வீடியோ கான்பரன்சிங் கொடுமைகள் – ஜெயில் பரிதாபங்கள் ! தொடர் – 2

1

வீடியோ கான்பரன்சிங் கொடுமைகள் – தமிழகத்தில் செயல்பட்டுவரும் 9 மத்திய சிறைச்சாலைகள் உள்ளிட்டு 142 சிறைகளிலும், பல்வேறு பிரிவிலான தண்டனைக் கைதிகள், விசாரணைக்கைதிகள் தடுப்புக்காவல் கைதிகள் அடைக்கப்பட்டிருக்கிறார்கள்.

எந்தவித தவறும் செய்யாமல், எந்த ஒரு வழக்கிலும் சிக்காமல் ரிட்டயர்மெண்ட் காலம் வரை தண்டனையை அனுபவித்தே ஆக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்ட சூழ்நிலைக் கைதிகளும் இருக்கிறார்கள் என்றால் நீங்கள் நம்புவீர்களா? அவர்கள் வேறுயாருமல்ல. அன்றாடம் ஷிப்டு முறையில் சிறைவாசிகளுடன் மல்லுக்கட்டும் சிறைக்காவலர்கள்தான்.

https://businesstrichy.com/the-royal-mahal/

பழம் தின்று கொட்டைப்போட்ட சிறைக்கைதிகள் சிலர் செய்யும் சேட்டைகளால், உயர் அதிகாரிகளிடம் வசவு சொற்களை வாங்கிக்கட்டிக்கொள்ளும் அவர்களின் நிலை பரிதாபகரமானது தான்.

வீடியோ கான்பரன்சிங்
வீடியோ கான்பரன்சிங்

பல் கட்டும் சிகிச்சையில் நவீனம் காட்டும் KM DENTAL CLINIC

அதில் ஒரு ரகம்தான், திருச்சி மத்திய சிறையில் வீடியோ கான்பிரன்சிங் பிரிவில் பணியாற்றும் சிறைக்காவலர்கள். நாடு முழுவதுமே சிறைகளில் வீடியோ கான்பிரன்சிங் முறையில் நீதிமன்ற வழக்குகளை கையாளும் வகையில் வசதிகள் ஏற்படுத்தப்பட்டன. குறிப்பாக, கோவிட் நடைமுறை காலத்தில் இந்த வசதி பரவலாக விரிவுபடுத்தப்பட்டது.

பழைய நடைமுறையின்படி, விசாரணைக் கைதிகளை பல்வேறு நீதிமன்றங்களுக்கு போலீசாரின் பாதுகாப்போடு நேரில் அழைத்து செல்ல வேண்டும். திருச்சி போன்ற மத்திய சிறைச்சாலைகளில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த கைதிகள் அடைக்கபட்டிருக்கும் நிலையில், அந்தந்த மாவட்ட நீதிமன்றங்களுக்கு சென்றாக வேண்டும்.

ஒரே மாவட்டத்திற்கு சில குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு மேலான கைதிகள் விசாரணைக்கு அழைத்துச்செல்லப்பட வேண்டிய நேர்வுகளில் மட்டுமே வாகன வசதிகள் வழங்கப்படும். ஒருவர் இருவர் மட்டும்தான் எனில், ஆயுதம் தாங்கிய போலீசார் இருவர் பத்திரமாக கூட்டி சென்று வர வேண்டும். இதுபோன்று இரு காவலர்களின் பொறுப்பில் கைதிகளை அனுப்பிவைக்கும் பொழுது கைதி தப்பிச் செல்வது; அல்லது எதிர்த்தரப்பினரின் தாக்குதலுக்கு உள்ளாவது என்ற சிக்கல் இருந்து வருகிறது.

வாகனத்தில் அனுப்பி வைத்தாலும், அதற்கான பெட்ரோல் செலவு, பாதுகாப்புக்கு சில போலீசார்களை அனுப்பி வைக்க வேண்டிய நெருக்கடி, அலைச்சல், பண விரயம் போன்ற சிக்கல்கள் எதிர்படுகின்றன.

வழக்கில் ஆஜர் ஆக...
வழக்கில் ஆஜர் ஆக…

இவற்றையெல்லாம் கருத்திற் கொண்டுதான், வெறுமனே பெயில் நீட்டிப்பு செய்தல், பொதுவான விசாரணைகளை சிறையில் இருந்தபடியே வீடியோ கான்பிரன்சிங் முறையில் செயல்படுத்துவது என்ற முறையை அறிமுகப்படுத்தினார்கள்.
நோக்கம் என்னவோ, உன்னதமானதுதான். ஆனால், அதனை நடைமுறைப்படுத்துவதில் உள்ள நடைமுறைச் சிக்கல்களை புரிந்துகொண்டதுபோல் தெரியவில்லை. இதன் பெருந்துயரங்களை பாவம் சிறை காவலர்கள் தலையில் இறக்கி வைத்துவிட்டார்கள்.

திருச்சி மத்திய சிறையில் அடைபட்டிருக்கும் 1500-க்கும் மேற்பட்ட சிறைவாசிகளுள் சரிபாதி விசாரணைக் கைதிகள்தான். அவர்களுள் அன்றாடம் குறைந்தபட்சம் 100 பேராவது சுழற்சி முறையில் நீதிமன்ற விசாரணைக்கு வீடியோ கான்பிரன்சிங் முறையில் நேரில் தோன்றியாக வேண்டும்.

இதற்கான பட்டியல் தயாரிக்கப்பட்டு, முன்னரே எல்லோருக்கும் முறையாக அறிவிப்பும் செய்துவிடுகிறார்கள். மைக்கில் எத்தனை முறை திரும்பத் திரும்ப அறிவித்தாலும், சம்பந்தப்பட்ட சிறைவாசி நேர்காணல் நடைபெறும் அறைக்கு வந்தாக வேண்டுமே.

கைதிகளைப் பொறுத்தமட்டில் வீடியோ கான்பிரன்சிங் முறையில் நீதிமன்ற வழக்குகளை எதிர்கொள்வதென்பது, வேப்பங்காயை உண்ணக் கொடுப்பதைப் போன்றது. போலீசு வாகனத்திலோ, தனிப்பட்ட இரண்டு காவலர்களுடனோ அனுப்பி வைத்தால், அன்று ஒருநாள் வெளி உலகத்தை ரசித்தபடி, கெத்தாக சுற்றுலா சென்று வருவதைப் போன்ற மகிழ்ச்சியில் திளைத்திருப்பார்கள்.

பெண் கைதிகள் உறவினர்களிடம் வீடியோவில் பேசுவது..
பெண் கைதிகள் உறவினர்களிடம் வீடியோவில் பேசுவது..

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

நீதிமன்றத்தில் மனுபோடாமலேயே பெண்டாட்டி பிள்ளைகளை சொந்தபந்தங்களை பார்க்கும் வாய்ப்பு கிட்டும். உடன்வரும் போலீசாரை மனங்குளிரச் செய்து அன்றொருநாள் நல்ல ஹோட்டலில் நல்ல சாப்பாட்டை ருசி பார்க்கவும் முடியும்.

வீடியோ கான்பிரன்சிங் முறைக்கு அவர்களை கட்டாயப்படுத்தினால், எப்படி வருவார்கள்? ஜட்ஜ் அய்யா கடுப்பாகி, அந்த கைதியை நேரில் வந்து நிறுத்துங்கள் என்று உத்தரவு போடமாட்டாரா? என்ற எதிர்பார்ப்பிலேயே, மிதப்பாக சிறையைச் சுற்றி வருவார்களேயொழிய, அவ்வளவு எளிதாக வீடியோ கான்பிரன்சிங் அறைக்கு சென்றுவிட மாட்டார்கள்.

வீடியோ கான்பிரன்சிங் அறை பரிதாபங்களோ இதைவிடக் கொடுமையானது. பெயருக்கு இரண்டு மானிட்டர் திரை. சிறைப்பயண்பாட்டுக்கான ஒரு கைப்பேசி. இதை வைத்துக்கொண்டுதான் அத்தனை அழைப்புகளையும் எதிர்கொண்டாக வேண்டும். நாளொன்றுக்கு எப்படியும் 50-க்கும் அதிகமான தவறிய அழைப்புகளாவது இருக்கும்.

சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் இருந்து அழைப்பு வரும் நேரத்தில், அந்த வழக்கில் ஆஜராக வேண்டிய கைதி வந்து சேர்ந்திருக்க மாட்டார். அவர் எங்கேயாவது ஹாயாக அமர்ந்துகொண்டு வெட்டிக்கதை பேசிக்கொண்டிருப்பார். அல்லது, ஏதேனும் மரத்தின் நிழலில் மல்லாந்து தூங்கிக்கொண்டிருப்பார். ஆளை வைத்து அலேக்காக தூக்கிக்கொண்டு வருவார்கள்.

ஒரே நேரத்தில் குறைந்தது நூறு கைதிகளாவது அங்கே கூடியிருப்பார்கள். அவர்கள் காத்திருக்க அறை வசதியும் கிடையாது. ஆங்காங்கே மர நிழலில்தான்நின்றாக வேண்டும். மண் தரையில்தான் அமர்ந்தாக வேண்டும். யாருக்கு எந்த நேரத்தில் அழைப்பு வரும் என்றெல்லாம் உத்தரவாதமாக சொல்ல முடியாது. மதியம் 12 மணிக்கே ஆஜரான ஒரு கைதிக்கு, மாலை 5 மணிக்குத்தான் வீடியோ கால் அழைப்பு வரும். அவ்வளவு நேரமும் அங்கேயே இருந்துதான் ஆக வேண்டும்.

முதல்முறையாக சிறை தண்டனை பெறும் கைதிகளைப் பொறுத்தவரையில் இராணுவக்கட்டுப்பாடு போல மணிக்கணக்கில் காத்துக்கிடக்கிறார்கள். பல்வேறு குற்ற வழக்கு பின்னணி கொண்ட சிறை வாழ்க்கையை பழக்கப்படுத்திக் கொண்ட கைதிகளைப் பொறுத்தவரையில், ஒரே சிறையில் வெவ்வேறு பிளாக்குகளில் அடைக்கப்பட்டிருக்கும் தங்களது கூட்டாளிகளை சந்திப்பதற்கான வாய்ப்பாகவே பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

பல ரகசிய திட்டங்களை தங்களுக்குள் கலந்துரையாடிக் கொள்வதற்கான பாதுகாப்பான இடமாகவும் அவர்களுக்கு அமைந்து விடுகிறது என்பதே உண்மை. தனக்கான வீடியோ கான்பிரன்சிங் முடிந்தாலும் நண்பர்களுடன் அரட்டையடித்துவிட்டுதான், ஆர அமர செல்வார்கள். அவசியமற்ற கைதிகளின் ஒன்றுகூடலை சிறை நிர்வாகவே ஏற்படுத்தி தந்திருக்கிறது என்பது மற்றொரு அவலம்.

பட்டியலை திரும்பத் திரும்ப ஒலிப்பெருக்கியில் அவரே அறிவிக்க வேண்டும். வீடியோ காலை எதிர்கொண்டு அந்த கைதியை நேர்நிறுத்த வேண்டும். கூடியிருக்கும் கைதிகளையும் மேய்த்தாக வேண்டும். வராத கைதிகளை தூக்கிவர ஆளை அனுப்பியாக வேண்டும். வீடியோகால் செய்தும் அட்டன்ட் செய்யவில்லையா? என்ன செய்கிறீர்கள்? என்ற நீதிபதிகளின் கோபக்கணைகளுக்கும் முகம் கொடுத்தாக வேண்டும். இவ்வளவையும் இரண்டு சிறைக்காவலர்களும் ஒரு தண்டனை கைதியும்தான் நிர்வாகம் செய்தாக வேண்டும்.

ஜெயில் பரிதாபங்கள் ! தொடர் - 2
ஜெயில் பரிதாபங்கள் ! தொடர் – 2

ஒரே நேரத்தில் மூன்று முதல் ஐந்து நபர்கள் நேர்தோன்றுவதற்கேற்ற திரை வசதிகள்; ஒவ்வொரு திரைக்கும் ஒரு காவலர்; பட்டியல்படி கைதிகளின் உறுதிபடுத்துவதற்கு உதவியாக சிறைக்காவலர் அல்லது தண்டனை கைதிகள் சிலரை நியமிப்பது; ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான கைதிகள் கூடும் வகையில் இருக்கைகள் வசதி ஏற்படுத்துவது உள்ளிட்ட அடிப்படையான அவசியமான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தாமல் வீடியோ கான்பிரன்சிங் முறையை மட்டும் தொடர்வது என்பது கொடுமையானது. அதுவும் இரண்டு சிறைக்காவலர்களின் தலையில் மொத்த சுமையையும் சுமத்துவது என்பது அவர்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையேயன்றி வேறல்ல.

இந்திய நீதி அறிக்கை 2020-ன் ஹரியானா மற்றும் உத்தரகாண்ட் இரண்டு மாநிலங்களில் மட்டுமே அனைத்துச் சிறைகளிலும் வீடியோ கான்ஃபரன்ஸிங் வசதிகள் நடைமுறைப்படுத்தப்பட்டிருப்பதாக குறிப்பிடுகிறது. கர்நாடகாவில் 31 சதவிகிதமும்; மேற்கு வங்கத்தில் 32 சதவிகிதமும்; ராஜஸ்தானில் 38 சதவிகிதமும்; கேரளாவில் 42 சதவிகிதமும் சிறைகளில் வீடியோ கான்ஃபரன்ஸிங் வசதிகள் செயல்படுத்தப்பட்டிருப்பதாவும் குறிப்பிடுகிறது.

தமிழக சிறைச்சாலைகளின் நிலை என்ன தெரியுமா? வெறும் ஒன்பது சதவிகிதத்துடன் மோசமான நிலையில் மிகவும் பின்தங்கியிருக்கிறது. இதன் எடுப்பான உதாரணம்தான் திருச்சி சிறைச்சாலை அனுபவம்.

சிறைகளின் பயணம் (தொடரும்)

இதையும் படிங்கள்…

களியும், கஞ்சியும் அந்தகாலம் – இந்த காலம் ? – ஜெயில் பரிதாபங்கள் தொடர் – 4

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

1 Comment
  1. கட்டுரை சிறப்பு. கட்டுரையின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ள புள்ளிவிவரம் கட்டுரையின் சமூக உணர்வைப் பிரதிபலித்துள்ளது என்பது உண்மையே.

Leave A Reply

Your email address will not be published.