ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூட்டுக்கு எடப்பாடிதான் காரணம் – வெடித்த வைகோ !
ஸ்டெர்லைட் போராட்ட துப்பாக்கி சூடுக்கு எடப்பாடி பழனிசாமிதான் காரணம் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றஞ்சாட்டியிருப்பது, பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
திருச்சி மேற்குத் தொகுதி திமுக வேட்பாளர் கே.என். நேருவை ஆதரித்து, திருச்சி உறையூர் பாண்டமங்கலம் பகுதியில் பிரசாரம் செய்து அவர் பேசியதாவது, “சுயமரியாதை, சமூக நீதி, சகோதரத்துவம், கூட்டாட்சி கருத்தியல் கொண்ட ஸ்டாலின் தலைமையிலான திமுக, கடந்த 5 ஆண்டு காலத்தில் பல்வேறு மக்கள் நலத் திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளது. இதில் அமைச்சர் கே.என். நேரு வியக்கத்தக்க திட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளார்.
ஸ்டெர்லைட் போராட்டத்தில் 13 உயிர்களைக் காவு வாங்கியவர் அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி. இதேபோல, சாத்தான்குளத்தில் தந்தை – மகன் அடித்துக் கொல்லப்பட்டதற்கும் அப்போதைய அதிமுக அரசுதான் பொறுப்பு.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆணவத்துடன் திமுகவை வேருடன் பிடுங்கி எறிவேன் என்றார். இதேபோல, அண்ணாமலையும் கூறியுள்ளார். 75 ஆண்டு கால பாரம்பரிய திமுகவை தோற்கடிப்போம் எனப் பேசினால், அது ஜனநாயக உரிமை. ஆனால், மண்ணுடன் கலந்திருக்கக் கூடிய இயக்கத்தை அழிப்போம் என்கின்றனர்.
தேர்தலில் வெற்றி பெற்று, அடுத்து அமையப் போவது ஸ்டாலினின் திமுக ஆட்சிதான்; கூட்டணி ஆட்சியல்ல. திமுக தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்.
தமிழகத்தில் எந்த மாநிலத்திலும் இல்லாத திட்டங்களை கொடுத்த ஸ்டாலின் திமுக அரசு மீண்டும் அமைய தமிழக மக்கள் உரிய தீர்ப்பு வழங்குவார்கள். எனவே, மீண்டும் முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்க, மீண்டும் அமைச்சராக கே.என். நேரு வர உதயசூரியனுக்கு வாக்களியுங்கள்” என்றார் வைகோ.
நிகழ்வில் திருச்சி மாநகராட்சி மேயர் மு. அன்பழகன், மதிமுக மாவட்டச் செயலாளர்கள் வெள்ளை மண்டி சோமு, மணவை தமிழ்மாணிக்கம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கபிபுர் ரஹ்மான், கம்யூனிஸ்ட் கட்சி சிவா, சுரேஷ், விடுதலை சிறுத்தைகள் கட்சி புல்லட் லாரன்ஸ் மற் றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
– அங்குசம் தேர்தல் செய்திக்குழு.








Comments are closed, but trackbacks and pingbacks are open.