அங்குசம் இதழுக்கு கண்டனத்தை பதிவு செய்கிறேன் …
அங்குசம் என்கிற வார இதழ் ( நான் படிப்பதே இல்லை ) மே 4 காத்திருக்கும் அதிர்ச்சி என ஒரு செய்தி வெளியிட்டு உள்ளது. இதழின் முதல் பக்கத்தை இணைத்துள்ளேன். அதில் கீழ்ப்பகுதியில் இளைஞர் ஒருவருக்கு இதய அடைப்பு வருவது போலவும், மறுப்புறத்தில் தூக்கில் தொங்குவது போலவும் படம் இடம் பெற்றுள்ளது. செய்தி என்ன என்று பார்த்தால், இளங்கோவன் முத்தையா என்கிற ஒருவர் “மே 4 காத்திருக்கும் அதிர்ச்சி என்று ஒரு அரைப்பக்கம் எழுதியுள்ளார். அதில் ஒரு வேளை விஜய் ஜெயித்தால் இளங்கோவன் முத்தையா வயதோத்தவர்களுக்கு இதய அடைப்பு வந்து விடும் என்று தன் மகனிடம் கூறியதாகவும், அதற்கு அவரின் மகன் ஸ்டாலின் ஜெயித்தால் மகனின் நண்பர்கள் சிலர் தற்கொலை பண்ணிக்குவாங்க என மகன் சொன்னதாக கூறிவிட்டு மே 4 இரவு பல அதிர்ச்சி காத்திருக்கிறது என எழுதியுள்ளார்.
இது என்ன மாதிரியான செய்தி ?? என்ன மாதிரியான ஊடகம் ??? உண்மையில் சமூக அக்கறை கொண்டவர்கள் எனில் எந்த முடிவு என்றாலும் ஏற்றுக்கொள்ள வேண்டும். தற்கொலை தவறென ஒரு வரி கூட எழுதாமால் இருப்பது ஏன்? எழுத்தாளரும் ஊடகமும் இது தான் நடக்க வேண்டும் என எதிர்பார்கிறதா? புகைப்படத்தில் இளைஞர்களை மட்டும் இப்படி சித்தரித்து இருப்பது என்ன மாதிரியான மனநிலை?? மாற்றுக் கட்சியைப் பின்பற்றினால், அவர்கள் வாழக்கூடாது என நினைக்கிறீர்களா??? அவர்களுக்கே அந்த எண்ணம் இருக்குமா என தெரியாது.
உங்கள் எண்ணமும் அதன் வெளிப்பாடான செய்தியும் இது போல் நடக்க வேண்டும் என்கிற உங்களின் ஆசையை பிரதிபலிக்கிறது. இளைஞர்களிடம் இது போன்ற எதிர்மறை சிந்தனையை விதைக்கும் எண்ணம் கொண்ட இது போன்ற செய்தியை எழுதிய எழுத்தாளருக்கும், வெளியிட்ட ஊடகத்திற்கும் என் கண்டனத்தை பதிவு செய்கிறேன்.
— RJ கோபால்
நேரடி அனுபவம்
”மே-4 காத்திருக்கும் அதிர்ச்சி” என்ற தலைப்பில் அங்குசம் இதழில் வெளியான செய்தியில், கட்டுரையாளர் இளங்கோவன் முத்தையா தனது நேரடி அனுபவத்தை பதிவு செய்திருக்கிறார். இன்றைய தமிழகத்தில் த.வெ.க. ஆதரவாளர்கள் வெளியிட்டு வரும் உணர்ச்சிப்பூர்வமான வீடியோக்கள் பலரையும் கவலை கொள்ள வைத்திருக்கிறது என்பதே உண்மை. த.வெ.க. தலைவரின் தெருமுனைப் பிரச்சாரத்தில் நெரிசலில் சிக்கி நாற்பதுக்கும் மேற்பட்டோர் பலியான சம்பவத்தின் தொடர்ச்சியாக, இன்னொரு அசம்பாவிதம் தமிழகத்தில் ஏற்பட்டுவிடக்கூடாது என்ற பதைபதைப்பிலிருந்து பதிவு செய்யப்பட்ட விழிப்புணர்வு செய்தி அது.
”எந்த முடிவு என்றாலும் ஏற்றுக்கொள்ள வேண்டும் தற்கொலை தவறென ஒரு வரி கூட எழுதாமால் இருப்பது ஏன்?” என்ற கேள்வியை நண்பர் ஆர்.ஜே.கோபால் எழுப்புகிறார். இந்த செய்தியின் நோக்கம், செய்தியை படிப்போர்கள் அவரவர்கள் தங்களது வீட்டில், தங்களது சுற்றத்தில் அதுபோன்றதொரு மனநிலையில் உள்ள த.வெ.க. ரசிகர்களை அணுகி அவர்களை கண்காணிப்பில் வைத்து தகுந்த ஆலோசனைகளை வழங்க வேண்டுமென்ற நோக்கில் இருந்துதான் அதனை அட்டைப்பட செய்தியாகவும் வெளியிட்டிருக்கிறோம் என்பதை இதன் வழியே தெரிவித்துக்கொள்கிறோம்.
— ஜெ.டி.ஆர்.








Comments are closed, but trackbacks and pingbacks are open.