அங்குசம் பார்வையில் ‘எக்ஸாம்’[வெப் சீரிஸ்]
‘வால் வாட்சர்ஸ்’ பேனரில் புஷ்கர்-காயத்ரி தயாரித்து அமேசான் பிரைம் வீடியோ ஓடிடியில் மே.15-ஆம் தேதி ரிலீசாகியுள்ளது இந்த வெப் சீரிஸ். மொத்தம் ஏழு எபிசோடுகள், கிட்டத்தட்ட நான்கு மணி நேரம் ஓடுகிறது. திரைப்பட இயக்குனர் ஏ.சற்குணம் டைரக்ட் பண்ணியுள்ள இந்த சீரிஸில் துஷாரா விஜயன், அதிதி பாலன், அப்பாஸ், நரேன் மணி, ‘வாழை’ ஜானகி, மீனாள், , துரை சுதாகர், ஷரவண சக்தி, வசுந்தரா உட்பட ஏராளமானோர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு : அருண் அமரேந்திரன், இசை : சாம் சி.எஸ்., எடிட்டிங் : ரிச்சர்ட் கெவின், ஸ்டண்ட் : திலீப் சுப்பராயன், காஸ்ட்யூம் டிசைனர்: ஸ்ரீனிவாசன் காயத்ரி, பி.ஆர்.ஓ. : யுவராஜ்.
பத்து ஆண்டுகளுக்கு முன்பு செல்வி. ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சியில் நடந்த டிஎன்பிஎஸ்சி எக்ஸாம் மோசடியை இப்போது சொல்ல வந்திருக்கிறார் டைரக்டர் ஏ.சற்குணம். அப்போது பரீட்சை வினாத்தாள் பண்டல்களை ஏற்றிக் கொண்டு சென்ற ஒரு வேன் கடத்தப்பட்டு, ஒரு மறைவிடத்தில் விடைகள் திருத்தப்பட்டு மாபெரும் மோசடி நடந்தது. பல லட்சம் திறமைசாலிகளை தெருவில் அலையவிட்டது. அந்த நிஜ சம்பவத்திற்கு பட்டி டிங்கரிங் அடித்து இந்த ‘எக்ஸாம்’ சீரிஸை படைத்திருக்கிறார் சற்குணம்.
படைப்பு ரீதியாகப் பார்க்கும் போது அதிகாரவர்க்கத்தின் பண வெறியால் நன்றாகப் படித்து பரீட்சை எழுதியும் தங்கள் வாழ்க்கையைத் தொலைத்த ஏழை, நடுத்தர வர்க்கத்தின் கண்ணீர் நம் கண் முன்னே நிழலாடுகிறது. ஆனால் இந்தக் கதைக்காக உதகமண்டலத்தை உதகம் மலையாக்கி, அங்கே உள்ள பைக்காராவை தைக்காராவாக்கி கதையை ஆரம்பிக்கிறார் இயக்குனர் ஏ.சற்குணம். அப்புறம் நாமக்கல்லை ராமக்கல் என்கிறார். இதெல்லாம் ஏன்? எதற்கு? இப்பல்லாம் சினிமாவிலேயே நிஜ ஊர்களை நிஜமாகத் தான் காட்டுகிறார்கள். அப்படி இருக்க ஏ.சற்குணம் மட்டும் ஏன் பயப்படணும்? ஏன்னா கார்ப்பரேட் கம்பெனியான அமேசான் தான்.
சரி…இப்ப சீரிஸைப் பத்தி எழுதுவோம். தைக்காராவுக்கு வரும் டிஎஸ்பி. மரமல்லியை [ அதிதி பாலன்] கடத்துகிறார் ஜான்சி [துஷாரா விஜயன்]. இந்தக் கடத்தலுக்கு ஸ்கெட்ச் போட்டுக் கொடுப்பவர் அப்பாஸ்.[ அப்பாஸ் ஏன் துஷாராவுக்கு உதவ வேண்டும் என்பதற்கான ஃப்ளாஷ்பேக் கச்சிதம்] அந்த மரமல்லி டிஎஸ்பியாக தைக்காராவுக்குப் போகிறார் ஜான்சி. பெரிய போலீஸ் அதிகாரியைக் கடத்தி, அதே இடத்தில் ஆள்மாறாட்டமாக துஷாரா எண்ட்ரியாவது ஏன்? டிஎஸ்பியாக துஷாரா விஜயன் எண்ட்ரியானதை எஸ்.பி.யால கண்டு பிடிக்க முடியாதா? டிபார்ட்மெண்டின் மேலதிகாரிகளுக்கு இது எதுவுமே தெரியாதா? என்னய்யா கதை விடுறீங்க என நாம் நினைப்போம். ஆனால் இதற்கான துஷாரா ஃப்ளாஷ்பேக்கும் காரணமும் நம்பும்படி செய்தது தான் சற்குணத்தின் சாமர்த்தியம். அதே சமயம் இன்ஸ்பெக்டர் துரை சுதாகருக்கு ஆரம்பத்திலேயே இவர் உண்மையான மரமல்லி இல்லை என்பது தெரிந்துவிட்டாலும், ஏன் இந்த ஆள் மாறாட்டம் என்பதைத் துப்பு துலக்க களம் இறங்கும் காட்சிகளை கடைசி எபிசோடில் காட்டி துஷாராவைக் காப்பாற்றும் நல்ல போலீசாக துரை சுதாகர் மனதில் பதிகிறார்.
இந்த சீரிஸில் அதிதி பாலனுக்கு கடைசி இரண்டு எபிசோடில் தான் வேலையே. மற்றபடி அதிகமான எபிசோடுகளை தூக்கிச் சுமப்பது துஷாரா விஜயன் தான். ஸ்டண்ட் சீக்வென்ஸிலும் தூள் கிளப்பியுள்ளார் துஷாரா விஜயன். முதல் எபிசோடில் வரும் மீனாள், அவரது மகள், மகனாக வரும் கேரக்டர்கள் தான் க்ளைமாக்ஸ் ட்விஸ்ட். கோச்சிங் செண்டர் மோசடிப் பேர்வழியாக நரேன் மணி தான் மீனாளின் மகன். இவரது அக்கா வசுந்தரா தான் மீனாளின் மகள்.
இந்தக் கதை ஐந்து எபிசோடுகள் தான் தாங்கும் என்பது பார்வையாளனுக்கு நல்லாவே தெரியும். ஆனால் ஏழு எபிசோடுகள் என்பது அமேசானின் கண்டிப்பான விதி என்பதால் இழுஇழு என இழுத்து நம்மை டயர்டாக்கிவிட்டார்கள். இருந்தாலும் இப்போது நாடே சந்தி சிரித்து 22 லட்சம் மாணவர்களின் வாழ்க்கையில் விளையாடியிருக்கும் ‘நீட்’ வினாத்தாள் லீக் கேவலம் அம்பலப்பட்டிருக்கும் இந்த நேரத்தில் இந்த ‘எக்ஸாம்’ வந்திருப்பது மிகவும் பொருத்தமானதே.
அங்குசம் பார்வையில் ‘எக்ஸாம்’[வெப் சீரிஸ்] 45/100
— ஆண்டவர்








Comments are closed, but trackbacks and pingbacks are open.