‘நிபா, கோவிட்டைவிட கொடிய வைரஸ்!
1990 வரை செல்வி.ஜெயலலிதாவாக இருந்தவர் 91-ல் தமிழ்நாட்டின் முதல்வரான பிறகு புரட்சித்தலைவியாக மாறினார். அவர் முதல்வராக இருந்த ஐந்து ஆண்டுகளில் [ 91-96 ] பக்தி, விசுவாசம் என்ற பெயரில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்கள், எம்.பி.க்கள், அல்லுசில்லுகள் அரங்கேற்றிய கேவலக்கூத்துகளெல்லாம் சகிக்க முடியாதவை. பெண் எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்கள் உடம்பில் ஒட்டுத்துணி இல்லாமல் வேப்பிலை ஆடை கட்டிக் கொண்டு, மாரியம்மன் கோவில்களில் ஆடியது, தீச்சட்டி ஏந்தியது, மண் சோறு சாப்பிட்டது, அங்கப் பிரதட்சணம் என்ற பெயரில் ஈர ஆடையுடன் தரையில் உருண்டது, இதெல்லாம் அதிமுக மாதர்குல மாணிக்கங்களின் மகாத்மியங்கள். அதே கட்சியின் ஆண்குல சிங்கங்களோ, முருகன் கோவில்களில் அலகு குத்துவது, பறவைக் காவடி எடுப்பது, கூட்டம் கூட்டமாக உட்கார்ந்து மொட்டையடிப்பது என தினமும் ஏதாவது ஒரு பக்திப் பராக்கிரமத்தை வெட்கமே இல்லாமல் வீதிகளில் நடத்திக் காட்டினார்கள்.
இதெல்லாம் போதாது என நினைத்து இந்து மதத்தின் பெண் கடவுள்களையெல்லாம் ஜெயாவுடன் ஒப்பிட்டு அவர்கள் ஒட்டிய போஸ்டர்கள் எல்லாமே மெகா ’புரட்சி’ . இந்தப் புரட்டுப் புரட்சியின் உச்சம் தான் ஜெயலலிதாவை மேரிமாதாவாக்கி போஸ்டர்கள், கட்-அவுட்டுகள் வைத்த பெருங்கொடுமையாக அரங்கேறியது.
இதைவிட பெருங்கொடுமை அப்பல்லோவில் ஜெயலலிதா அட்மிட்டாகியிருந்த 75 நாட்களும் நடந்தது. அறிவுக்குப் புறம்பான அத்தனை அவலங்களையும் கூச்சநாச்சமில்லாமல் அரங்கேற்றினார்கள் அதிமுகவினர். அப்பல்லோ வாசலிலேயே டிசைன் டிசைனாக யாகம், பூஜை, பரிகாரம் என சகல வித்தைகளையும் காட்டினார்கள் அதிமுகவினர்.
இந்த கழிசடைத் தனங்களையெல்லாம் கடந்த பத்து ஆண்டுகளாக பார்க்காமல் நிம்மதியாக இருந்தனர் தமிழ்நாட்டு மக்கள். ஆனால் அப்படியெல்லாம் நிம்மதியாக இருக்க விட்ருவோமா என கிளம்பியுள்ளது ‘நாற சக்தி’யான தவெக கும்பல்.
சென்னை வடபழனி, தியாகராய நகர் போன்ற ஏரியாக்களில் நாம் பார்த்த போஸ்டர் தான் இது.
“மனு கொடுக்கவே தயங்கியவர்களை மனு வாங்கும் நிலையில் உயர்த்தியவர்” , “பலரின் தலை எழுத்தை மாற்றியவர்” என சில வரிகளைப் போட்டு ஜோசப் விஜய்யை பிரம்மாவாக மாற்றி ஒட்டப்பட்டிருந்தது அந்த போஸ்டர்.
ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு பரவிய கொடிய ‘கோவிட் வைரஸ்’ உலகத்தையே ஸ்தம்பிக்கச் செய்தது. ஒட்டு மொத்த மக்களின் வாழ்க்கையையே புரட்டிப் போட்டது. இப்போது கூட அண்டை மாநிலமான கேரளாவை அச்சுறுத்தி வருகிறது ‘நிபா வைரஸ்’.
இந்த இரண்டு வைரஸ்களைவிட கொடூரமான ‘போஸ்டர்’ வைரஸ்களை சென்னையில் பரப்ப ஆரம்பித்திருக்கிறார்கள் தவெகவினர். இந்த பேராபத்து மிக்க வைரஸ் பரவல் எதில் போய் முடியுமோ?
“பரமபிதாவே இந்தப் பாவிகளை ரட்சிக்காதீர்” என ஏசுவிடம் கதறுவதா? “தாயே இந்த சண்டாளர்களை தண்டிக்காமல் விட்டுவிடாதே” என கொல்லூர் மூகாம்பிகை முன்பு விழுந்து வணங்குவதா?
அவரவர் இஷ்ட தெய்வங்களிடம் முறையிடுங்கள்.
— கரிகாலன்







Comments are closed, but trackbacks and pingbacks are open.