ஓட்டுக்கு பணம் தரும் பழக்கமே இல்லை – ஏசி சண்முகம் பணம் கொடுத்தும் ஜெயிச்சதே இல்லை – பிடிஆர் !
“என் வாழ்க்கையில் வாக்குக்கு பணம் கொடுக்கும் பழக்கமே இல்லை. வாக்குக்கு பணம் கொடுக்காமல் தோல்வியடைந்த வரலாறும் கிடையாது. தொடர்ந்து வெற்றி வெற்றி” என்று மதுரை மத்திய தொகுதி திமுக வேட்பாளரும், அமைச்சருமான பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
மதுரை மத்திய சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மீண்டும் போட்டியிடுகிறார். அவருக்கு எதிராக அதிமுக கூட்டணியில் புதிய நீதிக் கட்சி சார்பில் திரைப்பட இயக்குநரும், நடிகருமான சுந்தர். சி களம் காண்கிறார். இவர்கள் இருவருக்கும் இடையே தற்போது காரசாரமான வார்த்தைப் போர் ஏற்பட்டுள்ளது.

பாஜக நிர்வாகியும், சுந்தர்.சி-யின் மனைவியுமான குஷ்பு, பிடிஆர் பழனிவேல் தியாகராஜனை விமர்சித்து சமீபத்தில் கடுமையாகப் பேசி இருந்தார். அதற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் அமைச்சர் பிடிஆர் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். தொடர்ந்து, இருவரும் பொதுக் கூட்டங்களிலும் கடும் வார்த்தைப் போர் புரிந்து வருகின்றனர்.
இந்நிலையில், மதுரை மத்திய சட்டமன்ற தொகுதியின் ஆறுமுச்சந்தி பகுதியில் தமிழர் தேசிய முன்னணி சார்பில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து பொதுக்கூட்டம் நடந்தது. தமிழர் தேசிய முன்னணியின் நிறுவனத் தலைவர் பழ.நெடுமாறன் தலைமை வகித்துப் பேசினார்.
இந்தக் கூட்டத்தில் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசுகையில், “பிரதான எதிர்க்கட்சியாக இருக்கிற அதிமுக, பல ஆண்டுகளாக மதுரை மத்திய தொகுதியில் நேரடியாக வேட்பாளரை நிறுத்தவில்லை. தோழமைக் கட்சிகளுக்கு ஒதுக்கி அவர்களுடைய வேட்பாளர்களை நிறுத்துகிறார்கள்.

ஜெயலலிதாவால் கட்சியில் இருந்து விரட்டப்பட்ட ஏ.சி.சண்முகத்தின் அங்கீகாரம் பெறாத கட்சிக்காக இறக்குமதியானவர்தான் வேட்பாளர் சுந்தர் சி. அவர் வாழ்க்கையில் ஒரு நாள் கூட பொதுப்பணியில் ஒரு ரூபாய்கூட செலவு செய்தது இல்லை. போராட்டத்தில் பங்கேற்றதும் இல்லை. அவருக்கு இரட்டை இலை சின்னத்தை குத்தகைக்குக் கொடுத்துள்ளார்கள்.
இந்த பிடிஆருக்கு வாழ்க்கையில் வாக்குக்கு பணம் கொடுக்கும் பழக்கமே இல்லை. வாக்குக்குப் பணம் கொடுக்காமல் தோல்வியடைந்த வரலாறும் கிடையாது. தொடர்ந்து வெற்றி வெற்றி. ஆனால், ஏ.சி.சண்முகத்துக்கு வாக்குக்குப் பணம் கொடுக்காமல் தேர்தலைச் சந்தித்த வரலாறு கிடையாது. வாக்குக்குப் பணம் கொடுத்து வெற்றிபெற்ற வரலாறும் கிடையாது. தொடர்ந்து தோல்வி, தோல்வி, தோல்வி” என்பதாக பேசியிருப்பதுதான் அரசியல் வட்டாரத்தில் விவாதத்தை கிளப்பியிருக்கிறது.
அங்குசம் தேர்தல் செய்திக்குழு.








Comments are closed, but trackbacks and pingbacks are open.