பிறக்கும் குழந்தைகளுக்கு 15 வயது வரை 25 சதவிகிதம் மருத்துவ கட்டண சலுகை…!
திருச்சி, சமயபுரம் டோல் பிளாசா அருகே சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. பெரம்பலூரை தலைமை இடமாகக் கொண்டு இயங்கி வரும் தனலட்சுமி சீனிவாசன் குழுமத்திற்கு சொந்தமான இம்மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மூளை நரம்பியல், இதயம், கல்லீரல் உள்ளிட்ட பல்வேறு நோய் பிரச்சனைகளுக்கு உயர்தர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே, இம் மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு ரூ. 5000 பணமாகவும், இலவச தடுப்பூசியும் செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், இன்றைய தினமான ஜூன் 15ம் தேதி முதல், சமயபுரம் சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு 15 வயது வரை மேற்கொள்ளப்படும் சிகிச்சைகளுக்கு 25 சதவீதம் கட்டண சலுகை வழங்கப்படும் என மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது., மருந்து மாத்திரைகள், மருத்துவர்களின் ஆலோசனைகள், தங்கி சிகிச்சை பெறும் பட்சத்தில் அறை வாடகை, ஆபரேஷனுக்கான செலவு என அனைத்திற்கும் இந்த 25 சதவிகித கட்டண சலுகை பொருந்தும். இதற்காக இங்கு குழந்தை பிறக்கும் போதே அவர்களுக்காக பிரத்தியேக சலுகை அட்டை வழங்கப்படும். அதன் அடிப்படையில் பொதுமக்கள் இச்சலுகையை பெற்றுக் கொள்ளலாம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி திமுக எம்எல்ஏவான எஸ். கதிரவனுக்கு சொந்தமான இம்ம மருத்துவமனையில் சிகிச்சை பெற வசதியாக திருச்சி மாவட்டம் முழுவதும் இலவச பேருந்து சேவை, தொகுதி மக்களுக்கான இலவச மருத்துவம் ஆகியவை வழங்கப்படும் நிலையில், இங்கு பிறக்கும் குழந்தைகளுக்கு மருத்துவ செலவில் 25 சதவீத கட்டண சலுகை என்பது பொதுமக்களிடையே அமோக ஆதரவை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.






Comments are closed, but trackbacks and pingbacks are open.