கல்வியில் சமத்துவமின்மையை உருவாக்கும் தமிழக பட்ஜெட் – பொதுப் பள்ளிக்கான மாநில மேடை குற்றச்சாட்டு!
தமிழ்நாடு அரசின் 2026 – 2027 ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை கல்வித் துறையில் சமத்துவமின்மை நிலைப் பெறச் செய்யும் வகையில் அமைந்துள்ளது.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் அனைத்திலும் சமமான கற்றல் வாய்ப்பை உறுதி செய்வதற்கு பதிலாக, தற்போது நிலவிவரும் பாகுபாடுகளை நிலைப்பெறச் செய்வதுடன், காமராசர் உண்டு உறைவிட பள்ளிகள் மூலம் பாகுபாடுகளைப் பெருக்கவே முற்பட்டுள்ளது.
தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிக் கல்வியில் சமமான கற்றல் வாய்ப்பை மறுத்துவிட்டு, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி, அதாவது 9ம் வகுப்பு முதல் 12 வரை, மிகச் சிறந்த வாய்ப்புகளை தேர்ந்தெடுக்கப்பட்ட சிலருக்கு மட்டும் தருவது கர்மவீரர் காமராசர் அவர்களின் வாழ்நாள் இலட்சியமான ‘அனைவருக்கும் சமமான கற்றல் வாய்ப்பு’ என்ற கோட்பாட்டிற்கே எதிரானது.

தனியார் – அரசு கூட்டு என்ற அடிப்படையில் மாணவர்கள் தங்கும் விடுதிகள் உருவாகின்ற போது, தங்கும் இடம், உணவு ஆகியவற்றுக்கான கட்டணம் என்னவாக இருக்கும் என்ற பெரும் கேள்வி எழுந்துள்ளது. இது மாணவர்களுக்கும் பெற்றோருக்கும் பெரும் சுமையாக அமையும் ஆபத்து உள்ளது. இதன் விளைவாக முதல் தலைமுறை மாணவர்கள், குறிப்பாக பெண்களுக்கான உயர்கல்வி பாதிக்கப்படும் சூழல் உருவாகும்.
அரசுப் பல்கலைக்கழகங்கள் மிகப் பெரும் நிதி நெருக்கடியில் உள்ள சூழலில், உயர் கல்விக்கு கடந்த ஆண்டு ஒதுக்கீட்டை விட குறைவாக ஒதுக்கி உள்ளது, ‘உயர் கல்வியை வலுப்படுத்த வேண்டும்’ என்ற அரசின் கொள்கைக்கு முரணாக அமைந்துள்ளது.
சமமான கற்றல் வாய்ப்பை அனைவருக்கும் சீராக அரசு வழங்க வேண்டும் என்ற வழிகாட்டுதலை இந்திய அரசமைப்புச் சட்டம் அரசிற்கு வழங்கியுள்ளது.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளை வலுப்படுத்தவும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகள், அரசுப் பல்கலைக்கழகங்களை வலுப்படுத்தவும் ஆக்கப்பூர்வமான அறிவிப்புகளை பள்ளிக் கல்வித் துறை மற்றும் உயர் கல்வித் துறை மான்ய கோரிக்கையிலாவது வெளியிட வேண்டும் என்று பொதுப் பள்ளிக்கான மாநில மேடை கோருகிறது.
பு. பா. பிரின்ஸ் கஜேந்திர பாபு
பொதுச் செயலாளர்
பொதுப் பள்ளிக்கான மாநில மேடை







Comments are closed, but trackbacks and pingbacks are open.