பள்ளி வளாகத்தில் 10ம் வகுப்பு மாணவன் அடித்து கொலை..! 3 பேர் மாணவர்கள் கைது ! 3 ஆசிரியர்கள் மீது வழக்கு
திருச்சி அருகே அரசு மேல்நிலைப் பள்ளியில் சக மாணவர்கள் தாக்கியதில் 10-ம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் முசிறி அருகே தொட்டியம் பால சமுத்திரம் பகுதியில் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது.. இந்தப் பள்ளியில் தோளூர் பட்டியைச் சேர்ந்த கொத்தனார் வேலை செய்து வரும் கோபி என்பவரின் மகன் மௌலீஸ்வரன் 10-ம் வகுப்பு படித்து வந்துள்ளார்.
![பாலசமுத்திரம் அரசுப் பள்ளி](https://angusam.com/wp-content/uploads/2023/03/ofklfkf.jpg)
இந்த நிலையில் பள்ளி வளாகத்தில் மரத்தடியில் அமர்ந்து மாணவர்கள் படித்துள்ளனர். அப்போது சக மாணவர்கள் சிறு சிறு கற்களை தூக்கிப்போட்டு விளையாடியதாக தெரிகிறது. இதில் சில மாணவர்கள் மௌலீஸ்வரன் தான் கற்களை தூக்கி வீசியதாக தவறாக எண்ணி மாணவன் மௌலீஸ்வரனை 3 மாணவர்கள் சேர்ந்து தாக்கியதாக கூறப்படுகிறது. அடிப்பட்ட மாணவன் பின்னந்தலையில் பலமாக அடிப்பட்டு மயங்கி விழுந்து உள்ளான்.
![மௌலீஸ்வரன்](https://angusam.com/wp-content/uploads/2023/03/awtwtwt.jpg)
இதில் படுகாயம் அடைந்த மௌலீஸ்வரனை பள்ளி ஆசிரியர்கள் ஆம்புலன்ஸ் உதவியுடன் தொட்டியம் அரசு மருத்துவமனைக்கு முதலுதவி சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு மாணவன் மௌலீஸ்வரன் கொண்டு செல்லப்பட்டார்.
மாணவனை பரிசோதித்த மருத்துவர்கள் மாணவன் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த மௌலீஸ்வரனின் பெற்றோர்கள், உறவினர்கள் பள்ளி வளாகத்தை முற்றுகையிட்டு மாணவனின் இறப்புக்கு நியாயம் கேட்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
![மௌலீஸ்வரன்](https://angusam.com/wp-content/uploads/2023/03/WhatsApp-Image-2023-03-11-at-9.08.46-AM.jpeg)
இதனால் திருச்சி – நாமக்கல் சாலையில் போக்குவரத்து பாதித்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த முசிறி போலீஸ் டிஎஸ்பி யாஸ்மின் மூன்று மாணவர்களை தனியாக அழைத்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளார். இச்சம்பவம் காரணமாக பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பள்ளி வளாகம் முன் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவுகிறது. இந்த வழக்கில் அவனுடன் படித்த 3 மாணவர்கள் கைது செய்யப்பட்டு, கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டனர்.
இந்த சூழலில் பணியின்போது கவனக் குறைவாக இருந்ததாக பள்ளியின் தலைமையாசிரியர் ஈஸ்வரி, வகுப்பாசிரியர் ராஜேந்திரன், கணித ஆசிரியர் வனிதா ஆகியோர் இக்கொலை வழக்கின் குற்றவாளிகள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.