ஜோசப் விஜய்யும் திருச்செந்தூர் முருகரும் கல்லா கட்டும் கள்ளக்கும்பலும்!
நாளொரு ரீல்ஸும் பொழுதொரு கூத்துமாக நடந்து கொண்டிருக்கிறது மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான தவெக கூட்டணி ஆட்சி. இன்னைக்கு என்ன ரீல்ஸ் போடப்போறாய்ங்களோங்கிற பீதியிலேயே மக்களுக்கு பொழுது விடியுது. அதிலும் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா, தமிழ்நாட்டில் தொழில் தொடங்க வருமாறு முதலீட்டாளர்களுக்கு அழைப்புவிடுத்து போட்ட ரீல்ஸை அபத்தம்னு சொல்றதா? கேவலம்னு சொல்றதான்னு நமக்கும் தெரியல, நாட்டு மக்களுக்கும் புரியல. அவருடைய உடையும் அலங்காரமும் உடல்மொழியும் இதெல்லாம் இந்தியாவே கண்டிராத கண்கொள்ளாக் காட்சி.
சரி இப்ப கரண்ட் சிச்சுவேஷனுக்கு வருவோம். நீங்கெல்லாம் ரீல்ஸ் போடுறீகளே…நாங்க மட்டும் இளிச்சவாயனுகளா? ரியலா…லைவ்வா கல்லா கட்டுறோம் பாருன்னு ஒரு கும்பல் களத்தில் இறங்கியிருக்கு.
அதாவது மக்களே… ‘பிக் ஷாட் இந்தியா’ என்ற பெயரில் ஒரு கும்பல், நாளை [ மே.30] வைகாசி விசாகத்தை முன்னிட்டு சென்னை பூந்தமல்லி அருகே இருக்கும் ஈவிபி சினிமா ஸ்டுடியோவில் ”ஸ்ரீ சத்ரு சம்ஹார ஸ்ரீ ஷண்முக மஹா ஹோமம் அழைப்பிதழ்” என நாலு பக்கங்களில் ஒரு நோட்டீசை அடித்து சென்னை மாநகரம் முழுக்க புழக்கத்தில் விட்டுள்ளது. அதில் இருக்கும் ‘கேஷ் பாயிண்ட்’ [ அதாங்க கல்லாப் பெட்டி] பல இருந்தாலும் முக்கியமான பாயிண்ட் 1. பெயர், நட்சத்திரம், ராசி சொல்லி அர்ச்சனை செய்ய 2 நபர்களுக்கு ரூ.100, பாயிண்ட் 2. ஹோமத்தில் அருள்பாலிக்கும் திருமுருகருக்கு தங்களது கைகளால் பன்னீர் அபிஷேகம் செய்ய நபர் ஒருவருக்கு ரூ.,300, பாயிண்ட் 3. ஹோமத்தில் அமர்ந்து சிறப்பு வழிபாட்டில் கலந்து கொள்ள நபர் ஒருவருக்கு ரூ.1,500, பாயிண்ட் 4. ஹோமத்தில் நேரடியாக கலந்து கொள்ள இயலாதவர்கள், முருகருக்கு நடக்கும் அர்ச்சனை மற்றும் அபிஷேகத்தை ஆன்லைனில் லைவ்வாக பார்க்க நபர் ஒருவருக்கு ரூ.660, பாயிண்ட் 5. ஹோமத்தில் பூஜை செய்யப்பட்ட முருகர் சிலைகள் 2, 4, 6, 8, 10, 12 இன்ச் சைஸ்களில் கிடைக்கும். சைஸுக்குத் தகுந்தபடி கட்டணம் வசூலிக்கப்படும்.
அடுத்து 6-ஆவது பாயிண்ட் தான் அதிமுக்கியமான பாயிண்ட், மாபெரும் கலெக்ஷனை அள்ளும் கல்லாப் பெட்டி பாயிண்ட்.
‘மாண்புமிகு தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அவர்கள் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்குச் சென்று செய்த ஸ்ரீ சத்ரு சம்ஹார ஹோமத்தை வைகாசி விசாகத்தன்று நடத்துவதால், ஜோசப் விஜய் அவர்கள் நெற்றியில் வைத்திருக்கும் ஸ்ரீ சத்ரு சம்ஹார ஹோம ரஷை, ஹோம மை, இவையிரண்டும் ஹோம குண்டத்தில் பூஜிக்கப்பட்டு முன்பதிவு செய்தவர்களுக்கு கூரியர் மூலம் அனுப்பி வைக்கப்படும். இதற்கு கட்டணம் ரூ.360. [ ஜோசப் விஜய் நெற்றியில் வைத்த ஹோம மை உங்களுக்கு எப்படிடா கிடைச்சுதுன்னு எவனாவது கேள்விகேட்பானா? எவனும் கேட்கமாட்டான்}
2026-லும் இந்த மாதிரி கும்பல் இருக்கும் என்பதைக் கணித்துத் தான் 70 ஆண்டுகளுக்கு முன்பே ‘பராசக்தி’யில் தலைவர் கலைஞர், “கோவில் கூடாது என்பதற்காக அல்ல, கோவில் கொடியவர்களின் கூடாரமாகிவிடக்கூடாது என்பதற்காகத் தான்” என வசனம் எழுதினார்.
இதைவிட உக்கிரமாக நாம் என்ன எழுதிவிட முடியும்?
— கரிகாலன்







Comments are closed, but trackbacks and pingbacks are open.