“ஓடிடி மாஃபியாக்களின் சிண்டிகேட்” பகீர் கிளப்பும் டைரக்டர் பா.இரஞ்சித்!
‘எம்.ஜி.ஸ்டுடியோஸ்’ ஏவிபி.மாறன், ’டாடா’ டைரக்டர் கணேஷ் கே.பாபு, ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் கே.செந்தில் ஆகிய மூவரும் இணந்து தயாரித்திருக்கும் படம் ‘டார்க்’. கணேஷ் கே.பாபு எழுதிய கதையை அவரது உதவி இயக்குனர் கல்யாண் கே. ஜெகன் டைரக்ட் பண்ணுகிறார். ’காளிதாஸ்-2’வில் அறிமுகமான ஃபைவ் ஸ்டார் செந்திலின் மகன் அஜய் கார்த்தி ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக புதுமுகம் அஞ்சனா நேத்ரன் நடிக்கிறார். மற்ற கேரக்டர்களில் கே.பாக்யராஜ், கே.நட்டி, விடிவி கணேஷ், உட்பட பலர் நடிக்கின்றனர். ஒளிப்பதிவு : ரவிசக்தி, இசை : மனு ரமேசன், பி.ஆர்.ஓ. : நிகில் முருகன்.
வரும் ஜூலையில் ரிலீசாகும் ‘டார்க்’-ன் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னை கமலா தியேட்டரில் ஜூன்.15-ஆம் தேதி காலை நடந்தது. இதில் சிறப்பு விருந்தினர்களாக தயாரிப்பாளர்கள் ஃபைவ் ஸ்டார் கதிரேசன், டி.சிவா, கமலக்கண்ணன், டைரக்டர்கள் பா.இரஞ்சித், கார்த்திக் யோகி, விக்னேஷ் கார்த்திக், மாறன் கார்த்திகேயன், நடிகர்கள் கெளதம் ராம் கார்த்திக், ரியோராஜ், கலையரசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
டிரெய்லர் திரையிட்ட பின்பு, சிறப்பு விருந்தினர்களை மேடைக்கு அழைத்து பூங்கொத்து கொடுத்து சிறப்பித்தார் ஃபைவ் ஸ்டார் செந்தில்.
முதலில் தயாரிப்பாளர் மணிமாறன் பேசினார்..
“இந்த ஆண்டு தமிழ் சினிமாவில் பதினைந்துக்கும் மேற்பட்ட புது ஹீரோக்கள் வருகிறார்கள். அவர்களில் அஜய் கார்த்தி சிறப்பான, முக்கியமான இடத்திற்கு வருவார். நான் தயாரிப்பாளராக வேண்டும் என்பதற்காகவே கணேஷ் பாபு எழுதிக் கொடுத்த கதை தான் இது. அவருக்கும் படத்தின் பணிபுரிந்த அனைவருக்கும் நன்றி”.
சிறப்பு விருந்தினர்கள் அனைவருமே படம் வெற்றி பெற வாழ்த்துத் தெரிவித்துப் பேசினார்கள். டைரக்டர் பா.இரஞ்சித் பேசியது தான் ஹைலட்.
“தன்னிடம் உதவி இயக்குனராக இருந்தவருக்கு படம் தயாரிக்கும் கணேஷ் பாபுவுக்கு பெரிய மனசு தான். இதில் ரிஸ்க் இருக்கு என்று தெரிந்தும் துணிந்து களத்தில் இறங்கியிருக்கான். அவனை வாழ்த்துகிறேன். சமீபகாலமாக சின்ன பட்ஜெட் படங்கள் தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடி நல்ல லாபத்தை தர ஆரம்பித்திருக்கின்றன. கொரோனா காலத்தில் ஓடிடி காரர்கள் தயாரிப்பாளர்களைத் தேடி வந்து படங்களை வாங்கினார்கள். அவர்களின் ஆதிக்கம் வளர்ந்த பிறகு இப்போது ஒன்றிரண்டு பெரிய நடிகர்களின் படங்களைத் தவிர அவர்கள் மற்றவர்களைக் கண்டு கொள்வதேயில்லை. நாமாக வலியப் போனாலும் அலட்சியப்படுத்துகிறார்கள். ஓடிடி மாஃபியாக்கள் தங்களுக்குள் சிண்டிகேட் அமைத்துக் கொண்டு அவர்களே ரேட் ஃபிக்ஸ் பண்ணிவிடுகிறார்கள்.
தியேட்டர்களில் எப்போதும் ஜனநாயகம் இருக்கும். ‘பிளாஸ்ட்’ ,சிறை’, போன்ற சின்ன பட்ஜெட் படங்களைப் பார்க்க தியேட்டர்களுக்கு மக்கள் கூட்டம் வருகிறது. கொஞ்சம் பெரிய பட்ஜெட் படமான சூர்யாவின் ‘கருப்பு’வும் தியேட்டர்களில் சூப்பராக ஓடிக் கொண்டிருக்கிறது. இதெற்கெல்லாம் மக்களின் ஆதரவு தான் காரணம். அதனால் நல்ல கதை உள்ள படங்களை நாம் தயாரித்தால் மக்கள் தியேட்டருக்கு வருவார்கள். இதுசம்பந்தமாக தயாரிப்பாளர்கள் சங்கமும் நல்ல முடிவு எடுத்து ஓடிடிகாரர்களுக்கு கடிவாளம் போட வேண்டும்” என பகீர் தகவலைச் சொன்னார் பா.இரஞ்சித்.
— ஆண்டவர்







Comments are closed, but trackbacks and pingbacks are open.