சட்டம் ஒழுங்கு சரியில்லை… தொழில் வளர்ச்சி இல்லை ! – நயினார் நாகேந்திரன் விமர்சனம்
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமை சரியில்லை, பொதுமக்களுக்கு பாதுகாப்பு குறைந்து வருகிறது என்பதை முதலமைச்சர் உணர வேண்டும் என்று சாத்தூரில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கடுமையாக விமர்சித்தார்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் சட்டமன்றத் தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிடும் அவர், தீவிர தேர்தல் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக இன்று தீப்பெட்டி உற்பத்தியாளர்களுடன் நேரடி கலந்துரையாடல் நடத்தினார். இந்த சந்திப்பில் தொழில்துறையினர் எதிர்கொள்ளும் சிக்கல்கள், வரி சுமைகள், மூலப்பொருள் விலை உயர்வு, தொழிலாளர் பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் விவாதிக்கப்பட்டன.
சாத்தூர் மக்களின் ஒற்றுமை மற்றும் விருந்தோம்பல் மனப்பான்மை தனித்துவமானது என பாராட்டினார். 2001–2006 காலகட்டத்தில் திருநெல்வேலியில் அமைச்சராக இருந்தபோது தொழிற்சாலைகள் உருவாக்கி வேலைவாய்ப்பை அதிகரித்த அனுபவத்தை நினைவுகூர்ந்த அவர், “எல்லா மதமும், எல்லா இனமும் ஒன்றுதான்” என்ற தனது நிலைப்பாட்டை வலியுறுத்தினார்.
“ஆத்தூர் அரிசியும் வேற்றூர் விறகும் சாத்தூர் சமைக்குமே” என்ற பழமொழியை குறிப்பிட்டு, வெளியூர் மனிதர்களையும் சாத்தூர் மக்கள் அன்புடன் ஏற்றுக்கொள்வார்கள் என்றார்.
சாத்தூரின் முதன்மை தொழில்களான தீப்பெட்டி மற்றும் பட்டாசு துறைகள் நன்றாக செயல்பட்டால்தான் உள்ளூர் மக்களுக்கு நிலையான வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும், அதற்காக மத்திய அரசின் ஆதரவைப் பெற்றுத் தொழில் வளர்ச்சிக்கு முயற்சி எடுப்பேன் என்றும் உறுதியளித்தார்.
மேலும்,வைப்பாற்றை சுத்தப்படுத்தி நிலத்தடி நீரை மேம்படுத்துதல், கருவேலை மரங்களை அகற்றுதல், குடிநீர் பிரச்சனையை தீர்க்க திட்டங்கள்,மக்கள் தொகை உயர்வுக்கு ஏற்ப அடிப்படை வசதிகள் இவற்றை முன்னுரிமையாக செயல்படுத்துவேன் என கூறினார்.
சர்வதேச அளவில் மேற்காசியப் பகுதியில் நிலவும் போர் சூழ்நிலையிலும், இந்திய மக்களுக்கு பெட்ரோல் மற்றும் எரிவாயு பாதிப்புகள் ஏற்படாமல் பாதுகாக்கும் வகையில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு செயல்படுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
அரசியல் பதில் – ஸ்டாலினுக்கு எதிரடி
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பாஜக அதிமுக மீது சவாரி செய்கிறது” என்ற முதலமைச்சர் ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கையில்,
“1996-இல் திமுக யாருடன் கூட்டணி வைத்தது? அப்போது இனித்த கூட்டணி இன்று ஏன் கசக்கிறது? திமுக ஏன் தனித்துப் போட்டியிடவில்லை?” என்று கேள்வி எழுப்பினார்.
மேலும், “முதலமைச்சர் பயத்தில் நடுங்கி வருகிறார்” என்றும் கடுமையாக விமர்சித்தார்.
தொழில்துறைக்கு மத்திய அரசின் ஆதரம்

தீப்பெட்டி உற்பத்தியாளர்களின் கோரிக்கையை ஏற்று ஜிஎஸ்டி வரியை 12% இலிருந்து 5% ஆகக் குறைத்ததுடன், சிகரெட் லைட்டர்களுக்கு அதிக வரி விதித்து தீப்பெட்டி தொழிலுக்கு மத்திய அரசு புத்துயிர் கொடுத்துள்ளது .
சாத்தூரின் பாரம்பரிய தொழில்களை மீண்டும் உயிர்ப்பிக்கவும், மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும் அரசியல் வாக்குறுதிகள் மட்டுமல்லாமல் செயல்திட்டங்களோடு முன்னேறுவேன் என நயினார் நாகேந்திரன் தெரிவித்தது, தேர்தல் அரசியலில் புதிய விவாதத்துக்கு வழிவகுத்துள்ளது.
— மாரீஸ்வரன்








Comments are closed, but trackbacks and pingbacks are open.