கோவில் மூங்கில் மரங்கள் தீ வைப்பு! மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை!
திருச்சி மாவட்டம் துறையூரில் சுமார் 600 ஆண்டுகளுக்கும் மேலான பழமை வாய்ந்த காசி விஸ்வநாதர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலில் கடந்த 2024-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
கோவிலின் தலவிருட்சமாக கருதப்படும் மூங்கில் மரங்கள், கோவில் பிரகாரத்தின் வடபுறத்தில் அமைந்துள்ளன. இதன் காரணமாக, கோவிலுக்கு எதிர்புறம் உள்ள தெப்பக்குளம் “மூங்கில் தெப்பக்குளம்” என்ற சிறப்பு பெயரிலும் அழைக்கப்படுகிறது.
இந்நிலையில், கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு கோவில் பிரகாரத்தில் உள்ள தலவிருட்சமான மூங்கில் மரங்களுக்கு மர்ம நபர்கள் சிலர் தீ வைத்ததாக கூறப்படுகிறது. இதில் பெரும்பாலான மூங்கில் மரங்கள் தீயில் எரிந்து சேதமடைந்துள்ளதுடன், சில மரங்கள் கருகிய நிலையில் காணப்படுகின்றன.
கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள், தலவிருட்சமான மூங்கில் மரங்கள் தீயில் கருகிக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி மற்றும் வேதனை அடைந்தனர். புனிதமான கோவில் வளாகத்தில் இதுபோன்ற சம்பவம் நடைபெற்றிருப்பது குறித்து உரிய விசாரணை நடத்தி, சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோவில் நிர்வாகத்திடம் பக்தர்கள் வலியுறுத்தினர்.
கோவில் நிர்வாகம் குறித்து பக்தர்கள் குற்றச்சாட்டு
கும்பாபிஷேகத்திற்கு முன்பிருந்தே கோவில் நிர்வாகம் தொடர்பாக சில சர்ச்சைக்குரிய நிகழ்வுகள் நடைபெற்று வருவதாகவும், கோவில் நிர்வாகத்துடன் தொடர்புடைய சில விஷயங்களில் தனிநபர்கள் அதிகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு ஆகம விதிகளுக்கு மாறாக செயல்படுவதாகவும் பக்தர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்த குற்றச்சாட்டுகள் குறித்து சம்பந்தப்பட்ட இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் உரிய விசாரணை நடத்தி உண்மை நிலையை வெளிக்கொண்டு வர வேண்டும் எனவும் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவில் பெயர் பலகை அமைக்க கோரிக்கை
இதனிடையே, காசி விஸ்வநாதர் திருக்கோவில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில் என்பதை பொதுமக்கள் அறியும் வகையில், கோவிலின் முன்புறத்தில் கோவில் பெயர் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளதைக் குறிப்பிடும் அதிகாரப்பூர்வ பெயர் பலகை பல ஆண்டுகளாக வைக்கப்படவில்லை என்றும் பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே, உடனடியாக கோவிலின் பெயர் பொறித்த அதிகாரப்பூர்வ பெயர் பலகையை அமைக்க வேண்டும். மேலும், அறநிலையத்துறை அதிகாரிகள் கோவிலின் நிர்வாகத்தில் உரிய கவனம் செலுத்தி, வெளிநபர்களின் அத்துமீறல்கள் ஏற்படாத வகையில் கோவில் நிர்வாகத்தை முறையாக வழிநடத்த வேண்டும் என்பதே பெரும்பாலான பக்தர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
தலவிருட்சமான மூங்கில் மரங்களுக்கு தீ வைக்கப்பட்ட சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தி, கோவில் புனிதத்தையும் பாரம்பரியத்தையும் பாதுகாக்க அறநிலையத்துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.






Comments are closed, but trackbacks and pingbacks are open.