தெய்வம் நின்று கொல்லும்!
1991-ஆம் ஆண்டு ஜெயலலிதா முதன்முறையாக முதல்வர் ஆன போது தலைமைச் செயலகத்தில் ஒரு மாற்றம் நடந்தது. செயின்ட் ஜார்ஜ் கோட்டையின் முதன்மை நுழைவு வாயில் செல்லவும் வெளியேறவும் தனித் தனியாக வழிகள் இருக்கும். ஜெயலலிதா முதல்வர் ஆனபோது உள்ளே நுழையும் வழியை ஜெயலலிதாவுக்கு மட்டும் என மாற்றிவிட்டார்கள். ராணுவ கட்டுப்பாட்டில் கோட்டை இருந்தால் ராணுவத்தினருக்கு விதிவிலக்கு. அந்த வழியாகத்தான் ஜெயலலிதாவின் கான்வாய் வரும் போகும். வெளியே செல்லும் வழியில்தான் மற்ற வாகனங்களும் வரவும் போகவும் முடியும்.
ஆணவம் பிடித்தவர் என விமர்சிக்கப்பட்ட அந்த ஜெயலலிதா 2001-ல் மீண்டும் ஆட்சிக்கு வந்த போது ஒரு சம்பவம் நடந்தது.
2003-ல் தலைமைச் செயலகம் கோட்டை கொத்தளத்தில் சுதந்திரக் கொடியை ஏற்றி வைத்துப் பேசிய அன்றைய முதல்வர் ஜெயலலிதா, ‘’தாயின் மணிக்கொடி பட்டொளி வீசிப் பறந்து கொண்டிருக்கும் இந்தக் கொடிமரத்தின் கீழ் நின்று கொண்டிருக்கிறேன். இந்தக் கொடிக் கம்பம் கோட்டையில் இருக்கிறது. கோயிலிலும் கொடிக் கம்பம் உண்டு. ஒரு வகையில் பார்த்தால் தலைமைச் செயலகம் கூட ஒரு திருக்கோயில்தான். இங்கே குடி கொண்டிருக்கும் தெய்வம் எது? இங்கே வழிபாடு உண்டா? யாருக்கு?
இங்குக் கண்ணுக்குத் தென்படாத தெய்வம் இருக்கிறது. யார் அந்தத் தெய்வம்? பொதுமக்கள்தான் அந்தத் தெய்வம்! அந்தத் தெய்வத்துக்கு வழிபாடு செய்ய வந்திருப்பவர்கள்தான் நாம் எல்லோரும். நம்முடைய கடமையைச் செய்வதே நாம் அந்தத் தெய்வத்துக்குச் செய்கின்ற வழிபாடு. கடைநிலை ஊழியர் முதல் முதல்வர் வரை எல்லோரும், ‘பொது மக்கள்’ என்னும் தெய்வத்துக்குப் பணிபுரிய வந்தவர்கள். நான் எடுக்கும் எந்த முடிவும் அந்த நம்பிக்கையின் அடிப்படையில்தான் எடுக்கப்படுகிறது. நம்மை வாழ வைக்கும் தெய்வங்களாகிய பொதுமக்களுக்கு, நமது கடமை என்னும் வழிபாட்டை முறையாக ஆற்றத் தவறினால், ‘தெய்வம் நின்று கொல்லும்’ என்னும் முதுமொழி நிஜமாகி விடும். மக்கள் பணிக்காகத்தான் அலுவலகங்கள். அலுவலர்கள். நாம் எல்லோருமே. இந்தத் திருப்பணிக்கு மனம், மொழி, செயல் என்னும் மூன்றாலும் நம்மை அர்ப்பணித்துக் கொள்வோம்’’ என்றார்.
தலைமைச் செயலகம் என்பது வெறும் அரசு அலுவலகம் அல்ல, அது மக்களுக்குச் சேவை செய்யும் ஒரு புனிதமான கோயில் என்ற அர்த்தத்தில் அன்றைக்குப் பேசினார் ஜெயலலிதா. ’’மேடம் ஜெயலலிதா கொண்டு வந்த திட்டம் 100 யூனிட் மின்சாரம்’’ என திருச்சி கிழக்கு தொகுதியில் பேசிய விஜய், ஜெயலலிதாவின் இந்த உரையை எடுத்துப் படிக்க வேண்டும்.
தமிழ்நாட்டின் நிர்வாகத்தை நடத்தும் இடம் தலைமைச் செயலகம். அங்கே மக்கள் வருவதற்குக் கட்டுப்பாடுகள். அனுமதி பெற வேண்டும் என்ற உத்தரவுகள். அகம்பாவம் பிடித்தவர் என வர்ணிக்கப்படும் அந்த ஜெயலலிதா கூட பொது மக்களைத் தலைமைச் செயலகத்திற்குள் நுழையக் கட்டுப்பாடுகளைப் போட்டதில்லை. தெய்வம் நின்று கொல்லும்!
– எஸ்.ஏ.எம்.பரக்கத் அலி – பத்திரிகையாளர்







Comments are closed, but trackbacks and pingbacks are open.