குருட்டு குரங்கு, நொண்டி கழுதை, செவிட்டு நரி போன்ற சொல்லாடல்களை அவசியம் தவிர்க்க வேண்டும் என்பதை முந்தைய தொடரில் பார்த்தோம். எனெனில், ஒரு சமூகத்தின் வீழ்ச்சிக்கும், அடுத்தத் தலைமுறையின் வளர்ச்சிக்கும் தீங்கு விளைவிக்கக் கூடிய இப்படிப்பட்ட வீரியம் மிகுந்த சொற்களால் கட்டமைக்கப்பட்ட கதைகளை எழுதாமல் இருப்பதே சிறந்தது.
ஊனமுற்றோர் என்பதை மாற்றுத்திறனாளி என்றும், குருடு என்பதை பார்வைத்திறன் குறைபாடு என்றும், சிறப்புக் குழந்தைகள் போன்ற பல்வேறு சொற்கள் நம்மிடையே உள்ளது. ஒவ்வொரு கதைகளும் எழுதப்படும்போது நம் இடத்தில் இருந்தோ, நம் வீட்டில் உள்ள சிறுவர்களை அவ்விடத்தில் வைத்தோ சிந்தித்தாலே அறம் சார்ந்த சொல்லாடல்கள் தானாகவே பிறக்கும்.
சிறுவர்கள் பெரியவர்களைப் பார்த்துதான் கற்றுக்கொள்கிறார்கள். ஆனால், நம் சமூகத்தின் பொது புத்தியின் அடிப்படையில் அவற்றை மாற்றுவதற்கான சாத்தியக்கூறு கதைகள் எனும் ஆகச்சிறந்த சாவியால் மட்டுமே உள்ளது.
மனிதர்களின் தனித்துவத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து, வெளிப்புறத் தோற்றம் நிலையற்றது, ஒருவரின் அன்பு, அறிவு, மற்றும் நற்பண்புகளே முக்கியமானவை என்பதை குழந்தைகளுக்குக் கதைகளின் வழியாக எழுதுதல் வேண்டும்.
திறமை சார்ந்து தன்னம்பிக்கையை சிதைக்காத கதைகள் :
இயற்கை அளவீடு சார்ந்த கட்டுரையில் நான் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளதுபோல், மனிதர்கள் ஒவ்வொருவரும் தனித்துவம் வாய்ந்தவர்கள். அவர்கள் மொழி, நிறம், திறமை, சூழ்நிலை இப்படி பல்வேறு விதத்திலும் மாறுபட்டவர்கள்.

கதைகளின் வழியாக ஒவ்வொரு தனிமனிதர்களின் தனிக்கூறுகளுக்கு மதிப்பளிக்கும் கதைகளை உருவாக்க வேண்டும். உதாரணமாக இடது கை பழக்கம் உள்ளவர்கள், வெண்புள்ளி சரும நோய், இளநரை, சத்து குறைபாட்டால் உள்ளங்கை உள்ளங்கால் வியர்த்தல் நிலை உள்ளவர்கள், பார்வை குறைபாட்டால் கண்ணாடி அணிந்திருக்கும் சிறுவர்கள், சிறப்பு வாகனம் பயன்படுத்தும் மாற்றுத்திறனாளிகள் , உடல்நலம் பாதிப்பு மற்றும் பிற மாற்றுத்திறனாளிகள் குறித்தும் அவர்களுக்கு நாம் எவ்வகையில் உதவ வேண்டும் என்பதோடு மட்டுமில்லாமல், இவர்களோடு பழகும் சிறுவர்கள் எவ்வகையிலும் அவர்களின் தன்னம்பிக்கையை சிதைத்துவிடாத கதைகளையும் உரையாடல்களையும் பேச வேண்டும்.
ஒரு வகுப்பில் நன்கு ஆங்கிலம் பேசத் தெரிந்த மாணவன், கல்வியில் சிறந்து விளங்கும் மாணவன் என்றும், தாய் மொழியில் எவ்வளவுதான் சிறந்து விளங்கினாலும் அவன் படிப்பறிவற்றவன் என்ற பொது புத்தி வகுப்பறையில் தொடங்கி சமூகம் வரை பரவி உள்ளது. இதனால் தாய்மொழியில் பயிலும் சிறுவர்கள் எவ்வளவு திறமை வாய்ந்தவர்களாக இருந்தாலும், வெறும் தகவல் தொடர்பு சாதனமாக பயன்படக்கூடிய மொழியால் அவர்கள் பின்னுக்கு தள்ளப்படுகிறார்கள்.
அவர்களில் இருவரும் தங்களின் மொழி ஆளுமையால் சிறப்பாக வெற்றி பெறுகிறார்கள். இருவரில் உயர்ந்தோர், தாழ்ந்தோர் என்ற பேதமும், எல்லாம் தெரிந்தவன் தெரியாதவன் என்ற எந்தவித ஏற்றத்தாழ்வும் இல்லை என்பதை கதைகளின் வழி நாம்தான் நம்முடைய அடுத்தத் தலைமுறைக்கு உணர்த்த வேண்டும்.
— கார்த்திகா கவின்குமார், எழுத்தாளா், கதைசொல்லி






Comments are closed, but trackbacks and pingbacks are open.