மலைக்கோட்டை மாவட்ட எழுத்தாளர்கள் அறிமுகம்.. தொடர் – 22
மலைக்கோட்டை மாவட்ட எழுத்தாளர்கள் அறிமுகம்.. தொடர் – 22
கவிஞர், சிறுகதையாளர், கட்டுரையாளர், தனியொரு மனிதனாய் நூலகம் நடத்துபவர் பா.சேதுமாதவன் அவர்கள். தெற்கு ரயில்வே, திருச்சிராப்பள்ளியில் கணக்குப் பிரிவில் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்று, தற்போது முழுநேர தன்னார்வ நூலகராகச் செயல்பட்டு வருகிறார்.
பேனா முனையின் உரசல் (ஹைகூ கவிதைகள்) இவரது முதல் நூல். தொடர்ந்து புலன் விழிப்பு( கவிதைகள்) தீராச்சொற்கள்( சிறுகதைகள்) விசும்பில் சிறுபுள்( கவிதைகள்) மன யாத்ரீகன்( கவிதைகள்) அதியமான் முதல் ஆங்கிலேயர் வரை(வரலாறு) சொல்வலை வேட்டுவன் ( கவிதைகள்) அலரி ( சிறுகதைகள்) சொற்குவியம்(கட்டுரைகள்)
சிறகிருந்த காலம்( அனுபவக் கட்டுரைகள்) என நூல்கள் எழுதி வெளியிட்டுள்ளார்.
![](https://angusam.com/wp-content/uploads/2022/12/312662679_10218932860632737_6739859528983344682_n-203x300.jpg)
உலகத் தமிழ் எழுத்தாளர்கள் சங்கம், உரத்த சிந்தனை, தியாகதுருகம் பாரதியார் தமிழ்ச்சங்கம், இலக்கியப் பீடம், இலக்கிய வாசல், திருப்பூர் முத்தமிழ்ச் சங்கம், வெண்மணி அறக்கட்டளை,திருச்சிராப்பள்ளி மாவட்ட நலப்பணி நிதிக்குழு, தியாகி தோப்பு வெங்கடாசலம் நினைவு அறக்கட்டளை, சென்னை சிவநேயப்பேரவை, பொதிகை மின்னல், சிகரம் சிற்றிதழ் போன்ற பல்வேறு அமைப்புகள் / இதழ்களின் பரிசினை இவரது எழுத்தாக்கங்கள் பெற்றுள்ளன.
இவர் எழுதி, இயக்கி, நடித்த ‘அகப்பார்வை’ என்ற குறும்படம் 2019 ஆம் ஆண்டு நெய்வேலி நிலக்கரி நிறுவனம் நடத்திய குறும்படப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கவொன்றாகும். ‘தொடரும் பயணம்’ என்ற கவிதை பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் தொலை தூரக் கல்வி முறையில் இளங்கலைப் பட்டமாணவர்களுக்கான தமிழ்ப் பாட நூலில் இடம் பெற்றுள்ளது என்பதோடு உரத்தசிந்தனை எழுத்தாளர் சங்கம், திருச்சி கிளையின் தலைவராகவும் பொறுப்பு வகிக்கிறார்.
திரு. பா. சேதுமாதவன் அவர்கள் எழுத்தும், நூலகப் பணியும் மேலும் மேலும் சிறந்தோங்கிட வாழ்த்துவோம்.