தனித்தொகுதிகள் – பெயர் மாற்றம் அவசியமா?
சட்டமன்றத்தில் மாண்பமை சட்டமன்ற உறுப்பினர் சிந்து தனி(த் தொகுதி) என்னும் சொல் குறித்துப் பேசியுள்ளார். reservation என்னும் சொல்லிற்குத் தனி எனப் பொருள் இல்லை என்றும் பேசியுள்ளார். அச்சொல்லிற்குப் பொதுவாக ஒதுக்கீடு, பதிவு எனப் பொருள்கள் உள்ளன. எனினும் தனி ஒதுக்கீடு என்று அகராதிகள் குறிப்பதைக் காணலாம்.
நாடாளுமன்றம், சட்டமன்றம், உள்ளாட்சித் தேர்தல்களில் பட்டியலின (SC), பழங்குடியின (ST) மக்கள் தங்களின் சார்பாளர்களைத் தேர்ந்தெடுப்பதற்காகப் பிற இனப் போட்டியாளர்கள் இன்றித் தங்கள் இனத்தவரே போட்டியிட வேண்டும் என்பதற்காக ஒதுக்கப்பட்ட தொகுதிகளே தனித் தொகுதிகள்.
தனித் தொகுதி என்று சொல்லாமல் சிறப்புத் தொகுதி, உரிமைத் தொகுதி எனச் சொல்ல வேண்டும் என்றும் அவ்வுறுப்பினர் தெரிவித்துள்ளார். தனி என்னும் சொல்லுக்குச் சிறப்பு என்றும் உரிமை என்றும் ஒப்பற்ற என்றும் பொருள்கள் உண்டு. குறிப்பிட்ட இனத்தவருக்கு சார்பு உரிமையளிக்க வேண்டும் என்பதற்காகத் தனியாக ஒதுக்குவதால் தனித் தொகுதி எனப்படுகிறது.
அவ்வாறில்லாவிட்டால், பிற இனத்தவர் பெரும்பான்மை உள்ள தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழப்பர் எனக் கருதியே இந்த உரிமை தரப்பட்டுள்ளது. இதனால், அவர்களுக்கு உரிமையான தொகுதி என்னும் பொருளும் தனித் தொகுதி என்பதற்கு உண்டு. தனித்திறமை – ஒப்பற்ற திறமை, தனிப்பெருமை – ஒப்பற்ற பெருமை என்பதே வழக்கம்.
வள்ளலார் இராமலிங்க அடிகளார் திருவருட்பா நான்காம் திருமுறையில்“தனி நடிப்பா தத்தா”என ஒப்பற்ற கூத்தையுடைய பரதத்தையுடைய அத்தனே என்கிறார்.
சேக்கிழார், “ஒப்பற்ற தன்னுடைய பெருமையைப் பெற்ற புதல்வியாகிய புனிதவதிக்குச் செல்வம் மிகுதியாகப் பெற்று” எனக் குறிப்பிடும் வகையில் “தனிப் பெருமகட்குத் திருமலியும்”என்கிறார்.
தனி என்றால் சிறப்பு என்னும் பொருளைக் குறிக்கும் பல சொற்கள் உள்ளன. தனி அலுவலர்/ தனி அதிகாரி – Special officer; தனி அமர்வு – special session ; தனிப் பெரும்பான்மை – special majority … எனவே, சிறப்புத் தொகுதி என்றும் உரிமைத் தொகுதி என்றும் ஒப்பற்ற தொகுதி என்றும் பொருள் தரும் தனித்தொகுதி என்னும் பெயரை நீக்க வேண்டா; இத்தகைய சிறப்பான பொருள்கள் உடைய தனி என்னும் சொல்லில் தாழ்த்தப்பட்ட உணர்வைப் புகுத்த வேண்டா.
தனித் தொகுதி என்று சொல்லப்படுவதை மாற்ற வேண்டும் எனப் பெரும்பான்மைத் தனித் தொகுதி உறுப்பினர்கள் கருதினால் மாண்புமிகு பேரவைத் தலைவர் அறிவித்ததுபோல் மாண்புமிகு முதல்வரைக் கலந்து பேசி முடிவெடுக்கட்டும். ஆனால், தனி என்னும் சொல்லுக்குத் தவறான பொருள் கொண்டு அதனை நீக்க வேண்டா.
– இலக்குவனார் திருவள்ளுவன், கலைச்சொல் வல்லுநர்.






Comments are closed, but trackbacks and pingbacks are open.