நாகலாந்து சி.பி.எஸ்.இ. பள்ளி முதல்வர்களின் துணிச்சலும்.. தமிழ்நாடு முதல்வரின் இரட்டை வேடமும்
ஒன்றிய பா.ஜ.க அரசின் தேசிய கல்விக் கொள்கை, மும்மொழித் திணிப்பு, நீட் தேர்வு ஆகியவற்றை எதிர்த்து தி.மு.க மாணவரணி மாபெரும் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளது. சட்டமன்றத்தில் வெற்று சவடால் விடும் முதலமைச்சர் விஜய்யின் ஆட்சி, பா.ஜ.க.வுக்கு சாமரம் வீசி, மும்மொழிக் கொள்கையை அனுமதிக்கும் வகையில், தமிழ்நாட்டில் 1000 சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கு தடையில்லாச் சான்றை வழங்கியதைப் பெருமையாகப் பேசிக்கொள்கிறது.
ஜூலை மாதம் முதல் அனைத்து சி.பி.எஸ்.இ பள்ளிகளிலும் மும்மொழிக் கொள்கை கட்டாயம் என்று ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்திருக்கிறார்.

மும்மொழிக் கொள்கையை ஏற்கமாட்டோம் என்கிற தமிழ்நாட்டின் உறுதியான மொழி மரபை நீர்த்துப் போகச் செய்யும் வேலையை விஜய் தலைமையிலான த.வெ.க. அரசு தொடங்கியுள்ள நிலையில், இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான நாகலாந்தில் உள்ள சி.பி.எஸ்.இ பள்ளிகளின் முதல்வர்கள் பலர் இணைந்து, தங்கள் மாநிலத்தில் மும்மொழிக் கொள்கையை நடைமுறைப்படுத்துவது சரியல்ல என்றும், குறிப்பாக சமஸ்கிருத மொழியைக் கற்றுக்கொடுக்க வேண்டும் என நிர்பந்திப்பது சாத்தியமல்ல என்றும் ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு கடிதம் எழுதியுள்ளனர் (ஆதாரம்: 3-language policy not viable, say CBSE schools in Nagaland- The Hindu dated 20-6-2026)
அந்தக் கடிதத்தில், நாகலாந்து மாநிலத்தில் அங்கீகரிக்கப்பட்ட பெரிய பழங்குடி சமுதாயத்தைச் சேர்ந்த 17 வகையினர் இருக்கிறார்கள் என்பதையும், அவர்களுக்குள் டஜன் கணக்கான உட்பிரிவுகள் இருப்பதையும், ஒவ்வொரு பிரிவினரும் அவர்கள் மட்டுமே அறிந்த சொந்த மொழிகளையும், பேச்சு வழக்கிலான மொழிகளையும் மட்டுமே பேசுவதால், நாகலாந்தில் சமஸ்கிருதத்தை மொழிப் பாடமாகத் திணிப்பது சாத்தியமல்ல என்பதையும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.
நாகலாந்து மாநிலத்தில் நகரப்பகுதிகளிலும் மற்ற பகுதிகளிலும் உள்ள பள்ளிகளில் ஒரு வகுப்பில் உள்ள மாணவர்கள் பல மொழிகளைப் பேசுபவர்களாக இருக்கிறார்கள். தங்கள் தாய்மொழிகளாக ஆஓ, அங்கமி, சுமி, லோத்தா, கொன்யாக், சங், போம், சீலியாங், போச்சுரி,ரெங்மா, திக்கிர் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட தனித்தனி பழங்குடி மொழிகளைப் பேசுகிறார்கள் மாணவர்கள். தமிழ்நாடு, ஆந்திரா, மேற்குவங்கம், மராட்டியம், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்கள் போல நாகலாந்து மாநிலத்திற்கென, தனிப்பட்ட தாய்மொழி கிடையாது. அவரவர் பழங்குடி மொழியுடனான இணைப்பு மொழியாக அங்கும் ஆங்கிலம்தான் இருக்கிறது.
ஒன்றிய பா.ஜ.க அரசு நாகலாந்தில் சமஸ்கிருத மொழியை மும்மொழிக் கொள்கையின் அடிப்படையில் திணிக்காமல், நாகலாந்தை ‘கூட்டு மொழிகளின் பகுதி’ என அறிவித்து தங்கள் மாநிலத்தில் உள்ள சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கு மும்மொழிக் கொள்கையிலிருந்து அளிக்க வேண்டும் என்று அம்மாநில சி.பி.எஸ்.இ. பள்ளிகளின் முதல்வர்கள் ஒன்றிய பா.ஜ.க அரசின் கல்வி அமைச்சருக்கு எழுதியுள்ள கடிதத்தில் தங்கள் எதிர்ப்பினைப் பதிவு செய்துள்ளனர்.

மாற்றம் என்று சொல்லி ஆட்சிக்கு வந்துள்ள த.வெ.க. அரசு, இருமொழிக் கொள்கையை நிலைநாட்டுவதில் இரட்டை வேடம் போடுகிறது. நீட் விலக்கு விவகாரத்தில் உறுதியான நிலைப்பாடின்றி இருக்கிறது. நாகலாந்து மாநில சி.பி.எஸ்.இ. பள்ளியின் முதல்வர்கள் மும்மொழிக் கொள்கையை எதிர்த்து துணிச்சலாகக் கடிதம் எழுதுகிறார்கள். த.வெ.க அரசோ மும்மொழிக் கொள்கையை நடைமுறைப்படுத்த வேண்டிய சி.பி.எஸ்.இ. பள்ளிக்கு அனுமதி கொடுத்துவிட்டதாக தனியார் பள்ளிகளின் சங்கங்களைப் பேச வைக்கிறது. நாகலாந்து பள்ளி முதல்வர்களுக்குள்ள துணிச்சல் தமிழ்நாட்டை ஆளும் மாநில முதல்வருக்கு இருக்கிறதா ?
– கோவி.லெனின் – மூத்த பத்திரிகையாளர்







Comments are closed, but trackbacks and pingbacks are open.