பொள்ளாச்சி பாலியல் வழக்கின் கதை!
கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி திப்பம்பட்டியைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில் 2019 பிப்ரவரி 24-ம் தேதி புகார் ஒன்றை அளிக்கிறார். ’பள்ளி தோழி மூலம் அறிமுகமான திருநாவுக்கரசு, சபரிராஜன் ஆகியோர் செல்போனில் என்னிடம் அடிக்கடி பேசி பழக்கம் ஏற்படுத்திக் கொண்டனர்.
2019 பிப்ரவரி 12-ம் தேதி கல்லூரியில் இருந்தபோது சபரிராஜன் தொடர்பு கொண்டு ஊஞ்சவேலாம்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே வரச்சொன்னான். அங்கே சென்ற போது அங்கிருந்த திருநாவுக்கரசு மற்றும் சபரிராஜன் ஆகியோர் அவர்களது நண்பர்கள் இருவருடன் என்னை காரில் ஏற்றி சென்றனர். காரில் சென்று கொண்டிருந்த போது சபரிராஜன் என்னை மானபங்கப்படுத்த முயன்றார். அதனை தடுப்பதற்குள் மற்றொரு நபர் அதனை செல்போனில் வீடியோ எடுத்தார். தங்களை திருப்திபடுத்துமாறும், பணம் தருமாறும் மிரட்டினார்கள். அதனை மறுத்ததால், அணிந்திருந்த தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு தாராபுரம் சாலையில், கல்பனா மில் அருகில் காரில் இருந்து இறக்கிவிட்டு சென்றனர். பிறகு அடிக்கடி தொடர்பு கொண்டு வீடியோ பதிவை வலைதளத்தில் பதிவேற்றம் செய்துவிடுவதாகக் கூறி பணம் கேட்டு மிரட்டி வந்தார்கள்’ என்று புகாரில் சொல்லியிருந்தார்.
இந்த புகாரின் அடிப்படையில், பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில் 354 (A), 354 (Β), 392 5 r/w 66 (E) of IT Act 2000 and 4 of Tamil Nadu Women Harassment Act) சட்டப் பிரிவுகள் வழக்கு பதிவு செய்யப்பட்டது. பொள்ளாச்சி நகரைச் சேர்ந்த சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார் ஆகியோரை 2019 பிப்ரவரி 25-ம் தேதி கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தியது போலீஸ். அதன் பிறகு திருநாவுக்கரசை 2019 மார்ச் 5-ம் தேதி கைது செய்தனர். இந்த நான்கு பேரும் 2019 மார்ச் 12-ம் தேதி குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் காவலில் வைக்கப்பட்டனர். அறிவுரை குழுமம் (Advisory Board) ஆராய்ந்து அவர்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டதை உறுதி செய்தது.
புகார் அளித்த மாணவியின் சகோதரர் பூபாலன் 2019 பிப்ரவரி 26-ம் தேதி பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில் அளித்த புகாரில், பொள்ளாச்சியைச் சேர்ந்த செந்தில், பாபு, மற்றொரு வசந்தகுமார், நாகராஜ் (எ) முத்துசாமி, மணி (எ) மணிவண்ணன் ஆகியோர் தன் சகோதரி புகார் கொடுத்தது தொடர்பாக கேட்டு தகராறு செய்து தன்னை தாக்கியதாக தெரிவித்தார். போலீஸ் வழக்கு பதிவு செய்து செந்தில், பாபு, வசந்தகுமார் மற்றும் நாகராஜ் ஆகியோரை கைது செய்தது.
பொள்ளாச்சி பாலியல் வழக்கு இந்தியா முழுவதும் அதிர்வலைகளை உண்டாக்கியது. இதனால், இந்த இரண்டு வழக்குகளையும் மாநில குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறையினர் விசாரணைக்கு 2019 மார்ச் 12-ம் தேதி அன்றை எடப்பாடி அரசு மாற்றியது. அவர்கள் விசாரணை மேற்கொண்டனர். வாட்ஸ் அப். யூ டியுப். ஃபேஸ் புக். டுவிட்டர் போன்ற சமூக ஊடக நிறுவனங்களுக்கு பொள்ளாச்சி பாலியல் தொடர்பான தகவல்களை நீக்குமாறு கடிதம் எழுதினார்கள். பாதிக்கப்பட்ட பெண்கள் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்க தனியாக தொலைபேசி எண் ஒன்றை வெளியிட்டனர்.
கைது செய்யப்பட்ட திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ் மற்றும் வசந்தகுமார் ஆகியோரின் வீடுகளை சோதனை செய்து, செல்போன்கள், மடிக்கணினிகள், மெமரிக் கார்டுகள் ஆகியவற்றை கைப்பற்றி தடய ஆய்வகத்திற்கு அனுப்பினார்கள். திருநாவுக்கரசரிடம் ஒப்புதல் வாக்குமூலம் பெற்று ஃபேஸ் புக், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றை ஆய்வு செய்தனர்.
பாதிக்கப்பட்ட மாணவியின் சகோதரர் பூபாலனை தாக்கிய வழக்கில், தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சரணடைந்த மணி (எ) மணிவண்ணனிடம் வாக்குமூலம் பதிவு செய்து, குற்றத்திற்கு பயன்படுத்திய காரை கைப்பற்றினர். மணிவண்ணன் அளித்த ஒப்புதல் வாக்குமூலத்திலிருந்தும், கைப்பற்றப்பட்ட செல்போன்களிடம் இருந்து எடுக்கப்பட்ட வீடியோ பதிவுகளில் இருந்தும் குற்றவாளிகள் கூட்டாக சேர்ந்து பெண்களை ஆபாச படம் எடுத்து, மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.
இந்நிலையில் வழக்கு சிபிஐ விசாரணைக்கு 2019 மார்ச் 13-ம் தேதி மாற்றப்பட்டது. இதற்கிடையில் குண்டர் சட்டத்தின் கீழ் தடுப்பு காவலில் வைத்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளை எதிர்த்து குற்றவாளிகள் நான்கு பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். தடுப்பு காவலில் வைக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் 1.11.2019 அன்று உத்தரவு பிறப்பித்தது. ஆனாலும் குற்றவாளிகள் தொடர்ந்து நீதிமன்ற காவலில் இருந்து வந்தனர். சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல் முறையீட்டு செய்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், குற்றவாளிகளுக்கு பிணை வழங்க கீழமை நீதிமன்றம் மறுத்துள்ளதை சுட்டிக்காட்டி மனுவை 17.02.2020 அன்று முடித்து வைத்தனர்.
சிபிஐ விசாரணை முடித்து, முதல்கட்ட இறுதியறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. பொள்ளாச்சி, வடுகபாளையத்தைச் சேர்ந்த அருளானந்தம், பாபு (எ) பைக் பாபு மற்றும் கிரோன்பால் ஆகியோரை 5.01.2021 அன்று சிபிஐ கைது செய்தது.

பாலியல் குற்றங்கள் தொடர்பான காணொளிப் பதிவுகளை சமூக ஊடகங்களில் வெளியிடுவதைத் தடுக்க உத்தரவிடக் கோரி வழக்கறிஞர் இளம்முகில் என்பவர் தாக்கல் செய்த மனு 15.03.2019 அன்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் விசாரணை செய்யப்பட்டது. ’பொள்ளாச்சி சம்பவம் தொடர்பான காணொளிப் பதிவுகளை பகிர்வதை மத்திய அரசு தடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். வழக்கை மத்திய புலனாய்வு பிரிவிற்கு மாற்றம் செய்து மாநில அரசு வெளியிட்டுள்ள அரசாணையை திரும்ப பெற்று, பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர் மற்றும் விவரங்கள் குறிப்பிடாத புதிய அரசாணையை வெளியிட வேஎண்டும். சம்மந்தப்பட்ட பெண்ணின் பெயரை செய்தியாளர்களின் சந்திப்பின்போது பயன்படுத்திய காவல் அதிகாரி மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். பெயரை பயன்படுத்தியதால் அப்பெண்ணிற்கு ஏற்பட்ட பாதிப்பிற்காக ரூ. 25 லட்சம் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என உத்தரவிட்டது.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
பொள்ளாச்சி பாலியல் துன்புறுத்தல் வழக்கின் விசாரணையை உயர்நீதிமன்ற மேற்பார்வையில் சிபிஐ விசாரிக்க உத்தரவிடக் கோரி வழக்கறிஞர் புகழேந்தி என்பவரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
தமிழக அரசு பரிந்துரைத்ததின் அடிப்படையில், பொள்ளாச்சி சம்பவம் தொடர்பான இரண்டு வழக்குகளும் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு, அவ்வழக்குகள் 29.4.2019 அன்று சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது.
13.08.2021 அன்று பொள்ளாச்சியைச் சேர்ந்த அருண்குமாரை சிபிஐ கைது செய்தது. மொத்தமாக 9 பேர் வழக்கில் சம்பந்தப்பட்டிருந்தனர். வடுகபாளையத்தைச் சேர்ந்த அருளானந்தம் அதிமுக இளைஞரணியின் பொள்ளாச்சி நகரச் செயலாளராக செயல்பட்டு வந்தார். கிரேன்பால் அதிமுகவில் உறுப்பினர். இவர்கள் கைது செய்யப்பட்டதும் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டனர்.
— பரகத்அலி மூத்த பத்திரிகையாளர்.