களியும், கஞ்சியும் அந்தகாலம் – இந்த காலம் ? – ஜெயில் பரிதாபங்கள் தொடர் – 4

2

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

நேற்று இல்லாத மாற்றம் இன்று என்னது … ? ”உன்னையெல்லாம் ஜெயில்ல போட்டு களி திங்க வச்சாதான் சரிபட்டு வருவ”னு சிலரை திட்டி கேள்விபட்டிருக்கிறோம். ஜெயில் என்றாலே, கம்பி எண்ணுவது இல்லையென்றால் களி தின்பது என்பதாகத்தான் நம்மிடையே அறிமுகமாகியிருக்கிறது. ஒரு காலத்தில் களியும், கஞ்சியும்தான் ஜெயில் சாப்பாடாக இருந்து வந்தது. அதுவே, கைதிகளுக்கான தண்டனைகளுள் ஒன்றாக இடம்பிடித்தும் இருந்தது.

ஜெயில் சாப்பாடு விசயத்தில் அன்றிருந்த நிலை இன்றில்லை. குறிப்பாக கடந்த ஆண்டில் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சிறை உணவு முறைகளில் அதிரடி மாற்றங்களை செய்திருக்கிறார்கள்.

Sri Kumaran Mini HAll Trichy

ஜெயில் சாப்பாடு
ஜெயில் சாப்பாடு

அதுவரையில் காலையில் கஞ்சியும், உப்புமாவும் பொங்கலும் தொட்டுக்கொள்ள தேங்காய் சட்னியுமாக இருந்து வந்ததை மாற்றி, அதற்குப் பதிலாக கோதுமை உப்புமா, கேழ்வரகு உப்புமா, பொங்கல் ஆகியவற்றுடன் , தக்காளி சாதம், எலுமிச்சை சாதம், புதினா சாதம் ஆகியவற்றையும் காலை உணவாக வழங்கி வருகிறார்கள்.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

மதிய உணவாக அரிசி சாதம், சாம்பார், மோர், காய்கறி பொறியல், புளிசாதம், தேங்காய் சாதம், தயிர்சாதம், உருளைக்கிழங்கு மற்றும் கீரை வழங்கப்பட்டு வந்தது. இதனை மாற்றியமைத்து, தற்போது மதிய உணவில் சாதம், ரசம், காய்கறி குழம்பு, காரக்குழம்பு, தயிர், காய்கறி பொறியல், கீரை பொரியல், அவியல் என உணவு வகைகள் கூட்டப்பட்டு அவை சுழற்சி முறையில் விநியோகிக்கப்படுகின்றன.

சிறை உணவு
சிறை உணவு

அதேபோல, இரவு எப்பொழுதுமே சலிப்பூட்டும் சாதமும் சாம்பாரும்தான் என்றிருந்த நிலையை மாற்றி, தற்போது சாதத்துடன் காய்கறி குழம்பு, ரசம், சுழற்சி முறையில் சப்பாத்தி – சுண்டல் கறி வழங்கி வருகிறார்கள். வாரத்திற்கு இரண்டு முட்டை; வாரத்திற்கு மூன்று முறை கோழிக்கறி கட்டாயம். அசைவம் சாப்பிடாதவர்களுக்கு சிக்கனுக்குப் பதில், உருளைக்கிழங்கு குழம்பு, ரவை கேசரி, வாழைப்பழம் அல்லது கொய்யாப்பழம் கொடுக்கிறார்கள்.
இதுதவிர, இருவேளை தேநீர், கசாயம், அவித்த பச்சை பயறு வகைகள், கொண்டைக்கடலை போன்றவையும் நொறுக்குத்தீனிகளாக வழங்கப்பட்டு வருகிறது.

வருமான வரி முறையாக கட்டி வந்த சிறைவாசிகளுக்கு ஏ கிளாஸ் அந்தஸ்தும் மற்ற கைதிகளுக்கு பி கிளாஸ் அந்தஸ்தும் வழங்கப்படுகிறது. இதன்படி, இதற்கு முன் ஏ கிளாஸ் சிறைவாசி ஒருவருக்கு உணவுச் செலவாக நாள் ஒன்றுக்கு 146 ரூபாய் ஒதுக்கி வந்த நிலையில், தற்போது 207 ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது. அதேபோல, பி- கிளாஸ் சிறைவாசிகளுக்கு 96 ரூபாயிலிருந்து 135 ரூபாயாக அதிகரிக்கப்பட்டிருக்கிறது.

Jail Tragedy Series - 4
Jail Tragedy Series – 4

அதெல்லாம் சரிதான், என்னதான் அரசு ஒதுக்கீடு செய்தாலும் சிறையில் அதற்கென உள்ள அதிகாரிகள் தங்களுக்குத் தேவையானதை ”ஒதுக்கி”க் கொண்டது போகத்தானே, மிச்சத்தை சிறைவாசிகளுக்கு கொடுப்பார்கள். இதுதானே உலக வழக்கம். தமிழகம் அதிலொன்றும் விதிவிலக்கில்லையே?

கடந்த மூன்றாண்டுகளுக்கு முன்னர் திண்டிவனம் கிளைச்சிறையில் கைதிகளுக்கு வழங்கியதாக போலி பில் தயாரித்து மோசடியில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டு எழுந்ததும், சம்பந்தபட்ட காவலர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதும் ஊடகங்களில் செய்தியாகின. அதுவும் அதே சிறையில் பணியாற்றும் சக போலீசார்கள் ‘போட்டு’க் கொடுத்ததால் இந்த நடவடிக்கை.

மத்திய சிறைகள், மாவட்ட சிறைகள், பெண்களுக்கான தனிச்சிறைகள், கிளைச்சிறைகள் என தமிழகம் முழுவதும் இயங்கிவரும் 142 சிறைகளிலும் அரசு ஒதுக்கீட்டின்படிதான் தரமான உணவு வழங்கப்பட்டு வருகிறதா? என்பதை எவர் ஒருவராலும் அறுதியிட்டு ஆம் என்றோ இல்லை என்றோ எளிதில் சொல்லிவிட முடியாது.

திருச்சி சிறை
திருச்சி சிறை

Flats in Trichy for Sale

தமிழகத்தின் 9 மத்திய சிறைச்சாலைகளுள் ஒன்றான அந்த குறிப்பிட்ட சிறைச்சாலையில் இருந்து மட்டும், மாதந்தோறும் குறைந்த பொருட்களை கொண்டு சமைத்து போட்டுவிட்டு அரசு ஒதுக்கீட்டின்படி பில் தயாரித்து பணம் பெற்றுக்கொள்ளும் வகையினத்தில் மட்டும் சுளையாக பத்துலட்சம் ரூபாய் வரையில் பணம் பிரித்துக் கொள்ளப்படுவதாக செவி வழித் தகவல்.

இந்நிலையில்தான், மேலிடத்திலிருந்து ஒரு உத்தரவு அனைத்து சிறைச்சாலைகளுக்கும் பறந்து வந்திருக்கிறது. அரசு ஒதுக்கீட்டின்படி தரமான உணவுகளை கைதிகளுக்கு வழங்க வேண்டும் என்பதான உத்தரவுதான் அது. இந்த உத்தரவையடுத்து தமிழகத்தின் பெரும்பாலான சிறைச்சாலைகளில் உணவின் தரத்தில் பெருமளவு வேறுபாட்டை உணர முடிவதாக தெரிவிக்கிறார்கள் சிறைவாசிகள்.

திருச்சி மத்திய சிறைச்சாலையைப் பொருத்தவரையில் இதற்கு முன்னர் எப்படியோ, டெபுடி ஜெயிலராக இ.விக்னேஷ்வரன் என்பவர் பொறுப்பேற்றதிலிருந்து உணவு விசயத்தில் ”கறார் பேர்வழியாக” இருக்கிறார் என்கிறார்கள் சிறைவாசிகள்.

கிட்டத்தட்ட 1600 பேர் வரையில் தங்கியிருக்கும் திருச்சி சிறைச்சாலையில், நாளொன்றுக்கு தலைக்கு பத்து ரூபாயை லவட்டினாலே பெரும் தொகையை சுருட்டிவிடலாம். ஆனால், அதற்கெல்லாம் இடம் கொடுக்காமல், அரசு என்ன தரத்தில், என்ன செலவில் உணவு வழங்க சொல்லியிருக்கிறதோ அதை அப்படியே வழங்க வேண்டும் என்பதில் உறுதியாக நிற்கிறாராம்.

ஜெயில் சமையல்
ஜெயில் சமையல்

முன்பெல்லாம் அன்றாடம் வரும் மளிகை பொருட்கள் நேராக கிச்சனுக்குத்தான் செல்லுமாம். இப்போதோ, வாசலிலே வழிமறித்து அவற்றின் தரம், எடை எல்லாவற்றையும் சரிபார்த்த பிறகே உள்ளே அனுமதிக்கப்படுகிறதாம். அப்படித்தான் ஒருமுறை சிக்கன் சப்ளை செய்பவர் அன்றைய நாளுக்கான சிக்கனை கொண்டு வந்திருக்கிறார். அவற்றை பிரித்து பார்த்த டெபுடி ஜெயிலர் விக்னேஷ்வரனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

80 கிலோ அளவுக்கு வெறும் கோழியின் தலை மட்டுமே இருந்திருக்கிறது. கோழியின் தலை, கழுத்து, இறக்கை மற்றும் பின்பகுதியைத்தான் இதுவரை கோழிக்கறி என்பதாக சப்ளை செய்து வந்திருக்கிறார்கள் போல. வெகுண்டெழுந்தவர் நேராக கோழிக்கறி கடையில் அமர்ந்துகொண்டு என் கண்ணெதிரில் வெட்டிப்போடு என்று கறார் காட்டியிருக்கிறார்.

கிச்சனில் அன்றாடம் சமைப்பதை அவ்வப்போது எட்டிப்பார்க்கும் கைதிகளே, ”முன்னெல்லாம் டெய்லி ஒரு மூட்டை துவரம்பருப்புதான் யூஸ் பன்னுவாங்க. இப்போலாம் மூனு மூட்டையை அவுத்து கொட்றாங்க. தண்ணி மாதிரி இருந்த சாம்பாரும் தடதடன்னு மாறிடுச்சி. தலைக்கு இத்தனை தேங்காய்னு மாத்திட்டதால தரமான தேங்காய் சட்னியும் கிடைக்குது. கீரைக்கூட்டுனு போடுவாங்க. வாய்ல வச்சா மண்ணு நரநரனு இருக்கும். இப்போ, அதையும்கூட சுத்தமா அலசி திருத்தமா சமைச்சி போடுறாங்க”னு சந்தோசம் பொங்க சொல்கிறார்கள்.

என்னதான் மேலிடத்து உத்தரவு என்றாலும், அதனை இம்மி பிசகாமல் அமல்படுத்துவதில்தான் அடங்கியிருக்கிறது. திருச்சி சிறைச்சாலைக்கு வாய்த்ததுபோல ஸ்ட்ரிக்ட் ஆபிசர்ஸ் எல்லா சிறைச்சாலையிலும் இருந்தா கைதிகளுக்கு தரமான சாப்பாடு கிடைக்கும் என்கிறார்கள்.

நேற்று இல்லாத மாற்றம் இன்று என்னது … னு சினிமா பாடலை முனுமுனுத்தபடியே கடந்து சென்றார்கள் சிறைவாசிகள்.

(தொடரும்)

இதையும் படிங்கள்…

விடுதலைக்கு பிறகும் 8 ஆண்டுகளாக தவிக்கும் ”ஹரே கிருஷ்ணா” – ஜெயில் பரிதாபங்கள் தொடர் – 3

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

2 Comments
  1. Nedunchezhian T says

    கட்டுரை சிறப்பு. வாழ்த்துகள்

Leave A Reply

Your email address will not be published.