பக்கவாத நோயினை ஏற்படுத்தும் காரணிகளில் ஒன்றான மதுப்பழக்கம் பற்றி பார்ப்போம்.
பக்கவாதத்திலிருந்து 50 விழுக்காடு பேர் மதுப்பழக்கத்திற்கு அடிமையாக இருக்கின்றனர் நாட்டில் பக்கவாத நோயினால் பாதிக்கப்படுவோரில் 30 லிருந்து 50 விழுக்காடு பேர் மதுப்பழக்கத்திற்கு அடிமையாக இருக்கின்றனர் என்பது வருந்தத்தக்க உண்மை.
“துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும்
நஞ்சுண்பார் கள்ளுண் பவர்”.
‘உறங்கினவர் இறந்தவரை விட வேறுபட்டவர் அல்லர், அவ்வாறே கள்ளுண்பவரும் அறிவுமயங்குதலால் நஞ்சு உண்பவரே ஆவர்’ என்று உலக பொதுமறையாம் திருக்குறளில் திருவள்ளுவர் குறிப்பிட்டுள்ளார்.
Dr. அ.வேணி MD., DM (NEURO)
மூளை நரம்பியல் நிபுணர்.
குடிப்பழக்கம் நம்மை மட்டுமல்ல நம் குடும்பத்தையும், நம் நாட்டையும் அழிக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. குடிப்பழக்கத்தினால் பக்கவாத நோய் வந்து அழிந்த பல குடும்பங்களின் நிலைமைகள் நம்மை கண்கலங்கச் செய்கின்றன. எனக்குத் தெரிந்த ஒரு குடும்பத்தைப் பற்றி உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
மது மற்றும் புகைப்பழக்கம் கொண்ட 45 வயதுடைய ஒரு நோயாளி சென்ற வருடம் என்னிடம் சிகிச்சைக்காக வந்தார். அவருக்கு இடது பக்க மூளையில் இரத்த குழாய் அடைத்திருந்தது. அதனால், அவருடைய வலது பக்க கை, கால் செயலிழந்து பார்வை இழப்பு ஏற்பட்டிருந்தது. அவருக்கு சிகிச்சை அளித்ததில் கை, கால் சரியாகிவிட்டது. பார்வை மட்டும் சரியாகவில்லை. அவரிடம் வாழ்நாள் முழுவதும் மாத்திரைகள் எடுக்க வேண்டும் என்றும், புகை மற்றும் மதுப்பழக்கத்தை விட்டுவிட வேண்டும் என்றும் அறிவுறுத்தி அனுப்பி வைத்தேன். 6 மாதம் சரியாக இருந்தவர் பிறகு இரண்டு பழக்கத்தையும் திரும்ப ஆரம்பித்திருக்கிறார். கடந்த மாதம் மறுபடியும் கை, கால்கள் செயலிழந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மீண்டும் அறிவுரை கூறி மருந்துகள் கொடுத்து வீட்டிற்கு அனுப்பினேன். இருந்தும் அவர் புகை மற்றும் மதுப்பழக்கத்தின் மீது இருந்த நாட்டத்தை விடவே இல்லை. இந்த நிலையில், கடந்த 27.12.17 அன்று அந்த நோயாளிக்கு திடீரென வயிற்றுப் போக்கு ஏற்பட்டு மூளையில் உள்ள இரத்தக் குழாய்கள் அடைபட்டு இறந்து போனார்.
இப்படி இன்னும் பலர் தங்களுடைய தவறான பழக்கங்களினால் பாதிக்கப்படுகின்றனர். இந்த பாதிப்பு அவர்களுக்கு மட்டுமல்ல, அவர்களுடைய குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு நபரின் மகிழ்ச்சியையும் பாதிக்கிறது என்பதனை யோசிக்க அவர்களின் மனம் ஏனோ மறுக்கிறது. நாள் முழுவதும் கடுமையாக வேலை செய்துவிட்டு கிடைக்கும் பணத்தை, தன் குடும்பத்தின் ஆரோக்கியத்திற்காக செலவிடாமல் மதுவிற்கு அடிமையாகி அழிந்த குடும்பங்கள் நம் நாட்டில் பல. மதுவில் உள்ள ஆல்கஹால் உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்பையும் பாதிக்க வல்லது, குறிப்பாக கணையம், கல்லீரல், மூளை, நரம்பு மண்டலம் ஆகிய அனைத்தையும் பாதிக்கிறது.
இரத்தத்தில் உள்ள ஆல்கஹாலின் அளவைப் பொறுத்து நோயாளிக்கு ஏற்படும் அறிகுறிகள் மாறுபடுகிறது. எங்களது மருத்துவத்தில் ஒரு நாளைக்கு ஆல்கஹால் எடுத்துக் கொள்ளும் அளவு 12 கிராமிற்கு குறைவாக இருந்தால் உடலுக்கு நன்மை என்றும், ஒரு வாரத்தில் 200 கிராமிற்கு அதிகமாகும் போது மிகவும் மோசமான விளைவை ஏற்படுத்தும் என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது அயல் நாட்டு கண்டுபிடிப்பு, அவை நம் நாட்டிற்கு சரிவராது.
இந்த ஆல்கஹாலானது, உடலில் உள்ள கொழுப்பின் அளவை அதிகரித்து இரத்தக் குழாய்களில் படியவைத்து, இரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரித்து, இரத்த அழுத்தத்தை அதிகரித்து, மாரடைப்பு மற்றும் பக்கவாதத்தை ஏற்படுத்துகிறது. அதுமட்டுமில்லாமல், மூளையை தனக்கு அடிமையாக்கி அந்த நபரை ஒரு பைத்தியம் போல் ஆக்கிவிடுகிறது. மேலும், மூளையின் திட்டமிடும் திறனைக் குறைத்து கை, கால்களில் நடுக்கத்தை ஏற்படுத்துகிறது. வலிப்பு வருவதற்கும் மூளை தன் செயலை இழந்து நிற்கவும் செய்துவிடுகிறது.