ஆணையரை மாற்றியாச்சு … அதிரடி தொடருமா?
மதுரை மாநகராட்சியின் முதல் பெண் ஆணையராகவும் 71-வது மாநகராட்சி ஆணையராகவும் சித்ரா கடந்த 2025-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பொறுப்பேற்றபோது, மதுரை மாநகராட்சி மிகப்பெரிய நிதி நெருக்கடியிலும் பல்வேறு நிர்வாக சிக்கல்களிலும் தவித்து வந்தது.
அப்போது கடந்த 2021 முதல் 2025 வரை 5 ஆணையர்கள் இடமாற்றம் செய்யப்பட்டிருந்தனர். ஆனால், ஆணையர் சித்ரா அனைத்து அரசியல் சூழ்நிலைகளையும் சமாளித்து ஒன்றரை ஆண்டுக்கு மேல் தாக்குப்பிடித்திருக்கிறார். அதுவரையில் வெறும் புகாரோடு நின்ற மாநகராட்சி சொத்துவரி முறைகேட்டை வெளிக்கொண்டு வந்து போலீஸ் விசாரணைக்கு உத்தரவிட்டார். இந்த விஷயத்தில் எல்லா விதத்திலும் வந்த அழுத்தங்களையெல்லாம் அவர் எளிதாக புறந்தள்ளினார்.
மதுரை மாநகராட்சி உதவி ஆணையாளர் முதல் பில் கலெக்டர் வரையில் 28 பேரை அதிரடியாக இடைநீக்கம் (சஸ்பெண்ட்) செய்தார். இவர் நடவடிக்கையால், மேயர் மற்றும் ஐந்து மண்டல தலைவர்கள் பதவி பறிப்புக்கும் முக்கிய காரணமாக அமைந்தது. அதேபோல் வணிக வரிக்கு பதிலாக குடியிருப்பு வரி செலுத்தி வருவாய் இழப்பு ஏற்படுத்தி வந்த 200-க்கும் மேற்பட்ட திருமண மண்டபங்களை கண்டறிந்து அந்த கட்டிடங்களை வணிகவரிக்கு மாற்றி மதுரை மாநகராட்சிக்கு 10 % முதல் 13% சொத்து வரி வருவாயை அதிகரிக்க நடவடிக்கை எடுத்தார். இந்நிலையில்தான், தற்போது சென்னை மாநகராட்சி வடக்கு மண்டல துணை ஆணையாளராக பணியிட மாறுதலில் சென்றிருக்கிறார்.
விசாரணையில் இருந்துவரும் மதுரை மாநகராட்சி மோசடி ஊழல் விவகாரத்தில் எவரையும் தப்பவிடாமல் நேர்மையான துணிச்சலான நடவடிக்கைகள் தொடர வேண்டும் என்பதே மதுரை மக்களின் எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது.
— ஷாகுல், படங்கள் : ஆனந்தன்.





Comments are closed, but trackbacks and pingbacks are open.