தமிழகத்தில் மீண்டும் மணல் குவாரிகள் திறக்கப்படும் விவகாரத்தில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ம.க.வின் அன்புமணி ராமதாசு அறிக்கை விடுத்துள்ள நிலையில், போதிய புரிதல் இல்லாமல் அன்புமணி ராமதாசு பேசிவருவதாக காட்டமாக கண்டனத்தை பதிவு செய்கிறார், தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் தலைவர், செல்ல.இராசாமணி.
இந்த விவகாரம் தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், “தமிழகத்தில் கடந்த ஆட்சியின் போது 12/09/2023 முதல் தமிழகம் முழுவதும் நடைபெற்று வந்த மணல் குவாரிகளில் முறைகேடு நடப்பதாக அமலாக்கத்துறை சோதனை செய்து மணல் குவாரிகள் நிறுத்தப்பட்டது.

மணல் குவாரிகளை வாழ்வாதாரமாக கொண்ட இலட்சக்கணக்கான லாரி உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் வாழ்வாதாரத்தை இழந்தனர். நீதிமன்றத்தில் எங்கும் மணல் குவாரி திறக்க தடை விதிக்கப்படவில்லை. எனவே, மணல் குவாரியை மீண்டும் திறந்து இயக்கிட வலியுறுத்தியும் கடந்த ஆட்சியில் நிறைவேற்றப்படவில்லை.
இந்த சூழ்நிலையில் புதிதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் சி.ஜோசப் விஜய் அவர்களின் தலைமையிலான தமிழக அரசுக்கு, தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் சார்பாக, மணல் குவாரி திறந்து இயக்கிட வேண்டும், முறைகேடுகளின்றி முறையாக இணையதளத்தில் பதிவு செய்யப்பட வேண்டும், அனுமதிக்கப்பட்ட ஆழம், அனுமதிக்கப்பட்ட அளவு மட்டும் எடுத்தால் சுற்றுசூழல் பாதிக்காது என வேண்டுகோள் வைத்திருந்தோம்.
அதன்பிறகு தற்போதைய தமிழக அரசு, அரசு மணல் குவாரிகள் திறக்க முடிவெடுத்து மாநில சுற்றுசூழல் மதிப்பீட்டு ஆணையம்- 8 மாவட்டங்களில், 12 மணல் குவாரிகள் திறக்க வேலைகள் நடைபெற்று வருவது தெரிய வருகிறது.

அப்படி இருக்கையில் மணல் லாரி உரிமையாளர்கள், ஓட்டுநர்கள், கட்டுமான தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை பறிக்கும் வகையில், பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் சரியான புரிதல் கொள்ளாமல் மணல் குவாரி திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது வேதனை அளிக்கிறது.
அன்புமணி ராமதாஸ் அவர்களுக்கு அன்பு வேண்டுகோள் …
மலைகளை உடைத்து, காடுகளை அழித்து, ஆயிரக்கணக்கான அடி ஆழத்தில் சக்திவாய்ந்த வெடிகளை வெடித்து, கற்களை வெட்டி எடுத்து M.Sand, P.Sand அரைத்து விற்பனை செய்வதால் தான் பெரும் சுற்றுசூழல் பாதிப்பு, மாசு ஏற்படுகிறது இதனை தாங்கள் அறிந்து அறிக்கை வெளியிட வேண்டும்.
அதனை விடுத்து முறைகேடுகள் இல்லாமல், முறையாக அனுமதிக்கப்பட்ட ஆழம் ஆற்றில் மணல் எடுப்பது எந்த சுற்றுசூழல் பாதிப்பும் ஏற்படாது என்பதை தங்களது கவனத்திற்கு கொண்டுவருகிறோம்.” என்பதாக குறிப்பிடுகிறார், செல்ல.இராசாமணி. எப்படியோ, மணல் பிரச்சினைக்கு கூடிய விரைவில் நல்ல தீர்வு கிடைத்தால் நல்லதுதான்!
– அங்குசம் செய்திப்பிரிவு.







Comments are closed, but trackbacks and pingbacks are open.