தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் சார்பில், முப்பெரும் விழா- அமைச்சர் பங்கேற்பு
திருச்சி அரியமங்கலம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் சார்பில், முப்பெரும் விழா நடைபெற்றது.
‘தேசிய கல்விக் கொள்கை – 2020 எனும் மதயானை’ என்ற நூல் எழுதிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களுக்கு பாராட்டு விழா,
ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், டாக்டர்.ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது பெற்ற சங்க பொறுப்பாளர்கள் மற்றும் 10,12-ம் வகுப்பு பொது தேர்வில் மாணவர்களை 100க்கு 100 மதிப்பெண் பெற்றிடச் செய்த பாட ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா,
10,11,12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மற்றும் போட்டி தேர்வுகளில் வெற்றிபெற்று சாதனை படைத்த மாணவர்களுக்கு பாராட்டு விழா என முப்பெரும் விழா நடைபெற்றது.
அதில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பங்கேற்று, 100 விழுக்காடு மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கும், 100 விழுக்காடு தேர்ச்சி விகிதத்தை கொடுத்த ஆசிரியர்களுக்கும் பரிசுகள் வழங்கி பாராட்டினார்.
மேலும், மாணவர்கள் நலன் சார்ந்த பணிகளில் ஆசிரியர்கள் தொடர்ந்து தங்களை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பேசினார்.
இவ்விழாவில் பள்ளிக்கல்வி துறை இயக்குநர் முனைவர் ச.கண்ணப்பன், தொடக்கக் கல்வி துறை இயக்குனர் முனைவர் பூ.ஆ.நரேஷ் மற்றும் பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் என 1000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் நடைமுறை படுத்த வேண்டும். தொகுப்பூதியத்தில் பணியாற்றும் ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தினர் முன்வைத்தனர்.