அங்குசம் பார்வையில் ‘லக்ஷ்மிகாந்தன் கொலை வழக்கு’
தயாரிப்பு: ‘2 எம் சினிமாஸ்’ கே.வி.சபரீஷ், இணைத் தயாரிப்பு & டைரக்டர்: தயாள் பத்மநாபன், திரைக்கதை –வசனம்: கவிதா பாரதி, ஆர்டிஸ்ட்: வெற்றி, பிரிகிடா சாகா, ரங்கராஜ் பாண்டே, சித்தப்பு சரவணன், மாறன், லிஸி ஆண்டனி, ஸ்ரீகன்யா பாரதி, கவிதா பாரதி, சுப்பிரமணிய சிவா, அருவி மதன். ஒளிப்பதிவு: எம்.வி.பன்னீர்செல்வம், இசை: தர்புகா சிவா, எடிட்டிங்: பூபதி வேதகிரி, பிஆர்ஓ: ரேகா
கொலைக் குற்றவாளி அருவி மதன், தான் செய்த குற்றத்தை ஒப்புக் கொண்டதால் அவருக்கு மரணதண்டனை தீர்ப்பு அளிக்குமாறு நீதிபதி ஸ்ரீகன்யாபாரதியிடம் வாதிட்டு அமர்கிறார் அரசு வக்கீல் கேபிள் சங்கர். மறுநாள் தீர்ப்பு என்பதால் முதல் நாள் இரவு அறிவுமதி என்பவர் எழுதிய ஒரு புத்தகத்தை படிக்கிறார் நீதிபதி. ஃப்ளாஷ் பேக் ஓப்பன். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம். படித்த படிப்புக்கு அரசாங்க வேலை தான் வேண்டும் என காத்திருக்கிறார் அறிவுமதி ( வெற்றி). கூலி வேலை செய்து குடிகார புருஷனையும் வேலை இல்லாத மகனையும் காப்பாற்றுகிறார் லிஸி ஆண்டனி. அந்த ஊர் பண்ணையார் லக்ஷ்மி காந்தன் ரெட்டியாரிடம்( கவிதா பாரதி) நிலத்தை அடமானம் வைத்து வாங்கிய கடனுக்கு லிஸியால் வட்டி கட்ட முடியவில்லை.
இதனால் மாறன் ஐடியாப்படி திருட்டு தொழிலில் இறங்குகிறார் வெற்றி. ஒரு நாள் லக்ஷ்மி காந்தன் வீட்டில் திருடப் போகும் போது, லக்ஷ்மி காந்தனையே கொலை செய்யும் நிலை ஏற்படுகிறது வெற்றிக்கு. செய்த கொலையை ஒத்துக் கொண்டதால் வெற்றிக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டு தண்டனையும் நிறைவேற்றப்படுகிறது. இதான் இந்த லக்ஷ்மி காந்தன் கொலை வழக்கு படத்தின் கதை. தனிநபர் ஒருவனின் கோபத்தில் நிகழும் கொலைக்கு அரசாங்கம் செய்யும் கொலை தீர்வாகாது என்பதைத் தாண்டி பல விவாதங்களையும் உருவாக்கியுள்ளது என்பதை மறுப்பதற்கில்லை தான்.
ஆனால் இடைவேளை வரையும் அதன் பிறகு க்ளைமாக்ஸுக்கு பத்து நிமிடங்கள் முன்பு வரையும் டாக்குமெண்டரித்தனமாக படம் நகர்வதால் பார்வையாளனுக்கு சலிப்பு ஏற்படும். அந்த கடைசி பத்து நிமிடங்கள் நம்மை நிமிர்ந்து உட்கார வைத்திப்பது கவிதா பாரதியின் சுளீர் வசனங்கள் தான். அதுகூட சிறை அதிகாரி ரங்கராஜ் பாண்டே வுக்கும் மரணதண்டனைக் கைதி வெற்றிக்கும் இடையே நடக்கும் உரையாடல், ஏதோ ரேடியோ நாடகம் கேட்டது போல ஆகிவிட்டது. தூக்கில் போடுவதற்கு பதினைந்து நிமிடங்கள் முன்பு “இவனை விட்டுட்டு நான் போகமாட்டேன்” என வெற்றியைக் கட்டிப் பிடித்து லிஸி ஆண்டனி கதறி அழுவதெல்லாம் பக்கா நாடகம். அதே ஃபேஸ் எக்ஸ்பிரஷன், அதே பாடி லாங்குவேஜ் தான் வெற்றியின் பெர்மனென்ட் பிராண்ட் போல.
இவருக்கு ஜோடியாக பிரிகிடா சாகா இருக்கிறார். அவ்வளவு தான். அந்த ஊர் வாத்தியாராக சித்தப்பு சரவணன். இந்த கேரக்டர் எதுக்குன்னு நமக்கு தெரியாத மாதிரி சரவணனுக்கும் தெரியல போல. தர்புகா சிவா இசையில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பாடல் மனசை இதமாக்குகிறது. படத்தில் சினிமாவுக்கான டோன் இருக்குதுன்னா…. அது நீதிபதி ஸ்ரீகன்யாபாரதி யார்? அருவி மதனுக்கு அவர் எழுதிய தீர்ப்பு என்ன என்பது தான்.
அங்குசம் பார்வையில் ‘லக்ஷ்மிகாந்தன் கொலை வழக்கு’ 39/100
— ஆண்டவர்







Comments are closed, but trackbacks and pingbacks are open.