வள்ளுவர் கோட்டம் – கலைஞரின் சபதமும், முதல்வரின் சாதனையும் !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

குறள் மீதும் தமிழ் மீதும் கொண்ட காதலால் கலைஞர் ஆட்சியில் உருவாக்கப்பட்டது சென்னையில் உள்ள வள்ளுவர் கோட்டம். இது, இருபதாம் நூற்றாண்டில் மீண்டெழுந்த திராவிடக் கட்டடக் கலையின் அற்புதம்.

திருவாரூர் தேரழகு என்பார்கள். அது வெறும் எழுத்திலும் பாட்டிலும் திரைப்பட வசனங்களிலும் மட்டுமே சென்னைவாசிளுக்கும் பிற ஊர்க்காரர்களுக்கும் தெரிவிக்கப்பட்டு வந்தது. அந்தத் தேர் இப்படித்தான் இருக்கும் பாருங்கள் என்பதுபோல வள்ளுவர் கோட்டத்தில் கல் தேரை நிறுவச் செய்தார் கலைஞர். கட்டடக் கலையில் அடிப்பகுதி அகலமாகவும் மேல்பகுதி குறுகலாகவும் இருப்பதுதான் வழக்கம். கோவில் கோபுரங்களின் அமைப்பே இதற்கு சாட்சி. வள்ளுவர் கோட்டம் கல்தேர் இதிலிருந்து மாறுபட்டது. அடிபீடத்தைவிட தேரின் மேற்பகுதி அகண்டு விரிந்து, குடை போல காட்சியளிக்கும். எண்கோணத்தில் இப்படியொரு விரிந்த கட்டடத்தை அன்றைய தொழில்நுட்பத்தில் உருவாக்குவது மிகுந்த சவாலானது. கலைஞரின் எண்ணத்திற்கேற்ப அதை கணபதி(ஸ்தபதி) சிற்பியும் அவரது குழுவினரும் சாதித்துக்காட்டினர்.

Kauvery Cancer Institute App

வள்ளுவர் கோட்டத்தின் கல் தேர் என்பது திருவள்ளுவருக்கும் திருக்குறளுக்கும் பெருமை சேர்க்கும் நினைவுச் சின்னம் என்றால், அதற்கு மேலும் அழகூட்டுவது கோட்டத்தின் முன்புறமுள்ள அரங்க மண்டபம். தரைத்தளத்தில் ஏறத்தாழ 4000 பேர் அமரக்கூடிய வகையிலான பெரிய அரங்கம் உள்ளது. பைல் ஃபவுண்டேஷன் முறைகளெல்லாம் இல்லாத 1970களிலேயே, அரங்கத்தின் நடுவில் எந்தத் தூணும் குறுக்கிடாதபடி பிரம்மாண்டமாக கட்டப்பட்டது 67 மீட்டர் நீளமும் 30.5மீட்டர் அகலமும் கொண்ட இந்த அரங்கம். பக்கவாட்டில் 20 அடி அகலம் கொண்ட அகண்ட தாழ்வாரங்களும் உள்ளன. இன்றளவும் பல விழாக்களும், கண்காட்சிகளும் நடத்துவதற்கு சிறப்பான இடமாக இந்த அரங்கப்பகுதி விளங்கி வருகிறது.  தற்போது இது மிகச் சிறப்பாக புதுப்பிக்கப்பட்டுள்ளது.

வள்ளுவர் கோட்டம்
வள்ளுவர் கோட்டம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

அரங்க மண்டபத்தின் முதல் தளத்திற்குச் சென்றால் குறள் மணி மண்டபத்தைக் காணலாம். திருக்குறளில் உள்ள 1330 குறள்களும் கல்வெட்டுகளாக செதுக்கப்பட்டு, அதற்கான உரையும் எழுதப்பட்டிருக்கும். ஒவ்வொரு கல்வெட்டும் புத்தகத்தை விரித்துவைத்து படிப்பது போன்ற அமைப்பில் வடிக்கப்பட்டிருப்பது கூடுதல் சிறப்பு. அறத்துப்பாலில் அமைந்துள்ள குறள்கள் கருநிற பளிங்குக் கற்களிலும், பொருட்பாலில் உள்ள குறள்கள் வெண்ணிற கற்களிலும், காமத்துப்பால் குறள்கள் செந்நிற பளிங்கு கற்களிலும் செதுக்கப்பட்டுள்ளன. குறளின் கருத்துகளை விளக்கும் ஓவியங்களும் உண்டு. தற்போது புதிய ஓவியங்களுடன், ஒவ்வொரு குரலுக்கும் முத்தமிழ் அறிஞர் கலைஞர் எழுதிய உரையை ஒலி வடிவில் கேட்க முடியும்.

குறள் மணி மாடத்திற்கு மேலே உள்ள தளம், வேயா மாடம். எளிமையாக சொல்வதென்றால், மொட்டை மாடி. மேற்கூரை எதுவும் வேயாத அந்த மாடத்தில் நின்று பார்த்தால், கல்தேரின் கருவறையும் அதன் மேல்பகுதியும் உங்கள் முன் காட்சியளிக்கும். திருவாரூர் தேரில் தியாகராஜரைக் கொண்டு வந்து உட்காரவைத்ததும் பூஜை-புனஸ்காரங்கள் அனைத்தும் தேரிலேயேதான் நடக்கும். அதைக் காண வரும் பக்தர்கள் தேரடியில் உள்ள மண்டபத்தின் படிக்கட்டில் ஏறி, தேருக்குள் சென்று தியாகராஜரை மிக அருகில் தரிசிக்கலாம். அதுபோல வள்ளுவர் கோட்டத்துத் தேரின் கருவறையில் உள்ள திருவள்ளுவரை வேயா மாடத்திலிருந்து பார்வையாளர்கள் மிக அருகில் பார்க்க முடியும். வள்ளுவர் இருக்கும் கருவறைக்குள் சென்று அவருக்கு யார் வேண்டுமானாலும் மாலையிட்டு வணங்க முடியும்.

இதுவும் தற்போது புதுப்பிக்கப்பட்டு இருப்பதுடன் அருங்காட்சியகம், கருத்தரங்க கூடம் போன்றவை புதிதாக உருவாக்கப்பட்டுள்ளன.

மழை பெய்தால், வேயா மாடம் என்கிற அந்த மொட்டை மாடியில் தண்ணீர் கொஞ்சம் தேங்கி நிற்கும். அதுபோன்ற அமைப்பை உருவாக்கும்படி கணபதி சிற்பியிடம் சொன்னவர் கலைஞர். காரணம், திருவாரூர் தேரின் அழகே அது அசைந்தாடி வரும் காட்சிதான். வள்ளுவர் கோட்டத்தின் கல்தேர் அசையாது, ஆடாது. ஆனால் மாலை நேரத்தில், மழை பெய்த பொழுதினில், அந்திச் சூரியனின் பொன்னொளியுடன் கல்தேரின் பிம்பம் அந்தத் தண்ணீரில் பிரதிபலிக்கும். வீசும் காற்றினால் தண்ணீரில் ஏற்படும் மெல்லிய அலைகளில் கல்தேரின் பிம்பத்தைப் பார்க்கும்போது, ஆழித்தேர் எப்படி அசைந்து செல்லுமோ, அதே போன்ற அசைந்தாடும் அழகைக் காணலாம். ஓடாமல் கிடந்த ஆழித்தேரை புதிய தொழில்நுட்பத்தில் ஓடவைத்த கலைஞர்தான், ஓடவே முடியாத வள்ளுவர் கோட்டத்தின் தேரை, தண்ணீரில் வெளிப்படும் பிம்பத்தில் ஒடுவதுபோலச் செய்தார்.

அது மட்டுமல்ல, தேரில் உள்ள துணி தோரணங்கள் (தொம்பைகள்) அசைவது தனி  அழகு. தேரை அண்ணாந்து பார்க்கும் போது, வானத்தில் மேகங்கள் ஓட, துணித் தோரணங்கள் அசைய, தேர் ஓடுவது போலவே இருக்கும்.

கோட்டத்தைக் கட்டி முடித்து திறப்பு விழாவுக்கு நாளும் குறித்த நிலையில் எமர்ஜென்சியில் கலைஞரின் ஆட்சி கலைக்கப்பட்டது. ஆளுநர் ஆட்சியில் நடைபெற்ற திறப்பு விழாவிற்கு கலைஞருக்கு முறையான அழைப்பு கூட விடுக்கப்படவில்லை.

அங்குசம் டிவி கண்டு களியுங்கள்..

அவரும் அங்கு செல்லவில்லை. ஆனால் தன் உடன்பிறப்புகளுக்கு முரசொலியில், கோட்டம் திறக்கப்படுகிறது; குறளோவியம் தீட்டப்படுகிறது என்ற உருக்கமிகு கடிதத்தை கலைஞர் எழுதினார். அதில்,

முத்தமிழ் அறிஞர் கலைஞர்
முத்தமிழ் அறிஞர் கலைஞர்

“உயிர் வளர் மாதம் ஒன்பதும் ஒன்றும் நிறைந்து பிறந்த குழந்தையைச் சுமந்ததையும் இன்பமாகக் கருதி, பேற்றுக்கால வேதனையையும் இனிய வேதனையாகக் கொண்டு, பாலூட்டிச் சீராட்டிப் பழமுத்தம் சுளை சுளையாகத் தந்து, பள்ளிக்கனுப்பி பின்னழகும், முன்னழகும் பார்த்துக் களித்து, பருவமடைந்த பின்னர் வாழ்க்கைத் துணையொன்றை தேர்ந்தெடுத்து, அந்த ஆசைக்கிள்ளைக்கு இனிய திருமண விழா நடைபெறும்போது, தாலி கட்டும் காட்சியினைக் காண முடியாமல், மணப்பந்தலுக்கு வெளியே நிற்கின்ற தாயின் மனதில் ஒருவிதத் தவிப்பு இருந்தாலும், தன் அன்புச் செல்வத்துக்கு நடைபெறும் மணவிழா குறித்த மகிழ்ச்சி பொங்கிடத்தானே செய்யும்! என் தங்க உடன்பிறப்பே! அந்தத் தாயின் மகிழ்ச்சியைத்தான், நான் பெறுகிறேன் இன்று!”

தனது ஆட்சியில் ஒவ்வொரு கல்லாகப் பார்த்துப் பார்த்துக் கட்டப்பட்ட வள்ளுவர் கோட்டம், ஆட்சிக் கலைக்கப்பட்ட நிலையில் திறப்பு விழா கண்டபோது, அந்த நிகழ்ச்சிக்கு தனக்கு உரிய முறையில் அழைப்பில்லை என்ற வேதனையுடன், கலைஞர் எழுதிய உடன்பிறப்புக் கடிதத்தின் வரிகள் இவை.

திறப்பு விழா கல்வெட்டில் கோட்டத்தை உருவாக்கிய கலைஞரின் பெயர் இல்லை. எம்ஜிஆர் ஆட்சியில் வள்ளுவர் கோட்டத்திற்குள் மரக்கன்று நட்டவர்களின் பெயர் எல்லாம் கல்வெட்டாக பொறிக்கப்பட்டது. மரம் நடும் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த எம்ஜிஆர் பெயரும் வள்ளுவர் கோட்ட வளாகத்திற்குள் கல்வெட்டாக இருந்தது. ஆனால் கலைஞரை முற்றிலுமாக புறக்கணித்து இருந்தார்கள்.

வள்ளுவர் கோட்டத்திற்கு முன்பாக இருந்த பகுதியில், சென்னை மாவட்ட திமுக சார்பில் அண்ணா சிலை அமைக்க அனுமதி பெற்று அங்கே பூங்காவுடன் அமைக்கப்பட்ட அண்ணா சிலையின் பீடத்தில், சிலையை திறந்து வைத்தவர்: வள்ளுவர் கோட்டம் கட்டிய கலைஞர் என்று கல்வெட்டு அமைக்கப்பட்டது.

ரூ.80 கோடி செலவில், பிரமாண்டமாக புதுப்பிக்கப்பட்ட வள்ளுவர் கோட்டம் இம்மாத இறுதியில் திறப்பு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து ...முதலமைச்சராக இருந்தபோது கட்டிய வள்ளுவர் கோட்டத்தின் திறப்பு விழாவிற்கு தனக்கு அழைப்பும் இல்லை, கல்வெட்டில் பெயரும் இல்லை என்பதால், இனி முதலமைச்சராக தான் வள்ளுவர் கோட்டத்தில் என் காலடி படும் என சபதம் செய்தார் கலைஞர்.

13 ஆண்டுகள் கழித்து முதலமைச்சராக வள்ளுவர் கோட்டத்திற்குள் நுழைந்து பதவியேற்பு உறுதிமொழி ஏற்று தன் சபதத்தை நிறைவேற்றியவர் முத்தமிழறிஞர் கலைஞர்.

கலையம்சத்தில் வள்ளுவர் கோட்டம், தமிழ்நாட்டின் தாஜ்மகால். பண்பாட்டு ரீதியில் திராவிடக் கட்டடக் கலையின் இருபதாம் நூற்றாண்டு வடிவம். ஆரியம்  பரப்பிய புராண-இதிகாசங்களுக்கு மாற்றாக  திருக்குறளையும் திருவள்ளுவரையும் திராவிட இயக்கத்தார் உயர்த்திப் பிடித்ததன் உச்சகட்ட வெளிப்பாடுகள்தான் சென்னை வள்ளுவர் கோட்டமும், குமுரி முனை வள்ளுவர் சிலையும்.

கடல் மீது கண்ணாடி பாலம் அமைத்து வள்ளுவர் சிலை வெள்ளி விழாவையும், கண்களையும் கருத்துகளையும் கவரும் வகையில் வள்ளுவர் கோட்டத்தின் பொன்விழா தொடக்கத்தையும் சிறப்பாக நடத்தி சாதித்துக் காட்டியிருக்கிறார் திராவிட மாடல் அரசின் மாண்புமிகு முதலமைச்சர்.

 

—      கோவி.லெனின் மூத்த பத்திரிகையாளர்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.