விஜய் என்னும் ராஜதந்திரி
தமிழக அரசியலில் புதிய அத்தியாயம் எழுதப்படுகிற இந்த தருணத்தில், திரு. விஜய் என்பவர் சாதாரண அரசியல் தலைவராக அல்லாமல், ஒரு திட்டமிட்ட ராஜதந்திரியாக உருவெடுத்து வருகிறார். ஆரம்பத்தில் அவரை குறைத்து மதிப்பிட்டவர்கள் இன்று அதே தவறை மீண்டும் மீண்டும் செய்கிறார்கள் என்பது அரசியல் ஆய்வாளர்களுக்கே ஆச்சரியமாக இருக்கிறது.
ஒரு தேர்தல் வெற்றி என்பது அரசியலின் முடிவு அல்ல—அது தொடக்கம் மட்டுமே. ஜூன் 22 அன்று 51 வயதை எட்டும் விஜய்க்கு, அடுத்த இருபது ஆண்டுகளில் குறைந்தது 10–12 முக்கியமான தேர்தல்களை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயம் உள்ளது. இந்த நீண்ட பயணத்தில், உடனடி வெற்றியை விட நீண்டகால நிலைத்தன்மை முக்கியம் என்பதை அவர் தெளிவாக உணர்ந்திருக்கிறார்.
இன்றைய Gen Z தலைமுறை, இடையறாத அரசியல் ஈடுபாட்டை காட்டும் தலைமுறை அல்ல; அவர்கள் ஒரே ஒரு முறை, ஆனால் மிக வலுவான புரட்சியை மட்டுமே நடத்தக்கூடியவர்கள். அந்த மனநிலையை புரிந்துகொண்ட விஜய், தற்போது கிடைத்த ஆதரவை ஒரு உடனடி ஆட்சிக்கான வாய்ப்பாக அல்லாமல், நீண்டகால அரசியல் முதலீடாக மாற்ற முயற்சிக்கிறார். அதனால் தான் உடனடியாக அதிகாரத்தை பிடிக்காமல், ஒரு இடைவெளியைத் தானாகவே உருவாக்கியுள்ளார் தற்போது.
107 என்ற எண்ணிக்கையில் ஆட்சி அமைக்க முயன்றிருந்தால், “Floor Test” எனும் அரசியல் பரிசோதனையில் எளிதில் தடுமாறும் அபாயம் இருந்திருக்கிறது. அப்படியான சூழலில் ஒருமுறை தோல்வியடைந்தால், மீண்டும் ஆட்சி அமைக்கும் வாய்ப்பு கிடைக்காமல் போகும் அபாயத்தையும் அவர் கணித்திருக்கிறார். எனவே, பெரும்பான்மையை உறுதிப்படுத்திய பிறகே அடுத்த கட்டத்தை நோக்கி நகர வேண்டும் என்ற நிதானமான அணுகுமுறையை அவர் எடுத்திருக்கிறார்.
மேலும், தேர்தலுக்கு முன்பும் பின்பும் நடைபெற்ற கூட்டணி அரசியலில் பழைய பாரம்பரிய கட்சிகளில் ஏற்பட்ட மாற்றங்கள், அவற்றின் பலவீனத்தை வெளிப்படுத்தியுள்ளன. தங்கள் வலிமையை நம்பாமல், சிறு கட்சிகளை அதிகமாக சார்ந்திருப்பது அவர்களின் அடித்தளத்தை தளர்த்தியுள்ளது. இந்த சூழ்நிலையை திறமையாக பயன்படுத்தி, விஜயின் அரசியல் அமைப்பு நடுநிலை வாக்காளர்களிடையே “வெற்றி பெறக்கூடிய மாற்று” என்ற மனநிலையை உருவாக்கியுள்ளது.
தற்போதைய தாமதப்படுத்தலிவ் பரவும் வதந்திகள்—முக்கியமாக பெரிய இரு பாரம்பரிய கட்சிகள் கூட்டணி அமைக்கலாம் என்ற தகவல்கள்—அந்தக் கட்சிகளின் ஆதரவாளர்களிடையே நம்பிக்கையின்மையை உருவாக்கும் அபாயத்தை ஏற்படுத்துகின்றன. இது எதிர்கால தேர்தல்களில் ஒரு முக்கிய பிரச்சார கருவியாக மாறக்கூடும்.
இந்த முழு சூழ்நிலையையும் பார்க்கும்போது, விஜய் எடுத்துள்ள இந்த இடைவெளி ஒரு தயக்கம் அல்ல; அது ஒரு திட்டமிட்ட அரசியல் யுக்தி. விரைந்து செயல்படுவதற்குப் பதிலாக, சரியான நேரத்தில் சரியான நகர்வை எடுப்பது தான் அவரது அணுகுமுறை.
ஆனால் எதிர்காலம் சவால்களின்றி இல்லை. புதிய தலைமுறை அரசியல் முகங்களின் எழுச்சி—குறிப்பாக பிரதீப் ரெங்கநாதன் போன்றவர்களின் பிரபலத்தன்மை—மீண்டும் ஒரு “Gen Z” அலை உருவாகும் வாய்ப்பை காட்டுகிறது. அதை முன்கூட்டியே கணித்து, எதிர்கொள்ளும் திறன் தான் விஜயின் அரசியல் பயணத்தின் அடுத்த கட்டத்தை தீர்மானிக்கும்.
முடிவாக, விஜயின் அரசியல் நடைமுறை என்பது வெறும் பிரபலத்தின் பேரில் அமைந்தது அல்ல. அது கணிக்கப்பட்ட நகர்வுகள், நேரத்தைப் புரிந்துகொள்ளும் திறன், மற்றும் நீண்டகால நோக்குடன் வடிவமைக்கப்பட்ட ஒரு அரசியல் விளையாட்டு. இந்த கண்கட்டி வித்தையோடு கூடிய ராஜதந்திரம் தொடர்ந்தால், தமிழக அரசியலில் அது ஒரு புதிய வரலாற்றை படைக்கும்.
— ராஜகிருஷ்ணமூர்த்தி








Comments are closed, but trackbacks and pingbacks are open.