புதிய டெக்னிக்கில் இலஞ்சம் : சமயபுரம் கோயிலில் நடக்கும் கூத்து ! ஷாக் ரிப்போர்ட் !
”தூணிலும் இருப்பான். துரும்பிலும் இருப்பான்” என்ற பழமொழி, கடவுளின் இருப்பைக் குறிக்கிறதோ இல்லையோ, இலஞ்சம் – ஊழலுக்கு கச்சிதமாக பொருந்தும்போல. என்னதான், பொதுமக்களிடையே விழிப்புணர்வு, இலஞ்ச ஒழிப்பு போலீசாரின் அதிரடிகள், திரும்பிய பக்கமெல்லாம் சிசிடிவி கண்காணிப்பு என வைத்தாலும் அதற்கும் அசராத கூட்டம் இன்னும் இருக்கத்தான் செய்கிறது என்பதை நிரூபிக்கிறது, இந்த சம்பவம்.
தமிழகத்தின் மிகவும் பிரசித்தி பெற்ற அம்மன் கோவில்களில் முதன்மை கோவிலாக விளங்கும் திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் அலுவலர்கள் முதல் கோவில் பணியாளர்கள் வரை தரிசனத்திற்காக வரக்கூடிய பக்தர்களிடம் எவ்விதத்திலும் சிக்கிக் கொள்ளாதபடி புதிய டெக்னிக்கை கையாண்டு பணம் பெறுவதாக எழுந்திருக்கும் பகீர் குற்றச்சாட்டு பரபரப்பை கிளப்பியிருக்கிறது.
இதே கோவிலில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோவில் பணியாளர் ஒருவர் பக்தர்களிடம் கட்டண வரிசையில் நின்று கூடுதலாக பணம் கேட்டதாக வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவியது இந்நிலையில் தற்போது சமயபுரம் கோவிலில் தரிசன டிக்கெட் கவுண்ட்டர்களில் பணிபுரியும் கண்காணிப்பாளர்கள் முதல் கடை நிலை ஊழியர்கள் வரை அவர்களுக்குள்ளாகவே கட்டண தரிசன வரிசையில் அதிகமான கோயில் பணியாளர்கள் நின்று கொண்டு கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி தனக்கு வேண்டியவர்கள் என்றும் , முக்கிய நபர்கள் என்றும் கூறிக்கொண்டு வெளியூர் நபர்களை உள்ளே தரிசனத்திற்கு அனுமதித்து தனது செல்போன் மூலம் கோவிலில் உள்ளே உள்ள நபரிடம் தான் அனுப்பி வைத்த நபர்களிடம் G.Pay மூலம் பணம் பெற்று வருவதாக பகீர் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கோயில் இணை ஆணையர் நேரடியாக ஆய்வு செய்து வரும்போதிலும் யாரிடமும் சிக்காதவாறு புதிய உத்தியைக் கையாண்டு பணமில்லா பரிவர்த்தனை மூலம் கல்லா கட்டி வருவதாகவும் , இத்தகைய தொகை ஒரு நாளில் ஒரு நபருக்கு ஆயிரக்கணக்கில் வருமானம் வருவதாகவும் இதில் டிக்கெட் கவுண்ட்டரில் உள்ள கண்காணிப்பாளர்களும் உடந்தையாக இருப்பதாகக் கூறப்படுகிறது. இதற்கு முன்பு கிராக்கி அடித்தல் என்ற அடாவடியான நடைமுறை இருந்து வந்த நிலையில் தற்போது ஜி பே மூலம் அனைவருக்கும் கமிஷன் சென்று விடுகிறதாம். இதில் யாரும் சிக்கிவிடக் கூடாது என்பதற்காக அவர்கள் பணி செய்வதற்கான அடையாள அட்டையை கழுத்தில் மாட்டிக் கொள்வதே கிடையாது .
கோயில் கண்காளப்பாளர்கள் முதல் கட்டண தரிசன டிக்கெட் கவுண்ட்டரில் தினமும் காலை முதல் இரவு வரை பணி செய்யும் கண்காணிப்பாளர் முதல் கடைநிலை ஊழியர்களின் செல்போனில் உள்ள G-pay அக்கவுண்ட் கணக்கினை அதிகாரிகள் ஆய்வு செய்தால் அன்றைய தினம் ஒரு நாளைக்கு எவ்வளவு வருமானம் அவர்கள் பெறுகிறார்கள் என்பது வெட்ட வெளிச்சமாகி விடும் என்கிறார்கள் பக்தர்கள்.
மேலும் கோவிலில் படி தரிசனம் என்ற நிகழ்வில் தனிப்பட்ட முறையில் இதே போன்று பணம் பெறுகிறார்கள் என்ற குற்றச்சாட்டு அடிப்படையில் நிறுத்தப்பட்டது. தற்போது படி தரிசன முறையிலும் முறைகேடு நடப்பதாக புகார் எழுத்துள்ளது. கோவில் கண்காணிப்பாளர்கள் அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பணியிடத்தில் சென்று கண்காணிக்காமல் வருமானம் பார்ப்பதையே குறிக்கோளாகக் கொண்டு செயல்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனையடுத்து விரைவில் அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் சமயபுரம் கோவிலில் ஆய்வு செய்ய இருப்பதாகவும், ஏற்கனவே கோயில் குறித்த பல ஊழல் தகவல்கள் அமைச்சரிடம் சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. நடவடிக்கை எடுப்பாரா அமைச்சர்?
– அங்குசம் புலனாய்வுக்குழு.







Comments are closed, but trackbacks and pingbacks are open.