பூங்காவில் அனுமதியின்றி கட்டப்பட்ட தனி அறை விவகாரம்! துணை சபாநாயகர் நேரில் ஆய்வு
திருச்சி மாவட்டம், துறையூர் நகராட்சிக்குட்பட்ட 22 வது வார்டு குடில் அருகே உள்ள சிறுவர் பூங்காவில் தனி அறை ஒன்று கடந்த 5 மாதகாலமாக கட்டப்பட்டு வந்தது. தற்போது அந்தக் கட்டிடப்பணி நிறைவுபெறும் தருவாயில் , சமூக ஆர்வலர்கள் நகராட்சி நிர்வாகத்திடம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெற்ற தகவலில் அந்தக் கட்டிடம் கட்டுவதற்கு தங்களிடம் யாரும் எவ்வித அனுமதியும் பெறவில்லை எனவும், இதற்காக எவ்வித தீர்மானமும் நிறைவேற்றப்படவில்லை நிதியும் ஒதுக்கப்படவில்லை என நகராட்சி நிர்வாகம் அதிர்ச்சிகரமான தகவல் அளித்தது.
மேலும் இது குறித்த செய்திகள் சமூக வலை தளங்கள் மற்றும் தினசரி நாளிதழ்களில் செய்திகளாக வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் நகராட்சி நிர்வாக மேலிடத்து அதிகாரிகளின் உத்தரவின் பேரில் 22 வது வார்டு சிறுவர் பூங்காவில் அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டிடத்தை துறையூர்நகராட்சி ஆணையர் உள்ளிட்ட நகராட்சி அலுவலர்கள் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் பூட்டு போட்டு சீல் வைத்தனர். இதனை அறிந்து பூங்காவிற்கு வந்த 22 ஆவது வார்டு பொதுமக்கள் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது. தொடர்ந்து போலீசார் அங்கு வந்து பொதுமக்களை சமாதானப்படுத்தினர். மேலும் நகராட்சி ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகளிடத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனையை காரணம் காட்டி பொதுமக்களை சமாதானப்படுத்தும் விதமாக கட்டிடத்திற்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற வலியுறுத்தினர் இதன் காரணமாககட்டிடத்திற்கு வைக்கப்பட்ட சீல் அகற்றப்பட்டது .மேலும் இப்பிரச்சனை குறித்து துறையூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் அமைதிப் பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காண வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. அதுவரை அனுமதி இன்றி கட்டப்பட்ட கட்டிடத்தில் எவ்வித பணியும் மேற்கொள்ளக்கூடாது என அப்பகுதியை சேர்ந்த முக்கிய நபர்களிடம் போலீசார் எழுதி வாங்கினர்.
இந்நிலையில் நேற்று துறையூர் சட்டமன்ற உறுப்பினரும், துணை சபாநாயகருமான ரவிசங்கர் , சிறுவர் பூங்காவில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடத்தை நேரில் ஆய்வு செய்தார். பின்னர் நகராட்சி ஆணையரிடம் விசாரித்தபோது விதிமீறல் நடந்துள்ளது குறித்து அறிந்து ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும், அத்துமீறி அனுமதியின்றி பூங்காவிற்குள் கட்டிய கட்டிய நபர் யார் எனவும், அந்த நபர் மீது துறை ரீதியாக எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து இரண்டொரு நாட்களுக்குள் தனக்கு தெரியப்படுத்த வேண்டும் எனவும், மேலும் இது போன்ற அத்துமீறல்கள் இனியும் தொடர்ந்தால் கடுமையாக நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகளிடம் வலியுறுத்தினார் .
தொடர்ந்து பத்திரிக்கையாளர்களிடம் பேசிய துணை சபாநாயகர், “22 ஆவது வார்டு சிறுவர் பூங்காவில் அரசிடம் எவ்வித அனுமதியும் பெறாமல் விதிகளை மீறி 400 சதுர அடி அளவில் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது . முதலில் தனி அறையாக கட்டப்பட்டு பின்பு கடந்த 5 நாட்களுக்குள் அந்த தனி அறை கட்டிடத்திற்கு நூலகம் என பெயர் வைத்துள்ளனர். அது எனது கள ஆய்வில் தெரியவந்துள்ளது. இது அப்பட்டமான வீதிமீறல் . இந்த விதி மீறல்கள் குறித்து நகராட்சி அதிகாரிகள் இடத்தில் விளக்கம் கேட்டுள்ளேன். அதிகாரிகளும் அதற்கு விளக்கம் தருவதாக கூறியுள்ளனர்.
தனிநபர் பெயரில் அந்தக் கட்டிடம் கட்டப்பட்டிருந்தால் அந்த நபர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், தமிழக முதல்வர் விஜய் ஆட்சியில் வளைந்து கொடுக்காத நேர்மையான, வெளிப்படையான நிர்வாகத்திற்கு முன்னுரிமை அளிக்கப்படும், தவெக ஆட்சியில் சட்டத்தை மீறுவதோ, ஆக்ரமிப்பு , விதிமீறல் உள்ளிட்ட செயல்கள் எதுவும் நாங்கள் செய்யப்போவதில்லை . இந்த ஆட்சியில் மக்கள் மகிழ்ச்சியாக உள்ளனர்”எனக் கூறினார்.







Comments are closed, but trackbacks and pingbacks are open.