தலைவர் கலைஞர் குடும்பத்தின் உறவினர் நந்தலாலா என்பது பலர் அறியாத ஒன்று…..

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

நந்தலாலா… நந்தலா கண்மூடியும், அவரை மண் மூடியும் நாட்கள் சில ஆகிவிட்டது. அவர் இப்போது இந்த உலகில் இல்லை என்பதை மனது ஏற்றுக்கொள்ளவே எனக்கு சில நாட்கள் ஆனது.

எனது நண்பர்களில் பெரும்பாலானவர்கள் என்னிலும் 10 வயது முதல் 15 வயது வரை மூத்தவர்கள். இது நானாக தேடிக் கொண்டதல்ல அப்படியே எனக்கு அமைந்ததுதான்.

இனிய ரமலான் வாழ்த்துகள்

இன்றைக்கு மிகப்பெரிய பொறுப்பில் இருக்கும் திண்டுக்கல் லியோனியை பட்டிமன்ற உலகத்திற்கு அறிமுகப்படுத்தியவர்களில் நானும் ஒருவன் என்பதை பலரும் நம்மப்போவதில்லை.

கோவில் திருவிழாக்களிலும், உள்ளூர் பள்ளிகளிலும் பட்டிமன்றம் நடத்திய திண்டுக்கல் லியோனியை அழைத்து வந்து திருச்சி சங்கம் நட்சத்திர ஓட்டலில் லயன்ஸ் கிளப் விழாவில் பட்டிமன்றம் நடத்தியது நானும் சமீபத்தில் மறைந்த ‘கலைத்தென்றல்’ நசரேனும்தான்.

அங்குசம் தற்போதைய இதழ்.. படிக்க..

அப்போது அந்த பட்டிமன்றத்தில் பேசிய நந்தலாலா எனக்கு அறிமுகமானார். அதன் பிறகு எங்கள் தினகரன் நிறுவனம் நடத்திய ‘கரன்’ டிவிக்காக பல ஊர்களுக்கு நந்தலாலாவையும், லியோனியையும் அழைத்துச் சென்று பட்டிமன்றம் நடத்தினேன்.

திண்டுக்கல் லியோனி தனது நகைச்சுவை பேச்சால், பாடும் திறனால் அவையை கலகலப்பாக்குவார். அவர் மேடையை நோக்கி பார்வையாளர்களை திருப்பியதும் நந்தலாலா சீரியசான பகுத்தறிவு, அரசியல் கருத்துகளை நேர்த்தியாக எடுத்து வைப்பார். லியோனி, நந்தலாலா இணைவு பல வருடங்கள் தொடர்ந்தது.

நாங்கள் போகாத ஊரில்லை… பேசாத பேச்சுகள் இல்லை. ஒரு கட்டத்தில் லியோனி ஒரு அரசியல் நிலைப்பாட்டை எடுக்க அவரிடமிருந்து இருவருமே விலக வேண்டியதாயிற்று.

திருச்சி காங்கிரஸ் பிரமுகரும், திருக்குறள் அஞ்சல்வழி கல்வி நடத்தி வந்தவரும், சிறந்த கல்வியாளருமான முருகானந்தம் அய்யாவுடன் பின்னர் இணைந்தோம். அடிக்கடி மாலை நேரங்களில் சந்தித்து நீண்ட நேரம், அரசியல், கலை, இலக்கியம் குறித்துப் பேசுவோம்.

ஒரு நாள் நந்தலாலா வீட்டில் பேசிக்கொண்டு இருந்தபோது உருவானதுதான் ‘நடந்தாய் வாழி திருச்சிராப்பள்ளி’ எனும் வரலாற்று நூலின் ஆரம்ப புள்ளி. 09.09.99 என்கிற தேதி இன்னும் நினைவிருக்கிறது.

மீரான் முகமது -மூத்த பத்திரிகையாளர்
மீரான் முகமது -மூத்த பத்திரிகையாளர்

3 வருட கடின உழைப்பிற்கு பிறகு நூல் உருவானது. இந்த பயணத்தில் ஆரம்பத்தில் இணைந்திருந்த நந்தலாலா பின்னர் தனது பணிச்சுமை காரணமாக விலகி இருந்தார். நூல் தயாரானதும் முருகானந்தம் அய்யா பெயரிலும், எனது பெயரிலும் நூலை வெளியிட முடிவு செய்யப்பட்டது.

இந்த தகவல் நந்தலாலாவை எட்டியதும் அன்று மாலை என்னை சந்தித்தார். இரவு நீண்ட நேரம் உரையாடினோம். “உங்கள் பணியில் எனது பங்களிப்பு மிக குறைவுதான் மீரான். ஆனால் ஒரு வரலாற்று சிறப்பு மிக்க பணியில் எனது பெயர் இடம்பெறாமல் போவது எனது மனதை வேதனைப்படுத்துகிறது” என்று அவர் சொன்னபோது அவர் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தோடியது. நந்தலாலா அழுது பார்த்தது முதலும், கடைசியும் அன்றுதான்.

பங்களிப்பு குறைவென்றாலும் நந்தலாலா பெயரும் நூலில் இடம்பெறுவதுதான் நியாயம் என்பதை உணர்ந்தேன். மறுநாள் முருகானந்தம் அய்யாவை சந்தித்து இதை சொல்ல வேண்டும் என்று முடிவு செய்தேன். ஆனால் நள்ளிரவில் முருகானந்தம் அய்யாவின் போன்  “நந்தலாலா பெயரில்லாமல் நூல்வருவது முறையல்ல. என்னால் சாமிகூட கும்பிடமுடியவில்லை மனசெல்லாம் இதை பற்றித்தான் யோசிக்கிறது” என்றார். அப்படியே செய்யுங்கள். என்றேன்.

உங்கள் விளம்பரம் இலட்சக்கணக்கான வாசகர்களை சென்றடைய....

நான் அறிந்த வரையில் கடுமையான சித்தாந்தங்களை அதன் தன்மை குறையாமல் எளிமையாக சொல்வதில் நந்தலாவை மிஞ்ச ஆளில்லை. மிகப்பெரிய உச்சத்தை தொட்டிருக்க வேண்டியவர். ஆனால் தொடாமல் போனதற்கு இரண்டு காரணங்கள் உண்டு.

ஒன்று எதிலும் சமரசம் செய்து கொள்ள மாட்டார். யாரையும் தேடிச் சென்று ஆதாயம் பெற மாட்டார். திமுக கழக தலைவர் கலைஞர் குடும்பத்தின் உறவினர் நந்தலாலா என்பது பலர் அறியாத ஒன்று. ஆனால் அதை அவர் வெளியில் சொல்லிக்கொள்வதில்லை. உள்ளூர் கட்சிக்காரர்களுக்குகூட அது தெரியாது. கலைஞரின் உறவினராக இருந்தாலும் அவர் கம்யூனிச சித்தாந்தத்தை ஏற்றுக் கொண்டவர்.

இன்னொரு முக்கியமான காரணம் குடும்பம். தேவதைகள் போன்று இரண்டு பெண் குழந்தைகள். பாரதியார் மீது நந்தலாலாவுக்கு பெரும் காதல். பாரதி பற்றி பேசுவதாக இருந்தால் மணிக்கணக்கில் பேசுவார் அதனால் ஒரு மகளுக்கு ‘பாரதி’ என்றும் இன்னொரு மகளுக்கு பாரதியார் நேசித்த விவேகானந்தரின் சிஷ்யையான ‘நிவேதிதா’ பெயரையும் வைத்தார்.

கவிஞர்நந்தலாலா
கவிஞர்நந்தலாலா

குடும்பத்தை காப்பாற்ற, குழந்தைகளை படிக்க வைக்க பணம் அவசியம். அந்த பணம் அவர் பணியாற்றிய வங்கி பணியில் இருந்து கிடைத்தது. அதை விட்டு விட முடியாத நிலை. அதனால் அந்த வங்கி பணியே அவரது சுதந்திர பயணத்துக்கு தடையாக இருந்தது.

பொது நிகழ்ச்சிகளுக்கு பேசச் சென்றால் கூட வங்கி தரும் ஒரு நாள் சம்பளம், போக்குவரத்து செலவு, சாப்பாட்டு செலவை கணக்கிட்டு கேட்பார். அதற்கு மேல் ஒரு ரூபாய் கொடுத்தாலும் சந்தோஷமாக வாங்கிக் கொள்வார்.

ஒரு முறை மூணாறில் சிறிய அளவில் ஒரு பட்டிமன்ற நிகழ்ச்சி. இவர்தான் நடுவர். நான் அவருக்கு துணையாக சென்றிருந்தேன். அந்த பட்டிமன்றத்தில் பேச வேண்டிய ஒரு நபரால் அன்று வரமுடியவில்லை. உடனே என்னை தனியாக அழைத்து பேச வேண்டிய விஷயத்தை கூறி “மீரான் நீங்க இன்றைக்கு பேசுறீங்க… இன்று முதல் பேசுறீங்க…” என்றார். இப்படி பலரை மேடையேற்றி அழகு பார்த்தவர்.

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

கடைசியாக சில மாதங்களுக்கு முன்பு அமெரிக்காவில் இருந்து பேசினார். மூன்று மாத விசாவில் மகள் வீட்டுக்கு வந்திருப்பதாகச் சொன்னார். அங்கும் சும்மா இருக்காமல் அங்குள்ள தமிழ் அமைப்புகளின் கூட்டங்களுக்கு சென்று பேசிக்கொண்டிருப்பதாக சொன்னார்.

அமெரிக்காவிலேயே செட்டிலாகிவிட வேண்டியதுதானே என்றேன், “சே…சே… எங்கு தொடங்கினோமோ அங்கேதான் முடிக்க வேண்டும்” என்றார்.

இப்போது முடித்துக் கொண்டார். ஆனால் இவ்வளவு சீக்கிரம் முடித்துக் கொள்வார் என்று கனவிலும் நினைக்கவில்லை.

நந்தலாலா இன்று இல்லை. அவர் குரல் காற்றில் இருக்கிறது, எழுத்து நூலில் இருக்கிறது. காற்று இருக்கும் வரை நந்தலாலாவும் இருப்பார்.

 

– மீரான் முகமது – மூத்த பத்திரிகையாளர்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitche

Leave A Reply

Your email address will not be published.