கொள்ளிவாய் கொடுவாயர்கள் !
அரசியலில் ஒருவரையொருவர் விமர்சிப்பது, பிறகு அரவணைத்துக் கொள்வது எல்லாமே சகஜம்தான். ஆனால், ஓட்டு போட்ட மக்களை எந்தக்காரணம் கொண்டும் விமர்சிப்பது, அவர்கள் சார்ந்த கட்சிக்கு ஆபத்தான விளைவுகளைதான் ஏற்படுத்தும்.
ஏற்கனவே, ‘ஓசி பஸ்’… ‘நீ எஸ்.சிதானே?”… ‘வாயை மூடு’ என்றெல்லாம் பொன்முடி பேசி திமுக ஆட்சிக்கு அவப்பெயரை உண்டாக்கினர். பலரும் இதேபோன்ற சர்ச்சையில் சிக்கி, திமுக தலைவர் ஸ்டாலினுக்கு நெருக்கடி கொடுத்தார்கள். இப்போது, திமுக தோல்வியுற்ற பின்னரும் அனிதா ராதாகிருஷ்ணன் அவப்பெயரை உண்டாக்குகிறார். திமுகவின் தேர்தல் தோல்விகளுக்கு பல காரணங்கள் ஆராயப்பட்டாலும் இதுபோன்று பொதுமக்களை விமர்சிப்பதும் ஒரு காரணம்.
அப்படியிருக்க, தேர்தல் தோல்விக்குப்பிறகு கொளத்தூர் வாக்காளர்களை “கேடுகெட்டவர்கள்” என்று அனிதா ராதாகிருஷ்ணன் விமர்சித்திருப்பது, மேலும் மேலும் திமுகவிற்கு எதிராக திரும்புமே தவிர, ஆதரவாக அமையாது.

அதேபோல், TVK, காங்கிரஸ் என மாற்றுக்கட்சியினரை நாகரீகமற்ற முறையில் விமர்சித்திருப்பதையும் இளம் தலைமுறையினர் ரசிக்கமாட்டார்கள். சிவாஜி கிருஷ்ணமூர்த்திகளின் பேச்செல்லாம் ‘சிவாஜி’ காலத்து அரசியல் ஸ்டைல் என்பதை உணரவேண்டும்.
கொளத்தூர் தொகுதியை பல்வேறு நவீன; கட்டமைப்பு வசதிகளுடன் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தரம் உயர்த்தியது உண்மைதான். ஆனால், அதையும் தாண்டி மக்கள் ஒரு மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள் என்றால், அதற்கான காரணத்தைதான் ஆராயவேண்டும். அதைவிடுத்து கேடுகெட்டவர்கள் என்று விமர்சிக்கக்கூடாது.
வாக்களித்த மக்களை கேடுகெட்டவர்கள் என விமர்சிப்பதன் மூலம், தாங்கள் எப்படிப்பட்ட கேடுகெட்டவர்கள் என்பதை பிரதிபலிப்பதுபோல் உள்ளது. எனவே, வாக்களித்த மக்களை இனி இப்படி விமர்சிப்பதை விட்டுவிட்டு, மக்கள் ஏன் தங்களுக்கு வாக்களிக்கவில்லை? என யோசிக்கவேண்டும். அதையெல்லாம் சரி செய்ய முயற்சிப்பதே, மீண்டும் திமுகவின் வெற்றிக்கு வழிவகுக்கும்! அதுவரை, ‘கொள்ளிவாய் கொடுவாயர்கள்’ கொஞ்சம் வாயில் ப்ளாஸ்திரி போட்டுக்கொண்டு, சைலண்ட் மோடில் இருப்பது திமுவிற்கு நலம்!
— வினிசர்ப்பனா, பத்திரிகையாளர்.







Comments are closed, but trackbacks and pingbacks are open.