20 கோடி பலே மோசடி ! வடமாநிலத்தில் பதுங்கியிருந்த த.வெ.க. நிர்வாகி அதிரடி கைது !
திமுக தீய சக்தி – த.வெ.க. தூய சக்தி என்பதாக நடந்து முடிந்த 17-வது சட்டமன்றத் தேர்தலுக்கான பிரதான பிரச்சார உத்தியாகவே, த.வெ.க. பயன்படுத்தி வந்தது. ஒருவழியாக ஆட்சியை பிடித்து ஒரு வாரம் கூட முழுமையாக ஆகாத நிலையில், வெற்றிக் கொண்டாட்டத்தின்போது எம்.எல்.ஏ. ஒருவரே பட்டாக்கத்தியை வைத்து கேக் வெட்டிய விவகாரம் தொடங்கி அடுத்தடுத்து சர்ச்சையில் சிக்கி வருகிறார்கள் த.வெ.க.வினர்.
சமீபத்திய சர்ச்சையின் புதிய வரவாக, 20 கோடி ரூபாய்க்கும் மேல் மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் சிக்கியிருக்கிறார், த.வெ.க.வின் மத்திய மாவட்ட செயற்குழு உறுப்பினர் சரவணன். அதிக வட்டி தருவதாக ஆசை காட்டி நூற்றுக்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்களிடம் 20 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் வேட்டையை நடத்தியிருக்கிறார், புதுக்கோட்டையை சேர்ந்த சரவணன்.

இந்த மோசடி தொடர்பாக பாதிக்கப்பட்ட பொதுமக்கள் புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்த நிலையில், போலீசின் நடவடிக்கைக்கு பயந்து வடமாநிலத்தில் பதுங்கி இருந்த த.வெ.க. நிர்வாகி சரவணனை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து விசாரணையை நடத்தி வருகின்றனர்.
தற்போது கைதாகியிருக்கும் சரவணன், அறந்தாங்கி சட்டமன்ற தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்டு வென்ற முகமது பர்வேஸின் வலதுகரமாக செயல்பட்டவர் என்றும் சொல்லப்படுகிறது.
இதற்கிடையில், த.வெ.க. தலைமையில் அமைந்திருக்கும் 17-வது சட்டசபையில், குற்றப்பின்னணி கொண்ட சட்ட உறுப்பினர்களின் எண்ணிக்கையில் முதலிடம் பெற்ற கட்சியாக த.வெ.க. இடம்பெற்றிருக்கிறது என்ற தகவலும் பகீர் கூட்டியிருக்கிறது. தற்போது, சரவணன் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து அவரிடம் பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.
– அங்குசம் செய்திப்பிரிவு.








Comments are closed, but trackbacks and pingbacks are open.