திருச்சி எக்ஸ்பிரஸ் ரெயிலில் ரூ.2.5 லட்சம் கஞ்சா மூட்டை பறிமுதல் !
திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்திற்கு இன்று அதிகாலை 2.40 மணியளவில் வந்த ஹவுரா – திருச்சி எக்ஸ்பிரஸ் ரெயிலில் போதைப்பொருள் கடத்தப்படுவதாக ரெயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் அஜய் குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் உஷார் படுத்தப்பட்டனர்.
பின்னர் ரெயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் செல்வராஜா, சப்-இன்ஸ்பெக்டர் ஜேம்ஸ், ரெயில்வே பாதுகாப்பு படை குற்றப்புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் பழனியாண்டி, போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு விஸ்வநாதன், ரெயில்வே பாதுகாப்பு படை பாதுகாப்பு பிரிவு ஏட்டு ஜெயவேல், குற்றப்புலனாய்வு பிரிவு தலைமை காவலர் முத்து குமார், குற்றப்புலனாய்வு பிரிவு காவலர் கார்த்திக், வெடிகுண்டு தடுப்பு பிரிவு தலைமை காவலர் முருகேசன், தலைமை காவலர் பொன்தர்மராஜன், போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு முதல்நிலை காவலர் அப்துல் ஹமீது, காவலர் முனீஸ்வரன் ஆகியோர் அடங்கிய குழுவினர் அதிரடியாக சோதனை நடத்தினர்.
சோதனையில் பிளாட்பார்ம் நம்பர் 8-ல் வந்து நின்ற ரெயிலின் பின்பக்க பொது பெட்டி கழிவறை அருகில் ஒரு கருப்பு நிற தோல் பை கேட்பாரற்று கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் அந்த பையை திறந்து சோதனை செய்தபோது அதில் 2 மூட்டைகளில் காய்ந்த கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதில் 5 கிலோ கஞ்சா மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.
இதன் சர்வதேச சந்தை மதிப்பு ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் ஆகும். கடத்தல்காரர்கள் ரெயில்வே பாதுகாப்பு படையினரை கண்டதும் கஞ்சா பையை ரெயிலிலேயே போட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டனர். பின்னர் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் கைப்பற்றப்பட்ட கஞ்சா பையை திருச்சி போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் விஸ்வநாதனிடம் ஒப்படைத்தனர்.
தப்பி ஓடிய கடத்தல்காரர்களை ரெயில்வே போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் ரெயில் நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.





Comments are closed, but trackbacks and pingbacks are open.