திருவெறும்பூர் தேர்தல் பிரச்சாரத்தில் அமைச்சர் அன்பில் மகேஸ் !
திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் திமுக வேட்பாளரும், அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி, திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட 42-வது வார்டு பகுதிகளில் தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அம்மன் நகர், விக்னேஷ் நகர், சக்தி நகர், கோகுல் நகர், பிரியங்கா நகர், சந்தோஷ் நகர், ஆலத்தூர் மற்றும் கீழக் கற்கண்டார் கோட்டை ஆகிய பகுதிகளில் வீடு வீடாகச் சென்று அவர் வாக்குச் சேகரித்தார்.
இப்பரப்புரை நிகழ்வில் மாநகரக் கழகச் செயலாளர் மு மதிவாணன் பகுதி கழகச் செயலாளர் நீலமேகம் சிவக்குமார், தமிழ்ச்செல்வன், வட்டக் கழகச் செயலாளர்கள் கயிலைநாதன், புண்ணியமூர்த்தி மற்றும் கழக நிர்வாகிகள் கலைவாணி ரமேஷ், உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பெரும் திரளாகக் கலந்து கொண்டனர்.
அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆற்றிய உரையின் சிறப்பம்சங்கள்:
பிரச்சாரத்தின் போது மக்களிடையே உரையாற்றிய அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்ததாவது:
“இந்தப் பகுதி எப்போதும் திமுகவிற்கு அதிக வாக்கு வித்தியாசத்தை (Leading) பெற்றுத் தரும் பகுதியாகும். இது திராவிட முன்னேற்றக் கழகத்தின் கோட்டையாக மட்டுமல்லாமல், தற்போது கூட்டணிக் கட்சிகளின் கோட்டையாகவும் உருவெடுத்துள்ளது.”
காலை உணவுத் திட்டம்:
“பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக ஒரு கோடிக்கும் அதிகமான மாணவர்களின் நலனைப் பேணும் பொறுப்பை நீங்கள் எனக்கு அளித்துள்ளீர்கள். முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் மற்றும் ‘கேப்டன்’ விஜயகாந்த் ஆகியோர் மற்றவர்களின் பசியை உணர்ந்து உணவளித்தவர்கள். அவர்களைத் தொடர்ந்து, நம் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் பள்ளிக் குழந்தைகளுக்காக ‘காலை உணவுத் திட்டத்தை’ கொண்டு வந்துள்ளார். ஒரு பள்ளி மாணவி பசியோடு இருப்பதை அறிந்து, உடனடியாக அத்திட்டத்தைச் செயல்படுத்தினார். இன்று 20 லட்சம் பிள்ளைகள் பள்ளிக்கு வந்து வயிறாரச் சாப்பிடுகிறார்கள் என்றால், அந்தப் புண்ணியத்தில் என்னைத் தேர்ந்தெடுத்த திருவெறும்பூர் மக்களுக்கும் பெரும் பங்குண்டு.”
தேர்தல் வாக்குறுதிகள்:
“தற்போது 5-ஆம் வகுப்பு வரை உள்ள காலை உணவுத் திட்டம், வரும் காலங்களில் 8-ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் எனத் தேர்தல் அறிக்கையில் முதல்வர் உறுதியளித்துள்ளார்.
விடியல் பயணம்: இத்திட்டத்தால் ஒரு குடும்பத் தலைவி மாதம் சராசரியாக 885 ரூபாய் வரை சேமிக்க முடிகிறது.
மகளிர் உரிமைத் தொகை: தற்போது வழங்கப்பட்டு வரும் 1,000 ரூபாய், திராவிட மாடல் அரசு மீண்டும் அமைந்தவுடன் 2,000 ரூபாயாக உயர்த்தப்படும்.
மகளிர் சுய உதவிக்குழுக்கள்: சுமார் 2,256 கோடி ரூபாய் கடன் தள்ளுபடி செய்யப்பட்டு, புதிய தொழில்கள் தொடங்க நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது.
கல்வி மற்றும் மருத்துவம்: புதுமைப்பெண் திட்டம், தமிழ்ப் புதல்வன் திட்டம், மக்களைத் தேடி மருத்துவம் மற்றும் நலங்காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்கள் என எண்ணற்ற சாதனைகளை இந்த அரசு செய்துள்ளது.”
“நீங்கள் அளித்த ஒவ்வொரு வாக்கும் இந்த மகத்தான மாற்றங்களுக்குக் காரணமாக அமைந்துள்ளது. அந்த வளர்ச்சிப் பணிகள் தொடர மீண்டும் உங்கள் ஆதரவை வேண்டுகிறேன்” என அமைச்சர் உரையாற்றினார்.










Comments are closed, but trackbacks and pingbacks are open.