Test என்றொரு படம் Netflix இல் – படம் எப்படி இருக்கு !
மீரா ஜாஸ்மின், மாதவன், நயன், சித்தார்த், என பெரும் நடிகர் பட்டாளத்தை வைத்து சோதனையாக Test என்றொரு படம் Netflix இல் வந்திருக்கிறது. இவ்வளவு பெரிய காஸ்டிங் ஏன் OTTக்கு வருகிறது என்கிற யோசனை படம் ஆரம்பித்த பத்து நிமிடத்திற்குப் பிறகு காணாமல் போகிறது. பாவம் நெட்ஃபிலிக்ஸ் மற்றும் நாம்.காலை,மதியம், இரவு என நிறுத்தி நிறுத்தி ஒரு வழியாகப் பார்த்து முடித்தேன். அவ்வளவு அலுப்பான படம்.
கதாபாத்திர வடிவமைப்பு என்பதுதான் ஒரு படைப்பின் ஆதாரம். ஆயிரம் சொற்களில் சிறுகதை எழுதுவதோ அல்லது ஆயிரம் கோடியில் ஒரு படத்தை எடுப்பதோ – இரண்டும் ஒரே படைப்புச் செயல்பாடுகள்தாம். இரண்டுக்கும் தேவை ஆழமும் நுணுக்கமும்தான்.
மனித வாழ்வை ஊடுருவிப் பார்க்கத் தெரிந்து, அதை சமரசமில்லாமல் படைப்பிலும் கொண்டு வருவதே வெற்றி அல்லது கலை.

ஒரு திரைப் படைப்பின் அடிப்படையான விஷயம் கதாபாத்திரம்தான் எனில், அதன் உருவாக்கத்தில் தனி கவனமும் குறைந்தபட்ச நம்பகத்தன்மையும் வேண்டும். A+b whole square is equal to a^2 + 2 Ab plus b square தான். MIT Massachusetts இல் படித்தவனை சில்லறை திருடனாக மாற்றக் கூடாது. அப்படி மாற்றியாக வேண்டிய கட்டாயமெனில் பனிமலரில் எஞ்சினியரிங் படித்தவனாக காட்டி விட்டுப் போகலாம். எதற்கு இந்த பில்ட்-அப்? படத்தின் எல்லா கதாபாத்திரத்தின் அடிப்படையும் பிரச்சினைதாம். எழுதவே வராத எவரோதான் இதற்கு எழுதியிருக்கிறார்கள்.
கதாபாத்திரத்தின் வார்ப்பு சரியாக இல்லையெனில் எவ்வளவு பெரிய நட்சத்திர நடிகரை நடிக்க வைத்தாலும் அது எடுபடாது. மாறாக இதில் ஒரு விதிவிலக்கை எப்போதும் சொல்வேன்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
சில தருணங்களில் சுமாரான கதைக்களத்தைக் கூட நல்ல நடிப்பாற்றலைக் கொண்டு சமன் படுத்தி விடலாம். உதாரணமாக குறைந்தபட்சம் நூறு மலையாளப்படங்களை சொல்லலாம். சமீபத்திய உதாரணம் பேஸில் ஜோசப் நடிப்பில் வந்த பொன்மான்.
மொத்த படமும் இவரால் தப்பித்தது. வெகு சுமாரான கதைக்களம்தான். ஆனால் மனிதர் உயிரைக் கொடுத்து நடித்திருப்பார். அதனால் பல லாஜிக் ஓட்டைகள் தப்பிக்கும்.
ஆனால் இங்கோ – மாதவனும் நயனும் சித்தார்த்தும் கொடுத்த காசுக்குக் கூட நடிக்க முயலவில்லை.
மாதவன் – மணிரத்னத்தின் ஆய்த எழுத்து பாவணையிலே படம் முழுக்க இருந்தார். இன்னும் கோராமையாக ஆய்த எழுத்து லொக்கேஷன்களும், டைலாக்குகளும் வேறு படம் நெடுக உடன் வந்து தொலைகிறது.
நயனோ அறம் மோட் இல் இருந்தார். இந்த ப்ளைய்ன் காட்டன் சாரி யும் லோ நெக் ஜாக்கெட்டும் அணிந்து திரையில் வந்தால் அது நடிப்பாக மாறிவிடும் என நம்புகிறார் போல. இதில் “என்னை லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்காதீர்கள்” என்கிற கூப்பாடு வேறு. கோராமை.
நடிப்பென்றால் என்னவென்றே தெரியாத அஜித் போன்றவர்களை கடவுளாக்குவதும் கதாபாத்திரத்திற்கு தேவையான ஓர் அசைவைக் கூட சரியாகத் தரமுடியாது போகும் நயன் போன்றவர்களை சூப்பர் ஸ்டார்களாக மாற்றுவதும் ரசனையோ, அறிவோ, மானமோ, இல்லாத தமிழர்களின் நிலைப்பாடு என்பதால் எரிச்சலோடு இதையெல்லாம் கடந்து போக வேண்டியிருக்கிறது. கூடவே இதில் கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்திருக்கிறார்களாம் பார்க்க முடியவில்லை.
கலை, சமூகம், அரசியல், விளையாட்டு என எந்தத் தளத்திலும் சரியானதை அடையாளம் காண முடியாமல் போவதுதான் நம் சாபம். அடிப்படை ரசனைகளை மேம்படுத்துவதின் வழியாக இந்தப் பாழ் வாழ்வை கொஞ்சம் கடக்க முடியும்.
குறைந்தபட்சம் போலித்தனங்களை துதிக்காமல் இருந்தால் போதும். சமூகம் கூடிய சீக்கிரம் விளங்கும்.
இதில் இன்னொரு சோகம் என்னவெனில் படத்தின் துவக்கத்தில் பெயர் போடும்போது மீரா ஜாஸ்மின் என வருகிறது. அவர் எப்போது வருவார் என படம் நெடுக தேடிக் கொண்டிருந்தேன். கடைசியில் சித்தார்த் மனைவிதான் மீரா என்பதை அறிந்து- நொந்தேன். காலம்தான் எவ்வளவு குரூரமானது.
— அய்யனார் விஸ்வநாத் – எழுத்தாளர்.