ் அதிகாரிகள் உள்ளிட்ட தனிப்படை போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெண்கள் உள்ளிட்ட சமூக ஆர்வலர்கள் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
![கள்ள லாட்டரி விற்பனை](https://angusam.com/wp-content/uploads/2022/11/WhatsApp-Image-2022-11-12-at-3.45.23-PM-1-461x1024.jpeg)