பணி நிரந்தரம் செய்யக்கோரி டாஸ்மாக் பணியாளர்கள் மீண்டும் போராட்டம் !
தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் திருச்சியில் நடைபெற்றது.
மாநில துணைத் தலைவர் பி. முருகானந்தம் தலைமை தாங்கினார். மாநிலத் தலைவர் மு.கு. பழனிபாரதி, மாநில பொதுச்செயலாளர் ம. கோதண்டம் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்கிப் பேசினர்.
இதில் மாநில பொருளாளர் சா. சுரேஷ், மாநில இணை பொதுச் செயலாளர் மே. மரகதலிங்கம், மாநில தலைமை நிலைய செயலாளர் சி. முத்துக்குமரன், மாநில துணைத் தலைவர்கள் இரா. கண்ணையன், ஜி. அருணகிரிமுருகன், கி. முருகேசன், கா. இளங்கோவன், மாநில செயலாளர்கள் வீ. கோவிந்தராஜன், கே.இராமர்பாண்டியன், ஏ. மோகன், தா. உமாபதி உள்ளிட்ட மாநில, மாவட்ட நிர்வாகிகள் அதிகளவில் கலந்து கொண்டனர்.
தமிழக டாஸ்மாக் கடைகளில் பணிபுரியும் 24,000 பணியாளர்களை பணி நிரந்தரம் செய்து கேரளா போன்று அரசு பணியாளர்களுக்கு இணையான ஊதியம் இதர பணப்பயன்கள் வழங்க வேண்டும்.
காலி பாட்டில் வாங்க தனி முகமை ஏற்படுத்த வேண்டும்.
ஓய்வு வயதை 60-ஆக உயர்த்துவதோடு, மதுபான கூடமின்றி மதுக்கடைகள் அரசின் சொந்த கட்டிடத்தில் இயங்க வழிவகை ஏற்படுத்த வேண்டும்.
எப்எல் 2 தனியார் மதுக்கூடங்களில் உரிய அதிகாரிகளை தவிர மற்றவர்கள் ரீல்ஸ் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு அச்சுறுத்துவது போன்ற செயல்களை தடுக்க வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. இதேபோல தமிழக அரசு நடத்தும் டாஸ்மாக் கடைகளிலும், டாஸ்மாக் பணியாளர்களை தாக்குவது வன்முறையில் ஈடுபடுவோருக்கும் இதே போல டாஸ்மாக் நிர்வாகம் வழக்கை தொடுத்து பணியாளர்களுக்கு பணி பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மாதம் 14 மாவட்டங்களில் 4 நாட்கள் தொடர் கடை அடைப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.
அதைத் தொடர்ந்து மதுவிலக்கு ஆயத் தீர்வை துறை அமைச்சர் விக்னேஷ் சங்கப் பிரதிநிதிகளை டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அழைத்து பேசி 30 நாட்களுக்குள் மேற்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாக உறுதி அளித்தார். ஆனால், இதுவரை எவ்வித கோரிக்கையும் நிறைவேறவில்லை.
ஆகவே, இதனை வலியுறுத்தி வருகிற ஏழாம் தேதி தமிழகத்தில் உள்ள 5 முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது எனவும்,
அடுத்த கட்டமாக ஜூலை – 10ம் தேதியன்று தமிழகம் முழுவதும் உள்ள 38 மாவட்ட மேலாளர் அலுவலகங்களில் தொடர் காத்திருப்பு போராட்டத்தை தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கம் மற்றும் டாஸ்மாக்கில் உள்ள தோழமை சங்கங்களின் கூட்டமைப்போடு இணைந்து நடத்தவுள்ளது.







Comments are closed, but trackbacks and pingbacks are open.