குப்பைக் கிடங்கில் பயங்கர தீ விபத்து ! விடிய விடிய போராடி தீயை அணைத்த தீயணைப்பு வீரர்கள் !
திருச்சி மாவட்டம், துறையூர் அருகே வாலிஸ்புரம் பகுதியில் துறையூர் நகராட்சிக்கு சொந்தமான சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவு கொண்ட குப்பைக் கிடங்கு உள்ளது. கடந்த இரண்டு மாதங்களாக இங்கு குப்பைகள் கொட்டப்படாமல் இருந்து வந்த நிலையில், ஏற்கனவே சேகரித்து வைக்கப்பட்டிருந்த சுமார் 50 டன் குப்பைகளில் நேற்று மதியம் திடீரென தீப்பற்றியது.
காற்றின் வேகத்தால் தீ மளமளவென பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. தகவலறிந்து துறையூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீயின் தீவிரம் அதிகமாக இருந்ததால் பெரம்பலூர் மற்றும் உப்பிலியபுரம் பகுதிகளில் இருந்தும் தீயணைப்பு வாகனங்கள் மற்றும் வீரர்கள் வரவழைக்கப்பட்டனர்.
குப்பைகள் கொழுந்துவிட்டு எரிந்ததால் ஏற்பட்ட அடர்ந்த புகை துறையூர் நகரம் முழுவதும் பரவியது. இதனால் நகரம் முழுவதும் புகைமண்டலமாக காட்சியளித்ததுடன், பொதுமக்கள் மாசு கலந்த காற்றை சுவாசிக்கும் நிலை ஏற்பட்டது.
தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மாவட்ட அலுவலர் அனுசியா தலைமையில், மாவட்ட உதவி அலுவலர் ஆறுமுகம், துறையூர் தீயணைப்பு நிலைய அலுவலர் பாலச்சந்தர் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் இரவு முழுவதும் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.
விடியற்காலையில் குப்பைக் கிடங்கில் பரவியிருந்த தீ முற்றிலுமாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து புகை மற்றும் தீக்கங்குகள் மீண்டும் தீப்பற்றாமல் இருக்க அவற்றை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர்.
குப்பைக் கிடங்கில் ஏற்பட்ட இந்த பயங்கர தீ விபத்து துறையூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், குப்பைக் கிடங்கில் தீப்பற்றியதற்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.







Comments are closed, but trackbacks and pingbacks are open.