‘மதகஜராஜா’ 100% காமெடி க்யாரண்டி!
ஜெமினி பிலிம் சர்க்யூட் இந்தப்படத்தை தயாரித்துள்ளது. கடந்த 2012ல் துவங்கிய இந்தப்படம் 2013லேயே ரிலீஸுக்கு தயாரானாலும் பலப்பல சந்தர்ப்ப சூழ்நிலைகளால் ரிலீஸ் ஆக முடியாத நிலை ஏற்பட்டு 12 வருடங்கள் கடந்துவிட்டன. இந்த நிலையில் தற்போது பல நல்லவர்களின் கூட்டு முயற்சியால் இந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 12ஆம் தேதி மதகஜராஜா ரிலீஸ் ஆகப் போகுது.
இதில் கதாநாயகிகளாக அஞ்சலி மற்றும் வரலட்சுமி இருவரும் நடித்துள்ளனர். அப்போது முன்னணி காமெடி நடிகராக வலம் வந்த சந்தானம் இந்த படத்தில் விஷாலுடன் இணைந்து முழு நீள காமெடி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மணிவண்ணன் மற்றும் மனோபாலா போன்ற மறைந்த நட்சத்திரங்களும் இந்த படத்தில் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இயக்குநர் சுந்தர்சியுடன் அவருக்கு இது முதல் படம்.
பொங்கலுக்கு படம் வெளியாவதை தொடர்ந்து மதகஜராஜா படக்குழுவினர் பத்திரிகையாளர்களை ஜனவரி -05- ஆம் தேதி சந்தித்து படம் வெளியாவது குறித்த மகிழ்ச்சியையும் படம் குறித்த அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டனர்.
இயக்குனர் சுந்தர்.சி
“மதகஜராஜா படத்திற்காக மீண்டும் உங்களை சந்திப்பேன் என நான் நினைத்துக் கூட பார்க்கவில்லை. ஒரு இயக்குனராக அவ்வளவு சந்தோஷம் இருக்கிறது. சில தினங்களுக்கு முன்பு ஒரு நாள் இரவு 12 மணி அளவில் திருப்பூர் சுப்பிரமணியம் எனக்கு போன் செய்தார். இந்நேரத்தில் அழைக்கிறாரே என நினைத்தால் மதகஜராஜா படத்தை பார்க்க தயாரிப்பாளர் அழைத்தார், பல வருடங்கள் ஆகிவிட்டதால் படம் எப்படி இருக்குமோ என்று நினைத்தபடி பார்க்க சென்றால் படம் சூப்பராக இருப்பதாககூறி படத்தைப் பற்றி அரை மணி நேரம் ரசித்து பேசினார்.
இந்த முப்பது வருடங்களில் என்னிடம் படங்களின் வசூல் நிலவரங்கள் பற்றித் தான் பேசுவாரே தவிர படத்தைப் பற்றி எதுவும் சொல்ல மாட்டார். அப்படிப்பட்டவர் இந்த படத்தை பாராட்டி பேசினார் என்கிறபோது எனக்கு ரொம்பவே சந்தோஷமாக இருந்தது. அதோடு நிற்காமல் படம் சம்பந்தப்பட்டவர்களிடம் அவர் பேசி இதோ பொங்கல் வெளியீடாக ஜனவரி 12-ம் தேதி மதகஜராஜா ரிலீஸ் ஆகப் போகிறது. இந்தப் படம் எனக்கு ரொம்பவே ஸ்பெஷல். இந்தப் படம் துவங்கிய போது தான் எனக்கு என் குடும்பத்தில் ஒரு நபராக விஷால் கிடைத்தார்.
இந்தப் படம் சில பிரச்சினைகளை தாண்டி இப்போது பொங்கல் ரிலீஸ் ஆக வெளியிடலாம் என முடிவு செய்யப்பட்ட போது சிறிய தயக்கம் இருந்தது. காரணம் பல வருடங்கள் கழித்து இந்த படம் வருகிறது. படத்திற்கு வரவேற்பு எப்படி இருக்கும் ? சிலபேர் இப்போது இந்த படத்தை ரிலீஸ் பண்ண வேண்டியது ரொம்ப அவசியமா என்று கிண்டல் செய்வார்களோ என்றெல்லாம் தோன்றியது. ஆனால் இந்த படத்தின் ரிலீஸ் போஸ்டர் வெளியானதுமே சோசியல் மீடியாவில் அவ்வளவு பாசிட்டிவான வரவேற்பு கிடைத்தது.
இத்தனை வருடங்கள் தாமதம் ஆனாலும் இந்த படத்திற்கு ஒரு எதிர்பார்ப்பு இருக்கிறது என்று நினைக்கும்போது படத்தின் இயக்குனராக எனக்கு சந்தோசம். முதலில், பொங்கல் ரிலீஸ் என்று தான் ஆரம்பித்தோம். அப்போது மிஸ் ஆனாலும் இதோ இந்த பொங்கலுக்கு ரிலீஸாகிறது. பொங்கலுக்கான ஒரு கொண்டாட்டமான படமாகத்தான் இது இருக்கும்.
மேலும் சென்டிமென்டாக என்னுடைய குருநாதர் மணிவண்ணன் கடைசியாக நடித்த படம் இது. அவர் நிச்சயமாக மேலிருந்து என்னை ஆசிர்வாதம் செய்வார் என நினைக்கிறேன். அதேபோல மறைந்த நடிகர் மனோபாலா இந்த படம் எப்போது ரிலீஸ் ஆகும், ரிலீஸானால் என்னுடைய ரேஞ்சே வேற என்று சொல்லிக் கொண்டிருப்பார். குறிப்பாக இந்த படத்தில் விஷால், சந்தானம், மனோபாலா மூவரும் இடம் பெறும் ஒரு 15 நிமிட காட்சி இருக்கிறது. என்னுடைய படங்களிலேயே என் ஃபேவரைட் காமெடி காட்சி என்றால் இதுதான் என்று சொல்வேன்.
கலகலப்பு, தீயா வேலை செய்யணும் குமாரு படங்களில் சந்தானம் என்னுடன் பணியாற்றி யிருந்தார். அந்தப் படங்களில் எல்லாம் வெறும் ஐந்து, ஆறு நாட்கள் தான் அவர் நடித்திருந்தார். ஆனால் இந்தப் படத்தில் படம் முழுவதும் வரும் விதமாக அவரது கதாபாத்திரம் அமைக்கப்பட்டுள்ளது. இன்னும் ஒரு ஆச்சரியமான விஷயம், இந்த படத்தில் தான் மொட்ட ராஜேந்திரன் முதன்முதலாக காமெடி நடிகராக அறிமுகமானார். அதுமட்டுமல்ல நடிகர் ஆர்யாவும் இதில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.
நானும் விஜய் ஆண்டனியும் முதன்முதலாக இணைந்தது இந்த படத்தில் தான். அவர் தோற்றத்திற்கும் அவருக்கும் சம்பந்தமில்லை. அவர் ஒரு குழந்தை போல. இது போன்ற படங்களுக்கு இசையமைக்கும் போது தான் அவரிடம் இருந்து இன்னும் துள்ளலான இசை எங்களுக்கு கிடைக்கும். ஒரு இசையமைப்பாளராக அவர் மீண்டும் இதுபோன்று துள்ளலான இசையுடன் திரும்பி வரவேண்டும்.
இந்தப் படத்தில் என்னை விட கஷ்டப்பட்ட ஆத்மா என்றால் அது விஷால் தான். க்ளைமாக்ஸில் ‘எய்ட் பேக்ஸ்’ உடலமைப்புடன் வரவேண்டும் என தெரியாத்தனமாக சொல்லிவிட்டேன். அவரும் தயாராகி விட்டார். ஆனால் எதிர்பாராத விதமாக அப்படிப்பட்ட ‘எய்ட் பேக்ஸ்’ உடலமைப்புடன் எடுக்க வேண்டிய காட்சிகள் தள்ளிப்போய் மீண்டும் அதை எடுக்க ஒரு வருடம் ஆகிவிட்டது. அதுவரை அந்த கட்டமைப்பை பராமரிப்பது கடினம். ஆனாலும் விஷால் அதை கடைபிடித்தார். 99 சதவீதம் எந்தக் காட்சியிலும் அவர் டூப் போடவே இல்லை. இந்த மதகஜராஜா எப்படியாவது வெளிவர வேண்டும் என நான் விரும்பியதற்கு ஒரே ஒரு காரணம் விஷால் இந்த படத்திற்காக பட்ட கஷ்டங்களை மக்கள் பார்க்க வேண்டும். அது வெளியே தெரியாமலேயே போய் விடக்கூடாது என்பதுதான்.
ஆரம்பத்தில் எனக்கும் விஷாலுக்கும் அவ்வளவு பழக்கமில்லை. குஷ்புவுக்கு தான் அவர் நண்பராக இருந்தார். அந்த சமயத்தில் அவருக்காக வேறு ஒரு ஸ்கிரிப்ட்டுடன் அவரை சந்திக்க அவரது அலுவலகத்திற்கு சென்றிருந்தோம். எங்களை வரச் சொன்னவர் நாங்கள் சென்ற அதே நேரத்தில் வெளியே கிளம்பி போய்விட்டார். எனக்கு அப்போது அவர் மீது மிகப்பெரிய கோபம் வந்துவிட்டது. அவர் முகத்தில் இனி முழிக்கவே கூடாது என்று நினைத்தேன்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
இரண்டு மாதம் கழித்து ஒரு பொதுவான பங்ஷனில் கலந்து கொண்டபோது அவரும் வந்திருந்தார். அவரை பார்க்காதவாறு நான் ஒதுக்கி சென்றேன். ஆனால் விடாமல் என்னை தேடி வந்து அவராகவே பேசினார். அன்றைய தினம் ஒரு மருத்துவ வேலை காரணமாக அவசரமாக செல்ல வேண்டியதாகிவிட்டது,. உங்களை தொடர்பு கொள்ள முடியவில்லை, நீங்கள் எப்போது சொன்னாலும் நான் உங்களை தேடி வந்து கதை கேட்கிறேன் என்று கூறினார். அப்போது ஆரம்பித்த நட்பு இப்போது வரை தொடர்கிறது. பழகப்பழகத் தான் அவர் ஒரு நல்ல ஆத்மா என்பதை புரிந்து கொள்ள முடிந்தது.
இந்த படத்தை தயாரித்த ஜெமினி நிறுவனத்தில் அனைத்து இயக்குனர்களுமே படம் இயக்க வேண்டும் என்பதை கனவாக வைத்திருப்பார்கள். இந்த படத்திற்காக அவர்கள் எனக்கு கேட்டதை எல்லாம் கொடுத்தார்கள். சில காரணங்களால் பட ரிலீஸில் இப்படி ஒரு தடங்கல் ஏற்பட்டு விட்டது. ஆனால் இந்த மதகஜராஜா படத்திற்கு கிடைக்கும் வரவேற்பு, வெற்றி மூலமாக மீண்டும் ஜெமினியின் கொடி பறக்க வேண்டும் என விரும்புகிறேன்”.
இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி
“இந்தப் படம் ரிலீஸ் ஆகப்போகிறது என இரண்டு நாட்களுக்கு முன்பு அறிவித்தாலும் கூட, ஒரு ஃபிரஷ்ஷான படத்திற்கான விஷுவல்ஸ் அனைத்தையும் சுந்தர்.சி அப்போதே பண்ணியிருக்கிறார். இந்த பொங்கல் பண்டிகைக்கு குடும்பமாக போய் ரசிக்க வேண்டும் என நினைப்பவர்களுக்கு இந்த மதகஜராஜா ஒரு கொண்டாட்டமான படமாக இருக்கும். விஷாலுக்கு நிச்சயமாக எதிர்காலத்தில் நான் படம் பண்ணுவேன்”.
ஹீரோ விஷால்
“இந்தப் படத்தில் நான், சந்தானம், மொட்ட ராஜேந்திரன், மனோபாலா பங்கு பெற்ற 15 நிமிடக் காட்சி படத்தில் மிகப்பெரிய ஹைலைட்டாக இருக்கும். பார்க்கும் அனைவரும் 100% சிரித்துக்கொண்டு தான் வெளியே வருவார்கள். அதற்கு சுந்தர்.சி சாருக்கு நன்றி. குறிஞ்சிப்பூ 12 வருடத்திற்கு ஒரு முறை பூக்கும் என்பார்கள். அதுபோல 12 வருடம் கழித்து இந்த மதகஜராஜா ரிலீஸ் ஆக இருக்கிறது. பழைய படம் போலவே இருக்காது. அப்படியே ஃபிரஷ்ஷாக இருக்கும்” .
— மதுரை மாறன்.