பத்திரிகையாளர்களை அவமதித்தாரா சிரிஷ்டி சிங் ஐ.பி.எஸ். ?
திருச்சியில் பத்திரிகையாளர்களை ஒருமையில் பேசி அவமதித்துவிட்டார் என்ற குற்றச்சாட்டில் சிக்கியிருக்கிறார், ஐ.பி.எஸ். அதிகாரி சிரிஷ்டி சிங். 2026 சட்டமன்றத்தேர்தலில், திருச்சி மாவட்டத்தில் பதிவான வாக்குப்பெட்டிகள் திருச்சி ஜமால் முகம்மது கல்லூரியில் மூன்றடுக்கு பாதுகாப்புடன் வைக்கப்பட்டிருக்கும் நிலையில், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் உதவியுடன் பத்திரிகையாளர்கள் சிலர் ஸ்ட்ராங் ரூமை ஒளிப்பதிவு செய்ய சென்றிருந்த சமயத்தில், பாதுகாப்பு பணியில் இருந்த காவல் துணை ஆணையர் சிரிஷ்டி சிங் அவர்களை தடுத்து நிறுத்தியிருக்கிறார்.
மூன்றடுக்கு பாதுகாப்பை மீறி உள்ளே எப்படி நுழைய முடியும்? என்பது அவரது கேள்வி. ஸ்ட்ராங் ரூமில் வாக்குப்பெட்டிகள் பாதுகாப்பாகத்தான் வைக்கப்பட்டிருக்கிறது என்பதை ஒளிப்படம் எடுத்து பதிவிடுவது எங்கள் கடமை. அதையும்கூட, செய்தி மக்கள் தொடர்பு அலுவலரின் மேற்பார்வையில்தான் ஒளிப்பதிவு செய்ய சென்றோம் என்பது பத்திரிகையாளர்களின் வாதம். இவ்விரண்டு வாதத்திலும் எந்த பிரச்சினையும் இல்லை. அவர் பத்திரிகையாளர்களை தடுத்து நிறுத்தும்போது, “ஏய்” என்று விளித்ததுதான், பத்திரிகையாளர்களை கோபத்தில் ஆழ்த்தியிருக்கிறது. சர்ச்சையாகவும் மாறியிருக்கிறது.
”அவர் வடமாநிலத்தை சேர்ந்த அதிகாரி. தமிழை இன்னும் முழுமையாக கற்காதவர். வடமாநிலங்களில் விளிப்பதை போல, தன்னியல்பாக “ஏய்” என்று விளித்திருக்கிறார். மற்றபடி, அதற்கடுத்து நீங்கள் என்றுதான் மரியாதையோடுதான் பேசியுமிருக்கிறார். இதனை ஒரு மொழி பிரச்சினையாக பெருந்தன்மையோடு கடந்து போயிருக்க வேண்டியதை, பக்குவம் இல்லாமல் பரபரப்பாக்கிவிட்டார்கள்.” என்கிறார்கள், பத்திரிகையாளர்களில் சிலர்.
உரிய அங்கீகாரமே இல்லாமல் பத்திரிகையாளர்கள் என்ற போர்வையில் வலம் வரும் சிலர் மற்றும் இதுபோன்ற தருணங்களில் ஒரு பத்திரிகையாளராக குறிப்பான சூழலை உணர்ந்து பக்குவத்தோடு நடந்துகொள்ள வேண்டுமென்ற முன் அனுபவம் இல்லாத பத்திரிகையாளர்கள் சிலரால் ஏற்பட்டுவிட்ட சர்ச்சை என்பதாகவும் தெரிவிக்கிறார்கள்.







Comments are closed, but trackbacks and pingbacks are open.