பாலின சமத்துவம் என்பது பாலின வேறுபாடின்றி அனைத்து மனிதர்களுக்கும் சமமான உரிமைகள், வாய்ப்புகள் மற்றும் பொறுப்புகளைப் பெறுவதைக் குறிப்பது. இவற்றைக் குறித்து பெரியவர்கள் அறிந்திருந்தாலும் இன்றுவரை நம் சமூகத்தில் ஆண் – பெண் ஏற்றத்தாழ்வுடன் கூடிய சமூகமாகவே பெரும்பாலும் கட்டமைக்கப்பட்டுள்ளது.
மேலும், பாலின சமத்துவம் என்பது அன்றாடம் மிக இயல்பாக வாழக்கூடிய வாழ்வியல் சூழலாகும். வெறும் பிறப்பை மட்டும் வைத்து, அதில் ஏற்றத்தாழ்வுடன் வாழ்வது எவ்வகையில் மனிதத் தன்மையாகும் என்பதை சிறுவயதில் இருந்தே நம்முடைய அடுத்தத் தலைமுறைக்கு கற்பிக்க வேண்டிய கடமை நம் ஒவ்வொருவருக்கும் உண்டு.
சிறுவர்களுக்கான பாலின சமத்துவம் பற்றிய கதைகளில் ஆண், பெண் ஆகியோர் சமம் என்பதைக் கற்பிக்கின்ற வகையில் அமைய வேண்டும். வேலைகளில் வேறுபாடு இல்லை, உரிமைகள் ஆண் பெண் இருவருக்கும் சமம் என்ற சிந்தனையை விதைப்பதாக இருக்க வேண்டும்.

பெண் என்பவள் எப்போதும் ஆண்களுக்கு அடிமையானவள், ஜான் பிள்ளை ஆனாலும் ஆண் பிள்ளை, ஆண் பிள்ளை எப்போதும் அழக்கூடாது என்று தவறாக கட்டமைத்து, அழுகை என்பது பலவீனம் அல்ல அது ஒரு வகை உணர்ச்சி என்பதை தவறாக கட்டமைத்தும், பெண் பிள்ளை அடக்க ஒடுக்கமாக இருக்க வேண்டும் என்பது போன்ற சொல்லாடல்கள் இன்றைய நவீன தொழில்நுட்ப கால வளர்ச்சியில் கூட நம் காதுகளில் கேட்கக்கூடிய சூழல் உள்ளது.
பெண் பிள்ளைகளுக்கான படிப்புகள், விளையாட்டுகள், வேலைகள், பெண் பிள்ளைகள் குறைவாக சாப்பிட வேண்டும் என்ற கூற்றைக் கூட இன்றுவரை நாம் கண்கூடப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். அது மட்டுமில்லாமல் பெண் பிள்ளைகள் பிறந்தால் சாபமாகவும், ஆண் பிள்ளைகள் பிறந்தால் பெருமையாகவும் கொண்டாடும் சமூகமாக இன்றளவும் நம் சமூகம் உள்ளது. பெரும்பாலான பாலியல் துன்புறுத்தல்கள் சிறுவர்களுக்கு ஆணாதிக்க மனப்போக்கை குடும்பமோ, சமூகமோ தொடர்ந்து மிக இயல்பாக விதைத்து வருவதாலும் இந்நிலை ஏற்படுவதாக உளவியல் கூறுகிறது.
சமூகத்தில் நடக்கின்ற பெரும்பாலான பாலியல் சீண்டல்கள், ஆண் பெண் அடிமைத்தனம், ஆணாதிக்கப் போக்கு, வரதட்சணைக் கொடுமைகள் போன்றவற்றிற்கு பாலின சமத்துவம் சார்ந்த புரிதல் இன்மையே காரணமாக இருக்கிறது. பாலின சமத்துவம் சார்ந்த கதைகளால் இம்மாற்றத்தை நம்முடைய அடுத்த தலைமுறையினரிடையே நிச்சயம் மாற்ற முடியும். பாலின சமத்துவம் சார்ந்த கதைகள் எவ்வகையில் அமைய வேண்டும் என்பதை குறித்து அடுத்தக் கட்டுரையில் பேசுவோம்.
— கார்த்திகா கவின்குமார், எழுத்தாளர், கதை சொல்லி






Comments are closed, but trackbacks and pingbacks are open.