300 மதிப்புள்ள விஜய் படம் 800 : த.வெ.க. அரசின் ஊழல் – அதிரடி காட்டிய நீதிமன்றம் !
சட்டசபையில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவின் ஆக்ரோஷ பேச்சுகள் ரீல்ஸ்களாக வைரலாகி வருகிறது. முந்தைய ஆட்சியில் அதிலும் குறிப்பாக, திமுக ஆட்சியில் எல்லாமே ஊழல் எதிலும் ஊழல் என்பதாக அவர் முன்வைத்த கருத்துகள், “என்னமா பின்னுறான்யா மனுஷன்” என்பதாக பாமர மக்களிடம்கூட செல்வாக்கை பெற்றிருக்கிறது.
அதேசமயத்தில், ஆட்சி கட்டிலில் அமர்ந்து நூறு நாட்களே ஆன நிலையில் த.வெ.க. அரசுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகளும் தொடர்ந்து எழுந்து வருகிறது. அதில் ஒன்றுதான், முதல்வர் விஜய் படத்தை அரசு அலுவலகத்தில் மாட்டுவதற்காக கொள்முதல் செய்யப்பட்டதில் முறைகேடு நிகழ்ந்துள்ளதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு.

இந்த ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக, தமிழ்நாடு பொதுவிநியோகத்திட்ட ஊழியர் சங்கத்தின் மாநிலத்தலைவர் பால்ராஜ் என்பவர், மதுரை உயர்நீதிமன்றக்கிளையில் தொடுத்த வழக்கில் விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கிறார் நீதியரசர் விக்டோரியா கௌரி.
திண்டுக்கல் கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் ராகவ் பாலாஜிக்கு எதிராகத்தான் இந்தக் குற்றச்சாட்டு. இவரது கட்டுப்பாட்டின் கீழ் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள், ரேஷன் கடைகள் என சுமார் 1500 கடைகளும்; 3000-க்கும் மேற்பட்ட நிறுவனங்களும் இயங்கி வரும் நிலையில், இவை அனைத்திலும் முதல்வர் விஜய் படத்தை மாட்ட வேண்டுமென்று உத்தரவு பிறப்பித்ததோடு, ரூ300 பெறுமானமுள்ள அந்த புகைப்படத்தை கூட்டுறவுத்துறைக்கு சொந்தமான அபிராமி ஸ்டோரிலிருந்து ரூ.800-க்கு வாங்க வைத்திருக்கிறார் என்பதுதான் அந்த ஊழல் குற்றச்சாட்டு.
இதில் கொடுமை என்னவெனில், இந்த குற்றச்சாட்டு குறித்து ஏற்கெனவே சம்பந்தப்பட்ட துறையின் உயர் அதிகாரிகளுக்கு புகார் அளித்திருந்த நிலையில், மண்டல இணைப்பதிவாளர் ராகவ் பாலாஜிக்கு எதிரான குற்றச்சாட்டை விசாரிக்குமாறு, அவருக்கு கீழ் பணியாற்றும் ஒருவரை நியமித்ததையடுத்துதான் இந்த விவகாரம் நீதிமன்றத்துக்கே வந்திருக்கிறது.
இந்த பின்னணியில்தான், கூட்டுறவுத்துறை செயலர் அல்லது கூட்டுறவு சங்கத்தின் தலைமை பதிவாளர் இவர்களில் ஒருவர் தலைமையிலான குழு விசாரணையை நடத்தி 3 மாதத்திற்குள் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டிருக்கிறார், நீதியரசர் விக்டோரியா கௌரி.
த.வெ.க. அரசின் அதிரடி நடவடிக்கைகளுக்கு அஞ்சி அதிகாரிகள் எல்லாம் இலஞ்சம் வாங்கவே பயப்படுகிறார்கள் என்பதாக, அமைச்சர் ஆதவ் அர்ஜூனா உள்ளிட்டோர் வீராப்பு வசனங்கள் பேசிய அதே காலகட்டத்தில்தான் இப்படி ஒரு துணிச்சலான ஊழல் முறைகேடு அரங்கேறியிருக்கிறது என்பது எப்பேர்பட்ட நகைமுரண்?
₹300 மதிப்புள்ள விஜய் படம் ₹800க்கு விற்பனை?
கூட்டுறவு அதிகாரி மீது புகார் நீதிமன்றம் அதிரடி உத்தரவு
— அங்குசம் புலனாய்வுக்குழு.






Comments are closed, but trackbacks and pingbacks are open.